அந்தோனியார் காவியம்
அந்தோனியார் காவியம் கிறிஸ்தவ இலக்கிய நூல். மக்களின் பாதுகாவலான புனித அந்தோனியாரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதப்பட்டது.
பதிப்பு, வெளியீடு
அந்தோனியார் காவியம் 2013-ல் யாழ்ப்பாணத்திலுள்ள பாசெய்யூர் என்னுமிடத்திலுள்ள பதுவையர் கலா மன்றந்தால் வெளியிடப்பட்டது.
ஆசிரியர் குறிப்பு
அந்தோனியார் காவியத்தை இயற்றியவர் யாழ்ப்பாணத்திலுள்ள மு.அருள் பிரகாசம்.
நூல் அமைப்பு
நூலின் தொடக்கத்தில் காப்பு, தேவமாதா, அந்தோனியார். கலைவாணி, தமிழ், அவையடக்கம் என்னும் தலைப்புகளில் ஏழு செய்யுட்கள் உள்ளன. இதனைத் தொடர்ந்து
- நாட்டுப் படலம்
- போர்த்துக்கல் நாட்டுச் சிறப்பு
- லிஸ்பன் பட்டணச் சிறப்பு
- மழலைப் பருவம்
- பிள்ளைப் பருவம்
- பிசாசை விரட்டுதல்
- பிரான்சிஸ்கன் சபை
- மறையுரை
- தூரத்தில் கேட்ட மறையுரை
- வெட்டுண்ட கூந்தல் ஓட்டச் செய்தல்
- மச்ச மீனினங்களுக்கு மறையுரை ஆற்றல்
- அந்தோனியாரின் சேவைகள்
- துண்டான கால் ஒன்றாகுதல்
- நஞ்சிட்ட உணவு அமுதாகுதல்
- அந்தோனியாரின் தவம்
- கொல்லப்பட்ட சிறுவன் உயிர் பெற்று உண்மை உரைத்தல்
- அந்தோனியார் திருக்கரத்தில் குழந்தை இயேசு தவழ்ந்து விளையாடியது
- கடைசி நாட்கள்
- மரணத்தின் பின்
- வாழ்த்து
போன்ற 24 தலைப்புகளில் 200 செய்யுட்கள் 70 பக்கங்களில் அமைந்துள்ளன.
உள்ளடக்கம்
அந்தோனியார் காவியத்தில் நாட்டு வளம், பாட்டுடைத் தலைவன் புகழ் என்பன கூறப்பட்டு, புனித அந்தோனியாரின் மழலைப் பருவம் முதல், மகிமைப்படுத்தல் வரையிலான பல வாழ்க்கைக் கட்டங்கள் சந்தம் கொண்ட பாக்களால் சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்தோனியாரின் அற்புதங்கள் மட்டுமன்றி, அவரின் இரக்க உணர்வையும் தூய வாழ்வையும் பக்தியையும் அவர் செய்த தொண்டுகள் சேவையையும் உள்ளடக்கியதாக இக்காவியம் உள்ளது..
பாடல் நடை
லிஸ்பனின் சிறப்பு
'வில்லோடு வேலும் வாளும்
விளையாடும் வீர மாடம் கல்வி நற்கலைகள் சொல்லும்
கருதரு பயில் நல்கூடம்
இல்லறம் துறவறங்கள் இரு அறம் திகழ் நகரம்
இல்லாமை கல்லாமை
ஈங் கிலை எனும் நகரம்' (ப.11)
அந்தோணியார் தாலாட்டு
தொட்டிலிட்டு தாலாட்டத் தென் பொதிகைத்
தென்றல் வந்து சீராட்டத் தேனமுத கட்டிக் கரும்பே கற்கண்டுப் பாகே
கனிபிழிச் சாறே கண்ணே'(ப.15)
உசாத்துணை
- கிறிஸ்தவ இலக்கியம் நானூறு -யோ.ஞான சந்திர ஜான்சன்
- கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம், பொதுப்பதிப்பாசிரியர்: டாக்டர் ஜி. ஜான் சாமுவேல்; பதிப்பாசிரியர்கள்: டாக்டர் அருள்திரு. தி. தயானந்தன் பிரான்சிஸ், டாக்டர் யோ. ஞான சந்திர ஜாண்சன், ஆசியவியல் நிறுவனம், சென்னை. முதல் பதிப்பு: 2008
- அந்தோனியார் காவியம்- நூலகம்
- அந்தோனியார் காவியம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Feb-2026, 21:29:37 IST