being created

மங்கையர் மலர்

From Tamil Wiki
மங்கையர் மலர்

மங்கையர் மலர் (பிப்ரவரி, 1981) பெண்களுக்கான தமிழ் மாத இதழாக ஆரம்பித்து இணைய இதழாக வெளிவருகிறது. கல்கி குழுமத்தில் இருந்து இந்த இதழ் வெளிவருகிறது. பெண்களுக்கான கதை கட்டுரைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வெளியிடுகிறது.

வெளியீடு

மங்கையர் மலர் இதழ் கல்கி குழுமத்தில் இருந்து 1981 முதல் மாத இதழாக வெளிவந்தது. பரதன் பப்ளிகேஷன்ஸ் நிறுவன வெளியீடு (Bharathan Publications in Chennai, Tamilnadu)

வரலாறு

1981-ல் கல்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், கல்கி இதழின் ஆசிரியராகவும் இருந்த 'கல்கி' ராஜேந்திரன் சிறிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த மங்கையர் மலரை எடுத்து நடத்த முடிவு செய்தார். இருபத்து நான்கரை ஆண்டுகள் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மங்கையர் மலரை நடத்தினார் மஞ்சுளா ரமேஷ். அப்போது கல்கி குழும இயக்குநராக முரளியும், விற்பனை மேலாளராக சந்திரமௌலியும் இருந்தார். மஞ்சுளா ரமேஷ்க்குப் பிறகு ரேவதி சங்கரன் ஒரு வருட காலம் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதன்பின் பத்தாண்டுகளுக்கும் மேலாக கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பேத்தியும், கல்கி ராஜேந்திரனின் இரண்டாவது மகளுமான லக்ஷ்மி நடராஜன் மங்கையர் மலரின் ஆசிரியராக இருந்து வருகிறார்.

மங்கையர் மலர் பிப்ரவரி, 2013 முதல் புதிய வடிவமாற்றத்துடன் வெளிவந்தது. செப்டெம்பர், 2013 முதல் 'மாதம் இருமுறை' இதழாக வந்தது. 2015 முதல் எஸ். மீனாட்சி பொறுப்பாசிரியராக இருந்தார். செப்டெம்பர் 2021 முதல் www.kalkionline.com இணையதளத்தில் கல்கி குழுமம் வெளியிடும் மின்னிதழாக ஆனது.

உள்ளடக்கம்

மங்கையர் மலரில் சமூகநலம், பொருளாதாரம், சமயம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமையல், மகளிர் வாழ்வியல், மகளிர் சிறப்பு, மாதர் தம் அடிப்படைப் பிரச்சினைகள், மகளிர்க்கான பொழுதுபோக்கு, மகளிர்க்கான ஆலோசனை, அழகுக்குறிப்பு, புடவை, நகை, இசை, நாடகம், நாட்டியம், கைத்தொழில் போன்ற பல்வேறு பொருள்களின் அடிப்படையில் மகளிருக்குப் பயன்படும் பல கட்டுரைத் தலைப்புகளை உள்ளடக்கியது.

கட்டுரைகள்

மகளிருக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், சமுதாயத்தில் பெண்கள் முன்னேறுவதற்கரிய கருத்துகள், தன் வாழ்வில் அவ்வாறு முன்னேறியவர்களின் பட்டறிவையும் பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்கள், மகளிருக்குப் பயன்படும் மருத்துவக் குறிப்புகள் ஆகிய கட்டுரைகள் வெளிவந்தன. சமூக நலம், பொருளாதாரம், கலை, விளையாட்டு, சமயக் கட்டுரைகள் ஆகியவை வெளிவந்தன.

இலவச இணைப்பு

நவராத்திரி, பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு என விழாக் காலங்களிலும், திருமண ஸ்பெஷல், சுற்றுலா ஸ்பெஷல் என மங்கையர் மலருடன் இலவச இணைப்பு வழங்கப்பட்டது. இவை கட்டுரை, துணுக்கு, சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு, பெண் கல்வி, சிறுகதை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு மூல நூல் அமைப்பிலேயே வெளிவந்தன

இலக்கிய இடம்

”மகளிரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தல், பொதுப் பணியில் ஈடுபட வைக்கத் துணைநிற்றல், மகளிர் பலரைப் படைப்பாளராக்கி ஊக்கம் தருதல், பல்வேறு படைப்பாக்கங்களில் மகளிரைப் பங்கு கொள்ளச்செய்தல், பிரச்சினைகளை எதிர்த்து ஆக்கபூர்வமாகச் செயல்படுதல் போன்ற பணிகளை இதழில் முன்னிருத்தியது” என முனைவர் சா. கீதா குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.