under review

சே.ப. நரசிம்மலு நாயுடு

From Tamil Wiki
Revision as of 21:45, 4 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Content updated by Jeyamohan, ready for review)



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


சே.ப. நரசிம்மலு நாயுடு

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு (12, ஏப்ரல்1854 – 22-ஜனவரி- 1922) தமிழின் முதற்காலகட்ட இதழாளர். தொழில்முனைவர். பிரம்மசமாஜ தலைவர். சமூக சேவையாளர், சமூகவியல் ஆய்வாளர் மற்றும் பதிப்பாளர். தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். அறிவியல், இசை பற்றி எழுதியவர். கோயம்புத்தூரில் ஆரம்பகால தொழில்துறையைக் கட்டமைத்தவர்களில் இவரும் ஒருவர்.

பிறப்பு, கல்வி

தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு நிலைபெற்ற காலத்தில் சலம கோத்திரம் பகடால நரசிம்ம நாயுடு ஆட்சி நிர்வாகப் பிரதிநிதியாக இருந்தார். இவரது முன்னோர்கள் இசுலாமியப் படையெடுப்பின்போது சேலத்தில் குடியேறியவர்கள். பலிஜா நாயுடு சமூகத்தைச் சார்ந்த மரபுவழிப் பேரனாக இந்தக் குடும்பத்தில் அரங்கசாமி நாயுடுவுக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாக 12 ஏப்ரல் 1854ல் ல் ஈரோட்டில் நரசிம்மலு நாயுடு பிறந்தார். முதலில் இவருக்கு இடப்பட்ட பெயர் பாலகிருஷ்ணா. இவருடைய தாத்தாவாகிய நரசப்ப நாயுடுவின் பெயர் இவருக்கு போடப்பட்டது. இவரது தாய்மொழி தெலுங்கு. ஆரம்பத்தில் திண்ணைப் பள்ளியில் தெலுங்கு படித்தார்.மாவட்ட அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.

தனி வாழ்க்கை

சே.ப. நரசிம்மலு நாயுடு

1868ல் தன் பதினான்காவது வயதில் சேலத்தைச் சேர்ந்த எதிராஜி அம்மையாரை பணம்புரிந்துகொண்டார். அவர் இரண்டு மைந்தர்களை பெற்றுவிட்டு காசநோயால் மறையவே 1899ல் பாலக்காட்டைச் சேர்ந்த மீனாட்சியம்மாளை மணம்புரிந்துகொண்டார்.

4 வயதில் முதல் திருமணமும் பின்னர் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். ஓராண்டு ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தார். பின்னர் 1879 ல் கோவையில் குடியேறினார். மருத்துவ உதவியாளர், மக்கள் கணக்கெடுப்புப் பணி, ஆசிரியர், பத்திரிகையாசிரியர் எனப் பல பணிகள் ஆற்றியுள்ளார்.

அரசியல் செயல்பாடுகள்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உருவாகும் முன்பே சென்னை மகாஜன சபை என்ற சமூகச் சீர்திருத்த இயக்கத்தில் பங்கு பெற்றவர் நரசிம்மலு நாயுடு. 1885 ல் காங்கிரஸ் கட்சி உருவான போதே கோயம்புத்தூரில் காங்கிரஸ் அமைப்பை ஏற்படுத்தியவர். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு பம்பாயில் நடந்தபோது தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவராக நாயுடு சென்றார். 1886இல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலும் 1887 ல் சென்னை காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.

சுப்பராயலு நாயுடு வடமொழி, தெலுங்கு மொழிகளை பயிற்றுவிக்க அமைத்த தர்மம், குடி எதிர்ப்புக்கு உருவாக்கிய ஒருசபை, வேளாண் கண்காட்சி நடத்த கோயமுத்தூர் விவசாய காட்சி சபை, சமூகச் சீர்திருத்தத்திற்கான சபை எனச் சில சபைகளை நிறுவியவர். 1887 ல் கௌரவ நீதிபதியாகவும் இருந்தார்.

1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானபோது கோவையில் அதன் கிளையை இவர்தான் உருவாக்கினார். முதல் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தமிழகத்தில் இருந்து சென்ற 21 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். ஏழை இளம் விதவைப் பெண்களுக்குக் கல்வியளித்து, அவர்களுக்கு மறுவிவாகம் செய்விக்க அறக்கட்டளை ஒன்றை அமைத்தார்.

தொழில்துறைச் செயல்பாடுகள்

கோயம்புத்தூரில் ஆரம்பகாலத் தொழில்துறையைக் கட்டமைத்தவர்களில் இவரும் ஒருவர். நீலகிரியின் புகழ்பெற்ற தோட்ட உரிமையாளரான ராபர்ட் ஸ்டேன்ஸின் நிதியுதவியுடன் 1888 ல் கோவை, சி.எஸ். அண்ட் டபிள்யு மில்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று அது ஸ்டேன்ஸ் மில் எனப்படுகிறது. போத்தனூரில் கோவையின் முதல் சர்க்கரை ஆலையையும் அமைத்தார்.

