சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்
சக்ரவர்த்தி ராஜகோபாலாசாரியார் (ராஜகோபாலன்; ராஜாஜி; ராஜகோபாலாசாரியார்; சி.ஆர்; மூதறிஞர் ராஜாஜி. இராஜாஜி) (டிசம்பர் 10, 1878-டிசம்பர் 25, 1972) வழக்குரைஞர். சுதந்திரப் போராட்ட வீரர். சமூக சீர்த்திருத்தவாதி, அரசியல் கட்சித் தலைவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். சென்னை மாகாண முதல்வர்; மேற்கு வங்க ஆளுநர் எனப் பல பொறுப்புகள் வகித்தார். பாரத ரத்னா விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாசாரியார், ஓசுர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில், சக்கரவர்த்தி ஐயங்கார்-சிங்காரம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 10, 1878-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். தந்தை கிராம முன்சீஃப் ஆகப் பணியாற்றினார். ஆரம்பக் கல்வியை திண்ணைப் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை ஓசூரிலும், மேல்நிலைக் கல்வியை பெங்களூர் லண்டன் மிஷன் பள்ளியிலும் கற்றார். பெங்களூரில் உள்ள மத்திய இந்துக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். பின் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துத் தேர்ந்தார்.
தனி வாழ்க்கை
சட்டம் பயின்ற ராஜாஜி, சேலத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார். நுணுக்கமாகப் பல வழக்குகளில் வாதாடி நற்பெயர் பெற்றார். அலர்மேலு மங்கையை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண்பிள்ளைகள். ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். இவரது ஒரே மகன் சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர்.
சமூக வாழ்க்கை
சேலத்தில் மூத்த வழக்குரைஞர் சேலம் விஜயராகவாசாரியாரின் நட்பைப் பெற்றார். அவர் மூலம் அரசியலறிவு பெற்றார். சமூக சேவைகள் பலவற்றில் பங்கெடுத்தார். சேலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மது ஒழிப்பு போன்றவற்றில் மிகுந்த அக்கறை செலுத்தினார். தெருக்கள் தோறும் குழாய் மூலம் தண்ணீர் விநியோக ஏற்பாட்டை முன் நின்று செய்து மக்களிடம் நற்பெயர் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
மூத்த வழக்குரைஞர் சேலம் விஜயராகவாச்சாரியால் அரசியல் நோக்கி ஈர்க்கப்பட்டார் ராஜாஜி. அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தில் பங்குகொண்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியின் வேண்டுகோளை ஏற்று பலர் தமது தொழிலை, வேலையை உதறி விட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜாஜியும் தனது வழக்குரைஞர் தொழிலில் இருந்து விலகி தேச சேவையில் ஈடுபட்டார்.
காந்தியினுடனான ராஜாஜியின் சந்திப்பு அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. காந்திக்கு மிக நெருக்கமானவர் ஆனார். காந்தியின் மனசாட்சி என்று காந்தியடிகளாலேயே போற்றப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலட் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் கலந்துகொண்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தி ஆச்ரமம்
காந்தியின் மீது கொண்ட பற்றால் திருச்செங்கோட்டில் காந்தி ஆச்ரமத்தை நிறுவினார். மனைவியுடன் ஒரு குடிசையில் தங்கிக் கொண்டு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டார்.
உப்பு சத்தியாக்கிரகம்
1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி, வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்திற்குத் தலைமை வகித்தார். தொண்டர்கள் பலருடன் ராஜாஜி கைதானார். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் தனது அரசியல் சமூகப் பணிகளைத் தொடர்ந்தார்.
காந்தியுடன் முரண்பாடு
ஆகஸ்ட் 1942-ல், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காந்தி தொடங்கியபோது ராஜாஜி அதனை ஆதரிக்கவில்லை.
முதலமைச்சர்
1937ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் முதன் மந்திரியாக பொறுப்பேற்றார். 1940 வரை பதவி வகித்தார். இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தை அறிவித்தார். அதனால் பல எதிர்ப்புகளை, போராட்டங்களைச் சந்தித்தார்.
சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது, மாணவர்கள் பள்ளிக் கல்வியோடு தந்தை அல்லது குடும்பத் தொழில்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். பள்ளிக் கல்வி நேரம் நாளொன்று மூன்று மணி நேரமாகவும், மீதி நேரத்தில் அவர்கள் குலத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. இக்கல்வித் திட்டம் ‘குலக்கல்வித் திட்டம்’ என்று தி.மு.க. போன்ற கட்சிகளால் பெயர் சூட்டப்பட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.
தனது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளை நிறுவினார்.
பொறுப்புகள்
1937-ல், சென்னை ராஜதானியின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
1946 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகப் பணிபுரிந்தார்.
1948 முதல் 1950 வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பு வகித்தார்.
1951 முதல் 1952 வரை மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
சுதந்திரா கட்சி
காங்கிரஸ் மீது கொண்ட கருத்து மாறுபாட்டால் அதிலிருந்து விலகி, 1959-ல், சுதந்திரா கட்சியை நிறுவினார் ராஜாஜி. அதன் மூலம் தனது அரசியல் பணிகளைத் தொடர்ந்தார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. சில வருடங்களுக்குப் பின் அக்கட்சியைக் கலைத்துவிட்டு, தீவிர அரசியலிலிருந்து விலகினார். இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார்.
இதழியல் வாழ்க்கை
மதுவிலக்குப் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் ‘விமோசனம்’ என்ற இதழைத் தொடங்கினார். கல்கி அதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
காந்திஜியின் ’யங் இந்தியா’ இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார்
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.