under review

சு. சரவணமுத்துப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 15:49, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
சரவணமுத்துப்பிள்ளை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரவணமுத்துப்பிள்ளை (பெயர் பட்டியல்)

சு. சரவணமுத்துப்பிள்ளை(1848-1916) ஈழத்து தமிழ்ப் புலவர், ஆசிரியர், பத்திரிக்கையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சு. சரவணமுத்துப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம், ஊரெழு என்னும் ஊரில் 1848-ல் பிறந்தார். தந்தை சுப்பிரமணியபிள்ளை. இளமைக்காலத்தில், புன்னுலைக்கட்டுவன் ச. கதிர்காம ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அதன்பின், சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் உயர்தரத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பயின்றார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், நாவலர் கோட்டத்து ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை ஆகியோர் இவருடன் பயின்றவர்கள்.

இதழியல்

சு. சரவணமுத்துப்பிள்ளை 'சைவ உதயபானு' என்ற பெயருடன் ஒரு பத்திரிகையைத் தொடங்கி, ஆறு ஆண்டுகள் வரை அதன் ஆசிரியராயிருந்து அதனை நடத்தி வந்தார். "பத்திராதிபர் சரவணமுத்து" எனவும் அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சு. சரவணமுத்துப்பிள்ளை தமிழில் வசனநடை எழுதியதுடன் பிரபந்தம், கவிகளையும் பாடினார். தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் சமயச்சார்பான விரிவுரைகள் ஆற்றினார். கோயில்களிலும் மடங்களிலும் புராணங்களுக்கான பொருளுரைகள் வழங்கினார். இராமநாதபுரத்துப் பாஸ்கர சேதுபதி மீது பிரபந்தம் பாடி, அதற்காகப் பரிசிலும் பெற்றார். சு. சரவணமுத்துப்பிள்ளை ஊர்காவற் துறையில் நீதிபதியாய் விளங்கிய கு. கதிரைவேற்பிள்ளை தமது அகராதியைத் தொகுத்த காலத்தில் அவருக்குச் சிறிது காலம் உதவினார். 1911 முதல் வெளிவந்த "சண்முகநாதன்" இதழில் எழுதினார்.

மாணவர்கள்
  • தென்கோவை, பண்டிதர். ச. கந்தையாபிள்ளை
  • சேர். அம்பலவாணர் கனகசபைப் பிள்ளை
  • முகாந்திரம் சி. கந்தையா பிள்ளை
  • நல்லூர் வைத்தியர் கா. பொன்னையாபிள்ளை

மறைவு

சு. சரவணமுத்துப்பிள்ளை 1916-ல் காலமானார். இவரின் மாணவர் ச. கந்தையாபிள்ளை இரங்கற்பா பாடினார்.

நூல் பட்டியல்

  • பாஸ்கர சேதுபதி பிரபந்தம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Mar-2023, 06:00:27 IST