under review

சிற். கைலாசபிள்ளை

From Tamil Wiki

சிற். கைலாசபிள்ளை (1857-1916) ஈழத்து தமிழ்ப்புலவர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர், பதிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிற். கைலாசபிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில், 1857-ல் திருச்சிற்றம்பலம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் நல்லூர்ச் சம்பந்தப் புலவரிடம் தமிழ் பயின்றார். யாழ்ப்பாணத்திலுள்ள அர்ச்.ஜோன்ஸ் கல்லூரியில் உயர்தர வகுப்பில் ஆங்கிலம் பயின்றார். அரசினர் எழுது வினைஞர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தென்னிந்தியாவிலுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.

பணி

அரசினர் கட்டட வேலைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினார். சில ஆண்டுகள் பணியாற்றியபின், உடல்நலக்குறைவால் அச்சேவையிலிருந்து விலகினார். மூன்று ஆண்டுகள் வரை தென்னிந்தியாவில் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வந்து, அரசாங்கத்தில் உயர்நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். யாழ்ப்பாணக் கச்சேரியிலும் மட்டக்களப்புக் கச்சேரியிலும் தலைமை முதலியாராகப் பணியாற்றினார். தேசாதிபதியின் தலைமைத் தமிழ் முதலியாராக சிறிது காலம் பணியாற்றினார். இசைக்கலையிலும் திறமை வாய்ந்தவர்.

ஆசிரியப்பணி

கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் சேர்.பொன் இராமநாதன் அவர்கள் இவரிடம் தாயுமான சுவாமிகள் பாடல் முதலான நூல்களைக் கற்றார். சேர்.பொன். அருணாசலம் இவரின் நண்பர். சேர்.பொன். அருணாசலத்திற்கு சங்க நூல்களையும் பிற இலக்கண இலக்கியங்களையும் முறையே கற்றார். இலங்கைத் தேசாதிபதி பிளேக்கு தலைமையில் கூடி சமஸ்கிருத ஸ்லோகங்களைப் படித்து அவற்றின் பொருளினை ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினார். கொழும்பு விவேகானந்த சபை உறுப்பினர் பலருக்குச் சித்தாந்த சாஸ்திரங்களையும் தேவார திருவாசகங்களையும் கற்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

சி.வை. தாமோதரம் பிள்ளை தமது பழந்தமிழ் நூலாராய்ச்சிப் பணிக்குத் துணைபுரிய சிற். கைலாசபிள்ளையை கேட்டுக்கொண்டார். சிறிது காலம் அவருடன் தங்கியிருந்து பணியாற்றினார். சென்னை முதலிய தென்னிந்திய நகரங்களில் வாழ்ந்த உ.வே. சாமிநாதையர் போன்ற பேரறிஞர்கள் இவருடன் நட்பு கொண்டிருந்தனர்.

புறநானூறு, பத்துப்பாட்டு, கல்லாடம், திருவாசகம், தாயுமான சுவாமிகள் பாடல் ஆகியவற்றில் சிறந்த செய்யுள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ள சேர்.பொன். அருணாசலம் அவர்களுக்கு துணைபுரிந்தார். அரசினர் கட்டளைச் சட்டங்களை முதன் முதலாக செவ்வியல் தமிழில் மொழிபெயர்த்தார். தனிச் செய்யுள்களும் பல இயற்றினார். "வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை" என்ற நூலினை இயற்றினார். யேசுமதசங்கற்பநிராகரணம் என்ற நூலைப் பதிப்பித்தார்.

விருது

  • திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர் இவருக்கு ’வித்துவான்’ என்ற பட்டமும் அளித்துப் பொன்னடை போர்த்தினார்.

நூல் பட்டியல்

  • வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை
பதிப்பித்தவை
  • யேசுமதசங்கற்பநிராகரணம்

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.