அழகியல்
அழகியல் (Aesthetics) (முருகியல்) இயற்கையிலும் கலையிலும் உள்ள அழகை அதன் இயக்கம், நெறிகள், நுட்பங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆராய்வதும் வகுத்துக்கொள்வதும் அழகியல் எனப்படுகிறது. அழகியல் இன்று இலக்கியம், கலைகள் ஆகியவற்றில் முதன்மையாக பயன்படுத்தப்படும் சொல். அழகியல் தத்துவத்திலும் இலக்கியம் மற்றும் கலைக்கோட்பாடுகளிலும் பயன்படுத்தப்படும் அடிப்படைக் கருத்துருவம்.
சொல்
ஆங்கிலச் சொல்லான aesthetic என்பது கிரேக்கச் சொல்லான aisthētikós என்பதில் இருந்து வந்தது. புலணர்வு சார்ந்த அறிதல் என்று பொருள். இன்று நாம் பயன்படுத்தும் பொருளில் Aesthetics என்னும் சொல் விமர்சகர் ஜோசப் அடிசன் (Joseph Addison) 1712 ல் பயன்படுத்தியது எனப்படுகிறது. ஜெர்மானிய தத்துவசிந்தனையாளர் அலக்சாண்டர் பௌம்கார்ட்டன் (Alexander Baumgarten) 1750 ல் இச்சொல்லை தத்துவார்த்தமாக விரித்தெடுத்தார். ‘அழகுணர்வை அறியமுற்படுதல்’ என அவர் அழகியலுக்கு அளித்த வரையறை பொதுவாக ஏற்கப்படுகிறது.
தமிழில் அழகியல் என்னும் சொல்லை இலக்கியவிமர்சகர் ஆ. முத்துசிவன் உருவாக்கி தன் கட்டுரைகளில் பயன்படுத்தினார். தமிழில் அழகு என்பது இயற்கை, கலை அனைத்திலும் இருக்கும் அனுபவம். இயல் என்பது அதையொட்டிய சிந்தனைத்துறையைக் குறிக்கும் சொல்லொட்டு.
கருத்துருவம்
அழகியல் என்னும் கருத்துருவம் மேலைச்சிந்தனையில் உருவாகி இந்தியாவுக்கு வந்த ஒன்று. இந்திய சிந்தனையில் அந்தக் கருத்துரு அதற்கு முன் இருந்ததில்லை. இந்திய (தமிழ்) சிந்தனையில் கலை, இலக்கியம், இசை, நிகழ்த்துகலைகள் ஆகியவற்றுக்கான அழகியல் சார்ந்த அளவுகோல்களும், இலக்கணங்களும் நீண்டகாலமாக இருந்துள்ளன. இலக்கியத்தில் அணியிலக்கணம் இலக்கியப்படைப்பின் அழகியல்கூறுகளை வகுத்துரைப்பது. சிற்பம், இசை, நிகழ்த்துகலைகளில் பரதமுனிவரின் ரச சித்தாந்தம் (மெய்ப்பாடுகள்) அவற்றின் அழகியல்கூறுகளை வரையறை செய்வது. ஆனால் இவை அனைத்துமே தனித்தனியாக கலையிலக்கியங்களின் அழகு வெளிப்படும் முறையை வகுக்க முற்படுபவை. அனைத்துக் கலைகளிலும், இயற்கையிலும் வெளிப்படும் அழகு என்பது என்ன என்றும்; அதை அறிந்து வகுக்கும் முறை என்ன என்றும் ஆராய்வதே நவீன அழகியல். அனைத்துக்கும் பொதுவான கொள்கைகளையும், நெறிகளையும் வரையறை செய்துகொண்டு அவற்றை அனைத்துக் களங்களிலும் பரிசீலிப்பது அது.