ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் (ஜனவரி 1, 1921) நூறாண்டுகளைக் கடந்த முதல் தமிழ்ப் பத்திரிகை. ‘தமிழ்நாட்டில் கடைகளில் விற்பனைக்கு’ என்று வந்த முதல் தமிழ் ஆன்மிக மாதஇதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்தான். இந்து சனாதன தர்மம் பற்றி கற்பிக்கவும், அதுதொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் இந்து கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை வீடுதோறும் கொண்டு சேர்த்து ஒவ்வொருவரையும் நல்லொழுக்கம் உள்ளவராக உருவாக்கும் பணியிலும் இந்த இதழ் சாதனையைச் செய்திருக்கிறது. ஆன்மிகப் பண்பாட்டு மாத இதழாக அச்சுப் பதிப்பாகவும் இணையப் பதிப்பாகவும் வெளிவருகிறது. இதனைச் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடுகிறது. 2022இல் இந்த இதழ் 102 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது இதன் ஆசிரியராகச் சுவாமி அபவர்கானந்தர் இருக்கிறார். 54 பக்கங்களில் முழு வண்ணத்தில் 20 ரூபாய் விலையில் இந்த இதழ் வெளிவருகிறது.
தொடக்கம்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆன்மீக, பண்பாட்டு மாதல் இதழாகச் சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து ஜனவரி 1, 1921முதல் வெளியிடப்படுகிறது. சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்த சுவாமி சர்வானந்தர் இந்த இதழினைத் தொடங்கிவைத்தார். இந்த இதழுக்கு 1921-1922 காலக்கட்டத்தில் ’அண்ணா’ என். சுப்ரமண்யம் ஆசிரியராக இருந்தார். அதன் பின்னர் 1922-1925இல் சுவாமி விபுலாநந்தர் இதன் ஆசிரியராக இருந்தார்.
சுவாமி கமலாத்மானந்தரை ஜனவரி 1977இல் ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை (24 ஆண்டுகள் ) அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
இவர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றபோது, அதன் சர்குலேஷன் 1100 பிரதிகள் ஆகும். இவர் இந்தப் பத்திரிகையின் சர்குலேஷனை உயர்த்தும்பொருட்டு 218 ஊர்களில் ஏஜெண்ட்களை நியமித்தார். அதன் பின்னர் சர்குலேஷன் மெல்ல மெல்ல உயர்ந்து 83,000 பிரதிகள் எட்டியது. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்இந்தப் பத்திரிகைக்கு அப்போது 17,000 ஆயுள் சந்தாதாரர்கள் இருந்தனர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்திற்கு ஓவியர் ‘அம்புலிமாமா’ சங்கர், ஓவியர் மணியம்செல்வன், ஆர்டிஸ்ட் ஜானி போன்றவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.
சுவாமி கமலாத்மானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியராக இருந்தபோது, இந்தப் பத்திரிகையில் திருமுருக கிருபானந்தவாரியார் சுமார் 30 கதைகள்/கட்டுரைகள் எழுதினார். மேலும் கவிஞர் கண்ணதாசன் இவரது வேண்டுகோளை ஏற்று 1. ‘விவேகானந்த அஞ்சலி - தாயகச் செல்வன்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை 1972-ஆம் ஆண்டு ஜனவரி விஜயம் இதழில் வெளிவந்தது.
கவிஞர் கண்ணதாசன் ‘அமாவாசை நிலவு’ என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை 1977-ஆம் ஆண்டு ஜூலை விஜயம் இதழில் வெளிவந்திருக்கிறது.
இந்த இதழ் 1921-1970 காலக்கட்டத்தில் விளம்பரங்கள், படங்கள் இன்றி வந்தது. 2007 இல் 55,000 பள்ளி மாணவர்கள் இதன் சந்தாதாரர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையில் வெளிவந்த சிறுவர் பகுதி படக்கதைகள் ‘கதை மலர்’ என்ற தலைப்பில் இது வரையில் 19 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவை ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றன.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தமிழ் மாத இதழின் 100ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் தொடங்கி வைத்தார். ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழின் டிஜிட்டல் பதிப்பையும் அவர் தொடங்கி வைத்தார்.
