சுமங்கலி
சுமங்கலி (1984-1995) பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளியான இருமாத இதழ். பராசக்தி சுமங்கலி இதழின் ஆசிரியர்.
பதிப்பு, வெளியீடு
சுமங்கலி இதழ் ஏப்ரல் 1984இல் தொடங்கப்பட்ட பெண்களுக்கான இதழ். பராசக்தி சுமங்கலி இதழின் ஆசிரியர். இணை ஆசிரியர் சாரதி. வெளியீட்டாளர் முரசொலி மாறன்.
நோக்கம்
சுமங்கலி, வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளை மகளிர்க்கு உணர்த்தவேண்டும் என்னும் அடிப்படையைக் குறிக்கோளாகக் கொண்டது. சுமங்கலி பெண்கள் முன்னேற்றத்தையே தன் நோக்கமாகக் கொண்டது. பெண்கள் விழிப்புணர்ச்சி பெறவேண்டும், பெண்களின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும், இல்லற வாழ்விற்குத் தக்கக் கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்ற சிந்தனையோடு படைப்புகள் வெளிவந்தன.
உள்ளடக்கம்
ஒவ்வோர் இதழிலும் கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், செய்திகள், துணுக்குகள், பிறர்கருத்துகள், சட்ட அறிவுரைகள், மருத்துவர் பதில்கள், மருத்துவ அறிவுரைகள், சமையற்கலை, சந்தா விவரம், விளம்பரங்கள் முதலியன இடம் பெற்றன. சில இதழ்களில் விமர்சனங்கள், பரிசுத்திட்டங்கள், மாதர் சங்கப் பகுதிகள் முதலியனவும் இடம் பெற்றன. அத்துடன் கலந்துரையாடல், உண்மைக் கதைகள், உலக நடப்புகள், சுமங்கலி கிளப், சுமங்கலி உறுப்பினர்கள், அழகுக்கலை , பேட்டி, கோலப்பகுதி, புகழ் பெற்ற பெண்கள் தொடர்பான கட்டுரைகள், கவிதைக் கொத்து, போன்ற பகுதிகளும் இடம்பெற்றன. பெண்களுக்கு ஆதரவான பிறமொழி இதழ்கள், பிற இதழ்கள், இவற்றிலிருந்து வெளியான செய்திகள், உலக நடப்புகள், பேட்டிகள் ஆகியனவும் சுமங்கலியில் இடம் பெற்றன.
கவிதைகள்
கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதை வடிவத்திலேயே அமைந்துள்ளன. திருமண உறவு, காதல், வரதட்சணை போன்றவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு கவிதைகள் வெளிவந்தன.
சிறுகதை
சிறுகதைகளில் மகளிர் நிலை பல்வேறு கோணங்களில் கற்பனை ஓவியங்களாக வரையப்பட்டன. குடும்ப உறவு நிலையை மையமாகக் கொண்டு அதிக அளவிலும் கல்லூரி, அலுவலகம் போன்ற இடங்களில் ஏற்படும் சிக்கல்களை மையமாகக் கொண்டு குறைந்த அளவிலும் சிறுகதைகள் புனையப்பட்டுள்ளன.
உண்மைக் கதைகள்
உண்மைக் கதைகள் என்னும் தலைப்பில் வெளியான கதைகள் யாவும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அப்படியே எழுதப்பட்டவை.
கட்டுரை
சுமங்கலியில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் பெண்களுக்காகவும் அவர்களின் நிறைகுறைகளைக் கூறும் போக்கிலும் வெளியிடப்பட்டன. பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் மகளிரைப் பேட்டி கண்டு அவர்களைப் பற்றி சிறப்புக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
ஓவியங்கள்
புனைகதைகளில் வெளிவந்த படங்களைத் ஓவியர்கள் ஜெயராஜ், மாயா, மாருதி, ராமு போன்றோர் வரைந்தனர். இப்படங்கள் அனைத்தும் வண்ணத்திலும், கருப்பு-வெள்ளையிலும் அமைந்தன.
டாக்டர் பதில்கள்
ஒவ்வோர் இதழிலும் டாக்டர் பதில்கள் என்னும் பகுதியில் வாசகர்களுக்கு அப்பல்லோ (Apollo) மருத்துவமனைப் பெண்கள் நலப்பிரிவின் மருத்துவராகப் பணியாற்றிய வசந்தி பதில் அளித்தார்.
துணுக்குகள்
சுமங்கலி இதழ் ஒவ்வொன்றிலும் உலக நடப்புகளைத் தெரிவிக்கும் வண்ணம் இரண்டு முதல் இருபது வரையிலான துணுக்குகள் இடம் பெற்றன.
விளம்பரங்கள்
சுமங்கலி இதழில் வெளியான விளம்பரங்கள் உடைகள், நகைகள், பெண்களின் அழகு சாதனப் பொருட்கள், வீட்டுக்குறிப்புகள், பெண்கல்வி, மருத்துவம், இதழ்கள் தொடர்பானவை,திரைப்படங்கள், சேமிப்பு ஆகியவை பற்றி அமைந்தன. விளம்பரங்களில் பெண்கள் பயன்படுத்தும் நகைகள் பற்றிய விளம்பரமே அதிக அளவில் அமைந்திருந்தது .
முடிவு
1995 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமங்கலி இதழ் வெளிவரவில்லை. வியாபார நோக்கில் பிற இதழ்களோடு நிற்க முடியாமல் பின்னோக்கித் தள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இலக்கிய இடம்
சுமங்கயில் வெளியான கட்டுரைகள் பெண்களை முதன்மைப்படுத்தி ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கின. இலவசச் சட்ட அறிவுரைப்பகுதி மகளிருக்குரிய பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பெரும் உதவி புரிந்தது. மணமுறிவு பற்றிய சிக்கல்களுக்கும் பல்வேறு தீர்வுகளைச் சுமங்கலி இதழ் தந்தது. நடைமுறை உலகில் மகளிர் வாழ்கின்ற நிலைகளைத் தெளிவாக விளக்கியது. மகளிர் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும், சிக்கல்களுக்கான தீர்வுகளையும் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படுத்தியது. பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களையும் வழங்கியது.
உசாத்துணை
• மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி