சுப்பு ஆறுமுகம்

From Tamil Wiki

சுப்பு ஆறுமுகம் (1928 – 10 அக்டோபர் 2022) தமிழக வில்லிசைக் கலைஞர். மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் எளிமையாக வில்லுப்பாட்டின் வழியே கதையாகச் சொல்லி வந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பு ஆறுமுகம் திருநெல்வேலி, சத்திரபுதுக்குளத்தில் சுப்பையாபிள்ளை, சுப்பம்மாள் இணையருக்கு 1928-ல் மகனாகப் பிறந்தார். இராம அய்யரிடம் ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றார். நவநீதகிருஷ்ணபிள்ளையிடம் உயர்பள்ளியில் தமிழ் கற்றார். தந்தையிடமிருந்து இசை பயின்றார்.

இவரை சென்னைக்கு அழைத்து வந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச்சொன்னார்.

கலை வாழ்க்கை

சுப்பையா பிள்ளை, நவநீத கிருஷ்ணன் பிள்ளை, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரிடம் வில்லுப்பாட்டை முறையாகப் பயின்றார். காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி அரங்கேற்றினார். ராமாயணம், மகாபாரதம், அரசியல்-சமூக பிரச்சனைகளையும் வில்லுப்பாட்டில் பாடினார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து ஆண்டுகளாக இல்லாத தமிழை ஒலிக்கச் செய்தார். சுப்பு ஆறுமுகம் தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். இலங்கையிலும், சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் செய்தார். ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்தனர்.

திரை வாழ்க்கை

கலைவாணரது பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேசின் அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதினார். இவர் எழுதிய சின்னஞ்சிறு உலகம் திரைப்படம் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் தயாரிக்கப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

சுப்பு ஆறுமுகம் 14வது வயதில் "குமரன் பாட்டு" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. வில்லுப்பாட்டை மையமாகக் கொண்டு பதினைந்து நூல்களை எழுதினார். 'மனிதர்கள் ஜாக்கிரதை' என்ற நாடகம் இவரால் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிட்டது. மனிதர்கள் ஜாக்கிரதை நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. 'காப்பு கட்டி சத்திரம்' என்ற வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு இருந்தது.

விருதுகள்

  • 2021-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
  • 2005-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது
  • 2004-ஆம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது

மறைவு

சுப்பு ஆறுமுகம் தனது 94வது வயதில் அக்டோபர் 10, 2022-ல் சென்னையில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • வில்லிசை மகாபாரதம்
  • வில்லிசை இராமாயணம்
  • நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்

உசாத்துணை