under review

ச. மாடசாமி

From Tamil Wiki
Revision as of 17:10, 4 May 2026 by Logamadevi (talk | contribs)
பேராசிரியர் ச. மாடசாமி

ச. மாடசாமி (பிறப்பு: 1947) எழுத்தாளர். இதழாளர். கல்வியாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அறிவொளி இயக்கச் செயற்பாட்டாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ச. மாடசாமி, 1947-ல், கொடைக்கானலில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் பிறந்தார். வடுகப்பட்டி அருகே உள்ள வாரிய உயர்நிலைப்பள்ளியில் படித்தார். விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மாடசாமி மணமானவர். மனைவி: லைலாதேவி. பிள்ளைகள்: மகன்: கார்த்தீபன், ரிஷிவந்தன்; மகள்: சங்கீதா.

கல்விப் பணிகள்

ச. மாடசாமி, அருப்புக்கோட்டைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மூட்டா (Madurai University Teachers Association) அமைப்பில் நிர்வாகியாகச் செயல்பட்டார். ஆசிரியர்கள் நலனுக்கான பல போராட்டங்களில் கலந்துகொண்டார். மாணவர்களைப் பல விதங்களில் ஊக்குவித்தார். மாணவர்களுடன் இணைந்தும் பல போராட்டங்களை முன்னெடுத்தார். 1990-ல் உருவான அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். புதிய முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்தார். தேசிய எழுத்தறிவுத் திட்டத்தின் தூதுவராகச் செயல்பட்டார். சமச்சீர்க் கல்விப் பாட நூல்களின் உருவாக்கத்தில் பங்களித்தார். 2004-ல் பணி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ச. மாடசாமி பள்ளியில் படிக்கும் போது வாசித்த மு.வ.வின் நூல்களால் ஈர்க்கப்பட்டார். இலட்சியவாத நோக்குடன் எழுதப்பட்ட நாவல்கள் மாடசாமியைக் கவர்ந்தன. தீபம், கணையாழி, ஞானரதம் போன்ற இதழ்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். 1970-ல் மதுரைப் பல்கலைக்கழக மாணவர் கருத்தரங்கில் 'கபிலர் பாடல்களில் மாந்தர் மனப் பண்பாடு' என்ற தலைப்பில் மாடசாமி வாசித்த கட்டுரையை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் பாராட்டி ஊக்குவித்தார். தமிழவனின் நட்பால் மார்க்சிய சித்தாந்தம் மீது ஈர்ப்புக் கொண்டார்.

மாடசாமி எழுதிய முதல் நூல், 'பாம்பாட்டி சித்தர்'. சித்தர் பாடல்களில் மாடசாமி மேற்கொண்ட ஆய்வின் வழியாக இந்நூலை எழுதினார். தொடர்ந்து, 'தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை', 'பொதுவுடைமை இலக்கியம் - பார்வையும் பயணமும்' எனப் பல நூல்களை எழுதினார். சிறார்களுக்காகச் சில நூல்களை எழுதினார். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பல நூல்களை எழுதினார். தன் பணி ஓய்வு வரை பழகிய எளிய கிராமத்து மாணவர்களிடம் பெற்ற அனுபவங்களை மையமாக வைத்து 'எனக்குரிய இடம் எங்கே' என்னும் நூலை எழுதினார். இந்நூல் மாடசாமியின் குறிப்பிடத்தகுந்த நூலாக அறியப்படுகிறது. அறிவொளி இயக்கம் சார்ந்த தனது புரிதல்களையும் அனுபவங்களையும் நூலாக எழுதினார்.

இதழியல்

  • பாரதி புத்தகாலயத்தின் புத்தகம் பேசுது இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
  • மூட்டா ஜர்னலின் மண்டல ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பொறுப்பு

  • மூட்டா அமைப்பின் நிர்வாகி
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறை இயக்குநர் (மூன்று ஆண்டுகள்)
  • அறிவொளி இயக்கச் செயற்பாட்டாளர்

மதிப்பீடு

ச. மாடசாமி, மனித உரிமைக் கல்வி, சமச்சீர் கல்வி, அறிவொளி இயக்கம், தொழிற்சிங்கம் எனப் பல தளங்களில் பணிபுரிந்தார். ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலன் காக்கும் போராட்டங்களை முன்னெடுத்தார். கல்வியாளர், இதழாளர், எழுத்தாளர், சிறார் படைப்பாளி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • வெளிச்சம் உறுதி
  • குழந்தைகளின் நூறு மொழிகள்
  • அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல
  • ஏமாளியும் திருடனும்
  • ஆசிரிய முகமூடி அகற்றி
  • எனக்குரிய இடம் எங்கே?
  • சுண்டெலிக் கதைகள்
  • முதலைக் கதைகள்
  • நாய் வால் சங்கிலிக் கதைகள்
  • முயல்குட்டியும் போலிசுகாரரும்
  • ஓசைக் கதைகள்
  • போயிட்டு வாங்க சார்
  • கடலும் கிழவனும்
  • வித்தியாசம்தான் அழகு
  • பாம்பாட்டி சித்தர்
  • தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை
  • தெரு விளக்கும் மரத்தடியும்
  • பொதுவுடைமை இலக்கியம் - பார்வையும் பயணமும்
  • ஆளுக்கொரு கிணறு
  • சொலவடைகளும் சொன்னவர்களும்
  • பள்ளிக்கல்வி (புத்தகம் பேசுது நேர்காணல்கள்)
  • நிறத்தைத் தாண்டிய நேசம்
  • என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா
  • பூமரப் பெண்

உசாத்துணை


✅Finalised Page