under review

கயாதர நிகண்டு

From Tamil Wiki
Revision as of 17:30, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நிகண்டு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நிகண்டு (பெயர் பட்டியல்)
கயாதரம் - முதல் பதிப்பு, 1939
தமிழ் நிகண்டுகள் - ஆய்வு நூல்

கயாதரர் என்பவரால் இயற்றப்பட்டதால் இந்த நிகண்டு நூலுக்குக் 'கயாதரம்' என்ற பெயர் வந்தது. இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கருதப்படுகின்றது. இந்நூல், அந்தாதித் தொடையில் அமைந்த 566 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆனது. 'கயாதர நிகண்டு' என்ற பெயர் பிற்கால வழக்கில் வந்தது.

பதிப்பு, வெளியீடு

இந்த நூலை முதன் முதலில் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் 1939-ல், எஸ். வையாபுரிப் பிள்ளை பதிப்பித்தார்.

ஆசிரியர் குறிப்பு

இந்த நிகண்டு நூலை இயற்றிய கயாதார முனிவர், ராமேஸ்வரத்தில் வாழ்ந்தவர் என்பதற்கான சான்றுகள் நூலில் உள்ளன. இவர், தன்னை 'தேவைக் கெயாதரன்', 'தேவை நன்னாடன்', 'தேவையதிபன்' என்றெல்லாம் நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். இவர் அந்தண வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், 'சோமேசர்' என்பவரின் மகன் என்றும் கருத்துக்களும் நூலில் உள்ளன.

'அரும்பொருள் அந்தாதி', 'இராமீசுவரக் கோவை' என்பது இவர் இயற்றிய பிற நூல்கள். இவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டு என்றும், பதினேழாம் நூற்றாண்டு என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

உள்ளடக்கம்

அந்தாதித் தொடையில் அமைந்த முதல் நிகண்டு நூல் 'கயாதரம்' தான். இது காலத்தால் நான்காவதாக அறியப்படும் நிகண்டு நூல். மனப்பாடம் செய்வதற்கு எளிதான நிகண்டு நூல் இது என்ற கருத்தும் உண்டு. இந்நூல் 11 தொகுதிகளை உடையது. இந்நூலில் 566 சூத்திரங்களினால் 10,500 சொற்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இதில் புதிய சொற்கள் விளக்கங்கள் ஏதும் இல்லை என்றாலும், கட்டளைக் கலித்துறையால் ஆன முதல் நிகண்டு நூலாக இது கருதப்படுகிறது.

இந்த நிகண்டு நூல் கீழ்காணும்11 பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளது.

  1. தெய்வப் பெயரியல்
  2. இடப் பெயரியல்
  3. மக்கட் பெயரியல்
  4. விலங்கின் பெயரியல்
  5. மரப் பெயரியல்
  6. பல்பொருட் பெயரியல்
  7. செயற்கை வடிவிற் பெயரியல்
  8. பண்புப் பெயரியல்
  9. செயல் பற்றிய பெயரியல்
  10. ஒலி பற்றிய பெயரியல்
  11. ஒருசொற் பல்பொருளியல்
அந்தாதிப் பாடல் விளக்கம்

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் அந்தாதி நடைக்குச் சான்றாக இரண்டு பாடல்களைக் கீழே காணலாம்.

சாற்றிய செய்யுட் கவிபாட்டுத் தூக்குக் கவிதைசந்தம்
போற்றிய யாப்புத் தொடர்பிவை பாவென்ப பொற்பிசைப்பாக்
கூற்றியல் கீதம்பண் பாணி வரிகானங் கோடணைபாண்
மேற்றிகழ் காந்திரு வங்கேயங் காமர மெல்லியலே (பாடல் - 396)
மெல்லிய தந்திரி யோடெழா லாகு நரம்பினிசை
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல்மருள்
ஒல்லும் பயிற லரற்ற லுளைத லெழுத்திலொலி
புல்லுந் திரிய லழுங்கல் குரைத்தலும் பூசலுமே (பாடல் - 397)

முதல் பாடலின் ஈற்றடியான 'மெல்லியலே' என்பதில் உள்ள 'மெல்லிய' என்ற சொல், அடுத்த பாடலின் முதல் அடியாக வந்து, அந்தாதி இலக்கணத்திற்கு விளக்கமாய் அமைகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Feb-2023, 07:19:12 IST