உள்ளடக்கம்
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாத இதழின் நோக்கமே அதன் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன. பாரதத்தின் தொன்மையான ஆன்மிகப் பாரம்பரியம், வேதாந்தம் ஆகியவற்றைத் தெய்வத்திருமூவரின் (ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர்) வாழ்வின் மூலம் உலகிற்குப் பறைசாற்றுதல்.
வேதாந்தத்தின் அடிப்படையில் ஆன்மிகமும் விவேகமும் கூடிய வகையில் வாழ்க்கையைக் கண்டு, தம்மைத் தாமே முன்னேற்றிக் கொள்ள உதவும் சுய முன்னேற்றப் பகுதி. எளிமையான நடையில் எவருக்கும் விளங்கக்கூடிய வகையில் கருத்துகளை வாசகர்களுக்கு எடுத்துக் கூறுவது.
ஆசிரியர்கள், மாணவர்கள், அன்னையர் மற்றும் சிறுவர்களுக்கான தனிப்பட்ட ஆர்வங்களுக்கு ஈடு செய்யும் வகையில் தனித்தனிப் பகுதிகள் விஜயத்தில் வெளிவருகின்றன. மாணவர்களை எழுச்சி பெறத்தக்க, அவர்களின் ஆற்றலைத் தூண்டி நல்ல இலக்குகளை எட்டும் வண்ணம் பல கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. சான்றோர்கள் கட்டுரைகள், பிறமொழிக் கட்டுரைகளின் தமிழாக்கம் போன்றவற்றைப் பழகு தமிழில் அளிக்கிறது இந்த இதழ்.
படிப்பு, முன்னேற்றம், இலக்கு இவை பற்றிய மாணவர்களின் ஐயங்களுக்கு மாணவர்களுக்கான கேள்வி – பதில் பகுதி, மூலம் சரியான தீர்வு கிடைப்பதோடு தெளிவான மனதுடன் அவர்களை நன்கு சிந்திக்க வைக்கும் பகுதியாகவும் அமைகிறது. ‘ஆசிரியர்களே சமுதாயத்தை வடிவமைப்பவர்கள், அவர்களின் ஆற்றல் நாளும் மெருகேற்றப்பட வேண்டும்’ என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களின் முன்னேற்றம், ஆசிரியர் -மாணவர் உறவு ஆகியவை மேம்படும் வகையில் நல்ல பல கட்டுரைகளைத் தரும் பகுதியாக ‘ஆசிரியர் உலகம்’ என்ற பகுதி அமைந்துள்ளது.
குடும்பமே சமுதாயத்தின் மையப்புள்ளி. அது அன்னையின் சக்தியாலேயே இயங்குகிறது. எனவே, அன்னையர் தம் உள்ளப்பாங்கு ஆரோக்கியமாக இருந்தால் ஒரு சமுதாயமே நல்ல உருப்பெறும் என்பதற்கிணங்க அன்னையருக்காக வடிவமைக்கப்பட்ட பகுதியாக ‘அன்னையர் உலகம்’ பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
பாசம், வீரம், பரிவு, கருணை, தாய் நாட்டுப்பற்று, தியாகம் இவற்றை விளக்கும் அற்புதமான பல கதைகளும் சான்றோர் கருத்துகளும் இந்த இதழில் இடம் பெறுகின்றன. நமது பாரம்பரியத்தையும் வரலாற்றுச் சிறப்பையும் விளக்கும் வண்ணப்படக்கதைகள். சிறுவர்களுக்குக் கதைகள் மூலமே நற்சிந்தனைகளை ஊட்ட முடியும் என்பதால், ‘சிறுவர் பகுதி’ தனிக் கவனத்துடன் சிறப்பாக வெளியிடப்படுகிறது.
உசாத்துணை
https://imedia.chennaimath.org/blogs/post/Sri-Ramakrishna-Vijayam
https://www.youtube.com/watch?v=-XNi6Fnfeb4
https://istore.chennaimath.org/sri-ramakrishna-vijayam
https://chennaimath.org/sri-ramakrishna-vijayam
https://sriramakrishnavijayam.wordpress.com/about/
[[Category:Tamil Content]]