சுமங்கலி
சுமங்கலி (1984) பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளியாகும் இதழ். பராசக்தி சுமங்கலி இதழின் ஆசிரியர்.
வெளியீடு
சுமங்கலி இதழ் 1984இல் தொடங்கப்பட்டது. பராசக்தி சுமங்கலி இதழின் ஆசிரியர். பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளியான இதழ். சுமங்கலி தொடர்ந்து வெளிவராமல் நின்றது.
நோக்கம்
சுமங்கலி, வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளை மகளிர்க்கு உணர்த்தவேண்டும் என்னும் அடிப்படையைக் குறிக்கோளாகக் கொண்டது. சொல்லால் மட்டுமன்றிச் செயலாலும் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும் என விழைந்தது.
உள்ளடக்கம்
- மகளிர்க்குப் பயன்படும் இலவசச் சட்ட அறிவுரை, மருத்துவ அறிவுரை போன்ற பகுதிகள். சுமங்கலியில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் பெண்களுக்காகவும் அவர்களின் நிறைகுறைகளைக் கூறும் போக்கிலும் வெளியிடப்பட்டன.
- பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் மகளிரைப் பேட்டி கண்டு அவர்களைப் பற்றி சிறப்புக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
இலக்கிய இடம்
சுமங்கலியில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் பெண்களை முதன்மைப்படுத்தி ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கின. இலவசச் சட்ட அறிவுரைப்பகுதி மகளிருக்குரிய பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பெரும் உதவி புரிந்தது. மணமுறிவு பற்றிய சிக்கல்களுக்கும் பல்வேறு தீர்வுகளைச் சுமங்கலி இதழ் தந்தது.
உசாத்துணை
• மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி