எச்.நெல்லையா
எச்.நெல்லையா - இலங்கைத்தமிழ் இதழாளர், நாவலாசிரியர்.1930 முதல் 1936 வரையிலான காலகட்டத்தில் இலங்கை நாளிதழான வீரகேசரியின் ஆசிரியப்பொறுப்பில் இருந்தார்.
வீரகேசரி
எச்.நெல்லையா திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்று சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள். எச்.நெல்லையா 1930ல் வீரகேசரி தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியராக பொறுப்பேற்றார். 1936 ல் அவருக்குப்பின் தமிழகத்து எழுத்தாளர் வ.ராமசாமி ஐயங்கார் வீரகேசரியின் ஆசிரியரானார். எச்.நெல்லையா வீரகேசரி ஆசிரியாக ஆவதற்கு முன் வட்டிக்கடை நடத்திவந்தார், அவருக்கு இதழியல் அனுபவம் இல்லை என சிட்டி சிவபாதசுந்தரம் கூறுகிறார். (தமிழ்நாவல் பக்145) ஆனால் மலையகச் சிறுகதை வரலாறு (பக் 25) நூலில் தெளிவத்தை ஜோசப் அவர் வீரகேசரியில் பணிபுரிவதற்கு முன்பு 1927ல் நடேசய்யரின் தேசபக்தனில் பணிபுரிந்தார் என்று குறிப்பிடுகிறார்
நாவல்கள்
எச்.நெல்லையா வீரகேசரியில் செய்திகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதோடு நாள்தோறும் இரண்டு காலம் அளவுக்கு நாவல்களும் எழுதினார் என்றும் அவை அன்று மிக விரும்பி படிக்கப்பட்டு வீரகேசரியின் வெற்றிக்கு உதவின என்றும் சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள். சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி இவருடைய முக்கியமான நாவல். இவருடைய நாவல்கள் பொதுவாசிப்புக்குரிய பரபரப்பு மர்மம் ஆகியவை கொண்டவை என சிட்டி சிவபாதசுந்தரம் கூறுகிறார். தெளிவத்தை ஜோசப்ன்’சோமாவதி அல்லது இலங்கை இந்தியா நட்பு’ என்னும் நாவல் அரசியல் சார்புடையது, யதார்த்தத் தன்மை கொண்டது என்கிறார்.
படைப்புகள்
- இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி - 1930 (1938)
- சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி -1933 (1934)
- நளினசிங்காரி அல்லது தோழனின் துறவு 1936
- மங்கையர்க்கரசி அல்லது டாக்டர் கணேசின் மர்மம் 1937
- ராணி ராஜேஸ்வரி அல்லது யுத்தத்தை வெறுத்த யுவதி 1938
- பத்மாவதி அல்லது காதலின் சாதனை 1939
- சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு - 1939
- காந்தாமணி அல்லது தீண்டமைக்கு சாவுமணி - 1940
- பிரதாபன் அல்லது மகாராஷ்டிர நாட்டு மங்கை 1941
உசாத்துணை
- மலையகச் சிறுகதை வரலாறு- தெளிவத்தை ஜோசப்
- தமிழ் நாவல் சிட்டி சிவபாதசுந்தரம்
- ஈழத்துப் புதின இலக்கியம்
- வீரகேசரி நாவல்கள் சின்னையா மௌனகுரு