under review

மீனாட்சி சுந்தர முதலியார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மீனாட்சி சுந்தர முதலியார் (பொ.யு.19-ம் நூற்றாண்டு) சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கை குறிப்பு

மீனாட்சி சுந்தர முதலியார் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிக்குளம் ஊரின் பெருநிலக்கிழார் ஒருவரின் மேலாளராக பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மீனாட்சி சுந்தர முதலியார் பெருநிலக்கிழாரின் மேலாளராக வேலை பார்த்து கொண்டிருந்த காலத்தில் பாடல்கள் இயற்றுவதில் திறம் பெற்றிருந்தார். பாடல்கள் புனைவதில் வல்லவராக இருந்த காரணத்தினால் செல்வந்தர்களும் சமூக அந்தஸ்து கொண்ட கல்விமான்களும் மீனாட்சி சுந்தர முதலியாரிடம் சிறப்பு பாயிரம் பெற்று சென்றுள்ளனர். தான் பணிபுரிந்த பெருநிலக்கிழாரின் அலுவல் பணிக்காக சென்னை சென்றபோது புரசை சபாபதி முதலியாரின் நட்பைப் பெற்றார். புரசை சபாபதி முதலியார் இறந்தபோது அவரை போற்றி சிறப்புப்பாயிரம் ஒன்றை இயற்றினார். மீனாட்சி சுந்தர முதலியார் அந்தாதி, பந்தம், தோத்திரமாலை என பலவகை பாக்களில் பக்தி மரபிலான சிற்றிலக்கிய நூல்களை இயற்றினார்.

நூல் பட்டியல்

  • காலங்களுக்குரிய தோத்திரமாலை
  • சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா
  • மீனாட்சி சுந்தரேஸ்வர் சதகலித்துறை
  • நித்தியகவி பலசந்தவந்தாதி
  • அக்கரவர்க்க பலசந்தமாலை
  • நித்தியகவி அந்தாதி
  • மாமனாக வந்து வழக்குரைத்த லீலைப்பசனை மெட்டு
  • விருத்த குமாரபாலரான லீலைப்பசனை மெட்டு
  • திருநாட் கண்ணி
  • தத்துவ கலிவெண்பா
  • பிரபோத சந்திரோதய உரைநடை
  • விவேகசூடாமணி உரைநடை
  • குருவணக்கம்
  • மனக்கண்ணி
  • சிறுதொண்டர் பசனைமெட்டு
  • தருமாங்கத நாடகம்
  • கழுகாசலமாலை
  • சங்கரசித்தி விநாயகர்மாலை
  • திருவுடையாள் மாலை
  • மாசாந்தகவி
  • அசுவபாத பந்தம்
  • கொம்பில்லா வெண்பா
  • அட்டநாகபந்தம்
  • ஏகநாகபந்தம்
  • உபயநாக பந்தம்
  • கமலபந்தம்
  • கோமுத்திரிகா பந்தம்
  • புட்பமாலிகா பந்தம்
  • மாலைமாற்று
  • கதைக்காவிகள்
  • மும்மண்டல வெண்பா
  • கட்க பந்தம்
  • இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம்
  • இரபந்தம்
  • கசபந்தம்
  • சத்தபிரகரணம்

பாடல் நடை

எயிலாயம் பொடித்தநகை இறைவர் சுந்த
ரேசருமீ னாட்சி யென்னும்
குயிலாய மொழியுடன்சால் குருவிகுள
மேட விழாக் கொண்ட பத்தில்
பயிலாயம் பல்குகொண்டல் ராசேந்த்ரன்
பணிந்தேத்த பனவர் போற்ற
கயிலாய மீதுவந்தார் அம்மையுப்பச்
சுகமதனில் களிக்கின்றாளே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2025, 12:12:52 IST