வ. குமாரசுவாமிப் புலவர்
வ. குமாரசுவாமிப் புலவர் (இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர். நன்னுாற் காண்டிகையுரை விளக்கம் என்ற இலக்கண நூலை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
வ. குமாரசுவாமிப் புலவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புலோலியூரில் வல்லி புரநாத பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். கோவிந்தபிள்ளை என்றும் அழைப்பர். இளமையில் தமது தங்கை பார்வதியோடு உடுப்பிட்டி சிவசம்புப் புலவரவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இளமைக்காலத்தில் பஞ்ச இலக்கணங்களை சிவசம்புப் புலவரிடத்திலும், பொன்னம்பலப் பிள்ளையிடமும் பயின்றார். பேசும்போதும் இலக்கணத்தோடு பேசியதால் "இலக்கணக் கொத்தர்" என்று அழைப்பர். வ. குமாரசுவாமிப் புலவரின் தமையன் வ. கணபதிப்பிள்ளையிடம் சமஸ்கிருதம் கற்றார். இலக்கணத்தில் மட்டுமன்றி தருக்க நூலிலும் இவருக்கு புலமை இருந்தது. யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையிலுள்ள இந்துக் கல்லூரியில் சில ஆண்டுகள் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். இவருடைய இளைய புதல்வரான டாக்டர் சிவப்பிரகாசம் அவர்கள் உளநூல் ஆராய்ச்சியில் புலமை படைத்தவர். திருநெல்வேலிப் பரமேசுவர பண்டித ஆசிரிய கலாசாலையின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
வ. குமாரசுவாமிப் புலவர் "நன்னுாற் காண்டிகையுரை விளக்கம்” என்ற இலக்கண நூலை எழுதினார். தமிழ் இலக்கியங்களுள் வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய வில்லிபாரதம் நூலில் "குதுபோர்ச்சருக்கம்" முதலான சில சருக்கங்களுக்கு உரை எழுதினார்.
மறைவு
வ. குமாரசுவாமிப் புலவர் 1925-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- நன்னுாற் காண்டிகையுரை விளக்கம்
உசாத்துணை
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.