சிரவை ஆதீனம்
கௌமார மடாலயம் என வழங்கப்படும் சிரவை ஆதீனம், 1908-ல் தோற்றுவிக்கப்பட்டது. இதனைத் தோற்றுவித்தவர் இராமானந்த அடிகளார்.
குரு மரபு
கௌமார மடாலயம் எனும் சிரவை ஆதீனத்தின் குரு மரபு முருகக் கடவுளிடமிருந்து தொடங்குகிறது. முருகப் பெருமான் முதல் குருநாதராகவும், அருணகிரிநாதர் இரண்டாம் குருநாதராகவும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மூன்றாவது குருநாதராகவும் கருதப்படுகின்றனர்.
தண்டபாணி சுவாமிகளிடம் உபதேசம் பெற்று 1908-ல் சிரவையாதீனத்தை நிறுவியவர் இராமானந்த சுவாமிகள். அவரிடமிருந்தே சிரவை ஆதீன உபதேசப் பரம்பரை தொடங்குகிறது.
குரு பரம்பரை
இராமானந்த சுவாமிகள் கோவையை அடுத்த சிரவணம்பட்டி என்னும் சிற்றூரில் 1857-ம் ஆண்டில், வேலப்பக் கவுண்டர் - ஆண்டாளம்மை இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் இராசுக்குட்டி. ஐந்து வயதில் உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பயின்றார். இளம் வயதிலேயே மற்ற சிறுவர்களிலிருந்து வேறுபட்டுச் சமய ஒழுக்கங்களுடன் இருந்ததால் மற்றவர்களால் 'சாமி' என அழைக்கப்பட்டார். தந்தையார் காலமான பிறகு தம் ஊருக்கு அருகே ஒரு சிறு தவச்சாலை அமைத்து அங்கேயே தங்கினார். தம் நிலபுலன்களை எல்லாம் இந்த அமைப்பிற்குச் சாசனம் மூலம் உரிமையாக்கினார். அதுவே பின்னர் வளர்ந்து சிரவை ஆதினம் ஆகியது.
இராமனந்த அடிகளார், 1923-ல், தனது உறவினர் மகனான கந்தசாமிக்குத் தீட்சை அளித்து துறவும் ஆதீனத் தலைமையும் வழங்கினார் கந்தசாமி சுவாமிகள் இராமானந்தரின் காலத்திலேயே டிசம்பர் 10, 1948 அன்று இறையுள் ஒன்றினார். இராமானந்த அடிகளார் டிசம்பர் 21, 1956 அன்று இறையுள் கலந்தார்.
தொடர்ந்து கஜபூசைச் சுந்தர சுவாமிகள் மடத்தின் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது சீடரான குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதினத்தின் நான்காம் பட்டமாகத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இவர் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர்.
சமய, ஆன்மிக, இலக்கியப் பணிகள்
சிரவை ஆதினம் பல்வேறு சமய ஆன்மிகப் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தியது. இராமனந்த அடிகளார் தன் ஆட்சிக் காலத்தில், அறுசமய வழிபாட்டை வளர்க்கவும், சாத்திர நூல் ஆராய்ச்சிக்காகவும் 'கௌமார சபை' என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார், இந்தக் கௌமார சபையின் வெளியீடாகவே சிரவையாதீனத்தின் பதிப்புகள் பலவும் வெளிவருகின்றன.
இராமனந்தரால் இயற்றப்பெற்ற நூல்களின் தொகுப்பு, 'இராமானந்தத் திரட்டு' என அழைக்கப்படுகிறது. கந்தசாமி சுவாமிகள் பல்வேறு ஆன்மிக, இலக்கியப் பணிகளை முன்னெடுத்தார். 'பக்தமான்மியம்' என்னும் பெருநூலை இயற்றினார். அதைத் தவிர மூன்று தலபுராணங்கள், ஆறு பிள்ளைத்தமிழ்கள், கோவை, கலம்பகம் ஒவ்வொன்று, பற்பல அந்தாதி, மாலை, பதிக வகைகள் என மொத்தம் 14,481 செய்யுள்களை இயற்றினார்.
கஜபூசைச் சுந்தர சுவாமிகள், திருப்பணி வேந்தர், அலங்கார சக்கரவர்த்தி, பெரிய புராணப் பேரறிஞர் எனப் போற்றப்பட்டார். மலர் வழிபாட்டையும், தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையும் தொடங்கி வைத்தார். சுவாமிகளின் தலைமையில் திருப்பெருந்துறை, வெஞ்சமாக்கூடல், அவிநாசி, அமெரிக்கா நாட்டு வெர்ஜீனியா நகரின் தாமரைக் கோயில் என ஏராளமான திருக்கோவில்களின் திருப்பணிகள் நடைபெற்றன. 108 ஆண் யானைகளை வைத்து வேள்வி நடத்தினார்.30-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு 700-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். மாநில முருகபக்தர்கள் பேரவையைத் தொடங்கி சமயப் பணிகளையும், சமுதாயப் பணிகளையும் முன்னெடுத்தார். மடாலயத்தில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர், கஜபூசைச் சுந்தர சுவாமிகள்.
தற்போதைய ஆதினத் தலைவரான குமரகுருபர சுவாமிகள், கந்தசாமி சுவாமிகளின் இலக்கியங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சமயப்பணி, தமிழ் இலக்கியப் பணி, கல்விப்பணி, சமுதாயப் பணி ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறார். கௌமார மடத்தில் இருந்து வெளிவருகின்ற 'கௌமார அமுதம்' எனும் இதழுக்கு சிறப்பாசிரியராக உள்ளார்.
சிரவை ஆதினப் பதிப்புகள்
சிரவை ஆதினப் பதிப்புகளில் சில:
- அன்னியூர்த் தலபுராணம்
- மன்னீசர் பதிகம்
- தபோதக சுந்தரி பதிகம்
- வரதராசப் பெருமாள் பதிகம்
- சண்முகக் கடவுள் திருப்புகழ்
- பிரசன்ன விநாயகர் மாலை
- பச்சைநாயகி பிள்ளைத்தமிழ்
- திருப்பேரூர்க் கலம்பகம்
- தலபுராணசாரப் பட்டிநாயக மாலை
- பச்சைநாயகி மாலை
- பட்டீசர் யமக அந்தாதி
- பிறவாநெறிச் சிலேடை வெண்பா
- விநாயகர் பதிகம்
- சிவபிரான் பதிகங்கள்
- பக்த மான்மியம்
- குருபர அந்தாதி (திரிபு)
- வேற்கடவுள் மாலை
- அறநெறி வெண்பா
- மழைப் பதிகம்
- மகாலக்குமி பதிகம்
- மகாவித்வான் பிள்ளையவர்கள் பதிகம்
- கலைமகள் துதி
- குருநாதன் வண்ணம்
- வண்ணச்சரபர் அவதாரக் குறிப்பு வண்ணம்
- வண்ணச்சரபர் நற்றாய் இரங்கல்துறை வண்ணம்
மற்றும் பல.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Oct-2025, 12:08:21 IST