under review

கலைக்காவிரி

From Tamil Wiki
Revision as of 03:44, 27 March 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text; ; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கலைக்காவிரி கல்லூரி முகப்பு
கலைக்காவிரி கட்டிடம்
கலைக்காவிரி 2000 முதல் பட்டமளிப்பு விழா
ஜார்ஜ் அடிகள் (கலைக்காவிரி நிறுவனர்)

கலைக்காவிரி ஒரு நுண்கலைக் கல்லூரி. திருச்சியில் அமைந்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புப் பின்னணி கொண்டது. கலைப்பயிற்சி மையமாகத் தொடங்கப்பட்டு பின்னர் நுண்கலைக் கல்லூரியாக உருமாற்றப்பட்டது.

தொடக்கம்

கலைக்காவிரி திருச்சியில் அக்டோபர் 1, 1977ல் கத்தோலிக்க இறையியலாளர் மறைதிரு ஜார்ஜ் அடிகள் அவர்களால் ஒரு கலை மையமாகத் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் மேடை நாடகம், ஒலி நாடா தயாரிப்பு, ஒலி-ஒளி பதிவுக்கூடங்கள், கலைவிழாக்கள் என்று அதன் பணி இருந்தது. பிறகு நுண்கலைக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது.

வளர்ச்சி

கலைக்காவிரி அமைப்பு 1983-ல் பகுதிநேர நாட்டியப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. 1988-ல் முழுநேர நாட்டியப் பள்ளியாக வளர்ந்தது. 1990 முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தோடு பட்டயப்பயிற்சியும் 1993 முதல் முதுநிலை பட்டயப்பயிற்சியும் (Post Graduate Diploma) கலைக்காவிரி வழங்கிவருகிறது. 1992 முதல் 'ஏழிசை மணி' என்ற 'நான்கு ஆண்டுகள் முழுநேர இசைப்பயிற்சி' பள்ளியை பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரத்தோடு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1996-ல் கலைக்காவிரியை நுண்கலைக் கல்லூரியாகத் தரம் உயர்த்தி அறிவித்தார்.

அரசு உதவி

தமிழ்நாட்டு முதல்வர் மு. கருணாநிதி 2000-ம் ஆண்டில் கலைக்காவிரியை அரசு நிதி பெறும் கல்லூரியாக அறிவித்தார். அதன்பிறகு அங்கு படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையும் ஊக்கத் தொகையும் கிடைக்கிறது.

வகுப்புகள்

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பள்ளிநிறைவுப் படிப்பை முடித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முழுநேரப் படிப்பாக இசை-நடனம் இணைந்த பாடத்திட்டம் உள்ளது. அக்கல்வியை முடித்ததும் BFA (Bachelor of Fine Arts) பட்டம் வழங்கப்படுகிறது. இதே பட்டம் 10-ம் வகுப்பு முடித்து ஐந்து ஆண்டுகள் படிக்கும்போதும் வழங்கப்படுகிறது.

கலைக்காவிரியில் 1999 முதல் நாட்டியம் மற்றும் இசை இரண்டிலும் முதுகலைப் பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக பரத நாட்டியத்திற்கு இளங்கலை முதுகலை இரண்டிலும் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. முழு நேரப் படிப்பாக வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பாடங்களில் BA, MA, MPhil, Phd வரை கல்வி அளிக்கப்படுகிறது. 2000த்தில் முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

2013-ல் UGC சான்றிதழைப் பெற்றதோடு, தமிழ் நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாகவும் கலைக்காவேரி 2013 முதல் இயங்கத்தொடங்கியுள்ளது.

மாலைநேரப் பள்ளி

கலைக்காவிரியின் மாலை நேர கலைப்பள்ளி மாலை 5-6 மணி மற்றும் 6-7 மணி என இரண்டு வகுப்புகளாக நடக்கின்றது. 2000 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் பரதம், மோகினியாட்டம், கூச்சுப்புடி, கிராமிய நடனம் போன்ற நடனப்பயிற்சியும், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், தபேலா, ஹார்மோனியம், புல்லாங்குழல், கிடார், கீ போர்டு, டிரம்ஸ், மேடைப்பாடகர் பயிற்சி, ஓவியம் போன்ற பல கலைகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

தொலைதூரக் கல்வி

இசைக்கும் நடனத்திற்கும் தொலைதூரக் கல்வித்திட்டத்தை கலைக்காவேரி கல்லூரி நடத்திவருகிறது. உலகம் முழுவதும் 45 துணை மையங்களை உருவாக்கி இக்கல்வியை வழங்கிவருகிறார்கள்.

பிற பணிகள்

நடனக்குழு

கலைக்காவிரியின் 'நடனக்குழு' 1978 முதல் 2500 மேடை நடனங்களை நடத்தியுள்ளது தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்கள். பல வெளிநாடுகளாலும் இக்குழு விரும்பி அழைக்கப்படுகிறது. போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால், திபேத்திய புத்தமதத் தலைவர் ரீம்போச்சே, காஞ்சி சங்கராச்சாரியார், உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கிறிஸ்டியன் பெர்னார்டு போன்ற பலரின் பார்வையும் பாராட்டையும் பெற்ற குழு இது.

நிகழ்வுகள்

கலைக்காவிரி மாணவர்களுக்காக 'கிளாசிக் ஃபெஸ்ட்' என்னும் கலைவிழாவை நடத்துகிறது. இயல்-இசை-நாடக சாதனையாளர்களுக்கு எல்லா ஆண்டும் 10,000 ரூபாய் பணமுடிப்போடு கலைக்காவிரி விருது வழங்கப்படுகிறது.

பதிப்பகம்

கலைக்காவிரி பதிப்பகம் ஆய்வு நூல்களையும் வெளியிடுகிறது. புதுக் கவிதையில் கிறித்தவ நூலான பழைய ஏற்பாட்டை 'மீட்பின் காவியம்' என்ற பெயரில் வெளியிட்டது. கலைக்காவேரி அமைப்பின் சார்பில் தான் கண்ணதாசன் தன் புகழ்பெற்ற இயேசு காவியம் என்னும் நவீனக் காவியத்தை இயற்றினார்.

வெள்ளிவிழா

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி 2002-ம் ஆண்டில் தன் 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளிவிழாவை கொண்டாடியது. நுண்கலை மாளிகையும் திறந்தவெளிக் கலையரங்கமும் உள்ளரங்கமும் கட்டப்பட்டன.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2026, 17:20:04 IST