under review

ம.க. வேற்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 16:15, 2 December 2022 by Tamizhkalai (talk | contribs)
ம.க.வேற்பிள்ளை

ம.க.வேற்பிள்ளை : ( ஜனவரி 8,1847 - 1930 ) ஈழத்து தமிழறிஞர். மரபுக் கவிஞர். பதிப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் திகழ்ந்தார்.

பிறப்பு, கல்வி

வேற்பிள்ளை யாழ்ப்பாணம், மட்டுவில் என்ற ஊரில் ஜனவரி 8,1847-ல் கணபதிப்பிள்ளை உடையார், புலோலியைச் சேர்ந்த உமாமகேசுவரி ஆகியோருக்கு பிறந்தவர். மட்டுவில் சண்முகம்பிள்ளை, நல்லூர் கார்த்திகேயப் புலவர், ஆறுமுக நாவலர் ஆகியோரிடம் கல்வி கற்றவர். நாவலரின் மருமகன் வித்துவ சிரோமணி பொன்னம்பலம் பிள்ளையிடமும் தமிழ் கற்றார். சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார்.

தனிவாழ்க்கை

ம.க வேற்பிள்ளை சைவப்பெரியார் சிவபாத சுந்தரத்தின் குடும்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரியை மணந்தார். ம.க.வேற்பிள்ளை, மகேஸ்வரி இணையருக்கு திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், மகாலிங்க சிவம், கந்தசாமி, நடராசா என ஐந்து ஆண் பிள்ளைகள். ம.வே. மகாலிங்கசிவம் புகழ்பெற்ற தமிழறிஞர். இன்னொரு மகன் திருஞானசம்பந்தர் மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர். பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை என்னும் பெயரால் ஈழத்துத் தமிழ் உலகில் அறியப்படுபவர்.

யாழ்ப்பாணத்தில் கல்விநிலையம் ஒன்றை நடத்திவந்த ம.க.வேற்பிள்ளை சென்னையிலும் சிதம்பரத்திலும் செயல்பட்ட நாவலர் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கியப்பணி

ம.க.வேற்பிள்ளை ஈழமண்டல சதகம், புலோலி வயிரவக்கடவுள் தோத்திரம், புலோலி பர்வதபத்தினியம்மை தோத்திரம், ஆருயிர்க் கண்மணிமாலை என்னும் செய்யுள் இலக்கியங்களை இயற்றி யவர். ஈழமண்டல சதகம் 1923 ஆம் ஆண்டு தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டது. அப்போது சிதம்பரம் வையாகரணிகர் முத்தையபட்டாரகர் முதலிய அறிஞர்களால் ம.க.வேற் பிள்ளைக்குப் 'பிள்ளைப் புலவர்” என்னும் பட்டம் அளிக்கப்பட்டது.

சிறந்த உரையாசிரியராகவும் விளங்கிய ம.க.வேற்பிள்ளை திருவாதவூரடிகள் புராணம், புலியூரந்தாதி, அபிராமியந்தாதி, கெவுளி நூல்என்பவற்றுக்கு உரை எழுதியுள்ளார். திருவாதவூரடிகள் புராண உரைச் சிறப்புக் காரணமாக நாவலரின் மருகரான வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையால் "உரையாசிரியர்" என்னும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.

கல்விப்பணி

மட்டுவில் நகரில் இன்று சந்திரமௌலீச வித்யாசாலை என அழைக்கப்படும் கல்விநிறுவனம் ம.க.வேற்பிள்ளையால் தொடங்கப்பட்டது.

இலக்கிய இடம்

ம.க.வேற்பிள்ளை ஆறுமுக நாவலரால் ஈழத்தில் உருவான இலக்கியமீட்பு, சைவ மறுமலர்ச்சி அலையில் உருவான அறிஞர்களில் ஒருவர். அவருடைய மைந்தர் ம.வே. மகாலிங்க சிவம், அவருடைய பேரர் புலவர் பார்வதிநாத சிவம் என அவருடைய மரபு தொடர்கிறது.

நூல்கள்

  • சந்திரமெளலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகம்
  • ஆருயிர்க் கண்மணி மாலை
  • புலோலி வைரவக் கடவுள் தோத்திரம்
உரைகள்
  • திருவாதவூரடிகள் புராண விருத்தியுரை
  • புலியூரந்தாதி
  • அபிராமி அந்தாதி
  • கெவுளிநூல் விளக்கவுரை
பதிப்பித்த நூல்கள்
  • வேதாரணிய புராணம்
  • சிவகாமியம்மை சதகம்

உசாத்துணை



✅Finalised Page