ஏ.டபிள்யூ.பிரப்

From Tamil Wiki
அந்தோனி பிரப்

ஏ.டபிள்யூ பிரப் (Anthony Watson Brough ) (1861- 1936) ஈரோட்டில் மதப்பணியும் கல்விப்பணியும் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த லண்டன் மிஷன் சபை போதகர்

பிறப்பு, கல்வி

அந்தோணி வாட்ஸன் பிரப் 1861ல் ஆஸ்திரேலியாவில் எஸ்ஸெக்ஸ் வட்டாரத்தில் லிட்டன்ஸ்டோன் ஊரில் அந்தோனி பிரப் - எம்மா லா இணையருக்கு பிறந்தார்

தனிவாழ்க்கை

அந்தோணி பிரப் ஆஸ்திரேலியா சிட்னியைச் சேர்ந்த ரோஸெட்டா ஜேன் ஜோலி (Rosetta Jane Jolly) மணாந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். எம்மா மேரி பிரப், சார்ல்ஸ் அந்தோணி பிரப் ,ஹெர்பெர்ட் அந்தோணி பிரப் (ஹெர்பர்ட் முதல் உலகப்போரில் பிரான்ஸில் மறைந்தார்)

அந்தோனி பிரப் நாட்டிய அடிக்கல்

பொதுவாழ்க்கை

அந்தோனி பிரப் குடும்பம்
ரோஸெட்டா

1894ல் இந்தியா வந்த முதலில் கோவையிலும் பின்னர் 1897 முதல் 1933 வரை ஈரோட்டிலும் லண்டன் மிஷன் சபையில் போதகராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். இவர் போதகர் எச்.ஏ.பாப்லியுடன் இணைந்து 94 பள்ளிகளை ஈரோடு வட்டாரத்தில் தொடங்கினார். ஈரோடு நகரபரிபாலன சபை தலைவராக 1904ல் பணியாற்றினார்.

1909ல் ஈரோட்டில் பிளேக் ரோய் பரவியபோது வேலூரில் இருந்து டாக்டர் மெகன்ஸ்டி ரீஸ் என்னும் பெண் மருத்துவரை அழைத்துவந்து மக்களுக்கு சிகிச்சை அளித்தார். மிஸ் ஹால்டா போலார்ட் என்னும் டாக்டர் தொடர்ந்து அங்கே மருத்துவப்பணி புரிந்தார். அதுவே ஈரோடு பிரப் சாலையில் அமைந்துள்ள கோஷ் சி.எஸ்.ஐ மருத்துவமனை.28-அக்டோபர்-1912 மருத்துவமனைக்கு ஆட்சியர் ஆர்.ஹெமிங்வே அடிக்கல் நாட்டினார்.1917ல் மருத்துவமனை முழுமை அடைந்தது.1937ல் மின்சார இணைப்பு வந்தது. 1923ல் மகப்பேறு பகுதி டபிள்யூ.டி.எம்.க்ளூஸ் ஆல் அமைக்கப்பட்டது 1933ல் செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டது

1927 முதல் 33 வரை பிரப் தேவாலயம் என இன்று அழைக்கப்படும் தேவாலயத்தை கட்டினார். பிரப்பின் மனைவி ரோஸெட்டா கட்டுமானப் பணி நடைபெறுகையில் மேலிருந்து விழுந்து மறைந்தார். அவருடைய கல்லறை சி.எஸ்.ஐ பிரப் நினைவாலய வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பிரப் முழுமையாக ஆலயத்தினை கட்டிமுடித்தாலும் மனைவியின் நினைவாக ஆலயதின் பிரசங்க மேடை (புல்பிட்) அவர் பெயர் பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது.ஈரோடு, கே.கே நகரில் அமைந்துள்ள ‘ரோஸ்ட்டா ஜேன் பிரப் நினைவாலயம் அவருக்காக அமைக்கப்பட்டது. பிரப் முதல் உலகப்போரில் மறைந்த தன் மகன் ஹெர்பர்ட் நினைவாக சென்னிமனையில் ஒரு மருத்துவமனையை அமைத்தார்.

கலை ஆர்வலரான பிரப் ஈரோட்டில் இருக்கையில் ஏராளமான கலைப்பொருட்களைச் சேகரித்தார். அவருடைய சேகரிப்புகளில் 33 பொருட்கள் 2000 த்தில் இந்திய அரசுக்கு வழங்கப்பட்டு திரும்ப கொண்டுவரப்பட்டன. அவை எழும்பூர் அருங்கலைக் காட்சியகத்தில் உள்ளன. பிரப் 1935ல் ஜெஸ்ஸி வின்ஃப்ரட் (Jessie Winifred Inglis )ஐ மணந்தார். டபிள்யூ.டி.எம்.க்ளூஸ் இவர் பணிகளை முன்னெடுத்தார்.

பிரப் கட்டிய தேவாலயம் ஈரோடு

மறைவு

பிரப் 1934ல் ஓய்வுபெற்றார். 1936 ஆஸ்திரேலியாவில் சாமர்செட் பகுதியில் நார்ட்டன் ஊரில் மறைந்தார். வெஸ்ட்பரியில் கான்ஃபோர்ட் இடுகாட்டில் (Canford Cemetery)அடக்கம் செய்யப்பட்டார்.

உசாத்துணை