பொதுப்பணி

கோவையின் பல புகழ்பெற்ற பொது அமைப்புகள் நரசிம்மலு நாயுடுவால் அமைக்கப்பட்டவை. இப்போது டவுன் ஹால் எனப்படும் விக்டோரியா முனிசிபல் ஹால் இவரது முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது. விக்டோரியா மகாராணியின் 50ஆம் ஆட்சியாண்டில் (1887) நிதி திரட்டி அவர் நினைவாக அந்த மண்டபத்தைக் கட்டினார்.சிறுவாணியில் அணையைக் கட்டி, கோவைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டம் இவரால் முன்வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதுதான். கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் கிளப், கோயம்புத்தூர் காலேஜ் கமிட்டி, கோயம்புத்தூர் கோ ஆபரேட்டிவ் ஸ்டோர் ஆகிய அமைப்புக்களை உருவாக்கினார்.

ஆன்மிகப் பணிகள்

கொங்கு நாட்டில் பிரம்ம சமாஜத்தைப் பரப்பியவர்களில் நாயுடுவுக்குப் பெரும்பங்கு உண்டு. இராஜாராம் மோகன்ராய் ஆரம்பித்த பிரம்ம சமாஜம் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியப் பிரம்ம சமாஜம், சாதாரணப் பிரம்ம சமாஜம் என்று பிரிந்து இயங்கியது. தமிழகத்தில் வேதசமாஜம் என்ற பெயருடன் இயங்கிய இந்த அமைப்பு பின்னர் பிரம்ம சமாஜம் ஆயிற்று. நரசிம்மலு நாயுடு 1897 ல் கோவையில் குடியேறி பின், பிரம்ம சமாஜத்தைப் பரப்புவதில் தீவிரமானார். இக்காலத்தில் கேசவசந்திர சென்னுடன் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது பிரம்ம சமாஜத் தலைவராக இருந்த சிவநாத சாஸ்திரியை கோவைக்கு அழைத்துப் பேசவைத்திருக்கிறார். நாயுடு எழுதிய “தென்னிந்திய பிரம்மசமாஜத்தின் சரித்திர சார சங்கம்” (1905) முக்கியமான நூல். நரசிம்மலு நாயுடு 1922 ல் எழுதிய உயிலில் “என் சொத்துக்களில் சிலதின்படி கோயமுத்தூர் நரசிம்மலு நாயுடு பிரம்ம சாதனாசிரம்மம் என்னும் பெயரால் ஒரு தர்மத்தை எனது தோட்ட பங்களாவில் ஸ்தாபிக்க வேண்டும்” என்று எழுதியிருக்கிறார். பிரம்ம சமாஜத்தின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக உழைத்த சென்னை மகாஜன சபாவின் செயலாளராகப் பணியாற்றினார்.

இதழியல்

நரசிம்மலு நாயிடு Salem Patriot இதழில் 1877 முதல் வெவ்வேறு செய்திகளையும் அவற்றின் மேல் விமர்சனங்களையும் எழுதினார்.

நரசிம்மலு நாயிடு நடத்திய இதழ்கள்.

  • சுதேசாபிமானி 1877
  • கோயம்புத்தூர் அபிமானி 1879
  • ஸ்ரீரங்க ஸ்தல பூஷணி 1878
  • கோயம்புத்தூர் பத்ரிகா 1879
  • கோயமுத்தூர் கலாநிதி 1881

இலக்கிய வாழ்க்கை

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிப் புலமை உடையவர். தத்துவம், வரலாறு, கல்வி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். அன்றாட அரசியல் செய்திகளின் மொழியாக்கம், செய்தி விமர்சனம், சமூக சீர்திருத்தக் கட்டுரைகள், மதச் சீர்திருத்தக் கட்டுரைகள் என இவரது எழுத்து பலதரப்பட்டது. நரசிம்மலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் நாயுடு எழுதி அச்சில் வந்தவை 94 நூல்கள் என்றும், அச்சிடக் காத்திருப்பவை 19 என்றும் கூறுகிறார். ஆக, 113 நூல்களை எழுதியிருக்கிறார். சிற்பியின் கணக்குப்படி மாணவர்களின் பாடநூல்கள் இசைப் பாடல்கள், வரலாற்று நூல்கள், சமய ஆன்மிக நூலக அறிவியல் நூல்கள், சீர்திருத்த நூல்கள் எனவாக 12 தலைப்புகளில் எழுதியுள்ளார். 'பெண்கவி பிரபாவம்' என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் இவர் பெண்ணியம் குறித்து ஆரம்ப காலத்தில் யோசித்தவர் என்பதைக் காட்டுகிறது.

படிக்கும் பருவத்திலேயே யாப்பிலக்கண வினா விடை என்ற நூலை எழுதி, தன் தமிழாசிரியர் உதவியோடு வெளியிட்டார். சிறுவயது முதலே கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவை ‘தினவர்த்தமானி’, ‘அமிர்தவசனி’, ‘கஜன மனோரஞ்சனி’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்தன. 1877ல் முதல் முதலாக ‘சேலம் மாவட்ட பூமி சாஸ்திர கிரந்தம்’ என்ற நூலை வெளியிட்டார். மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்த ‘சிறந்த கணிதம்’ என்ற நூலை எழுதினார். ‘ஆர்ய சத்திய வேதம்’, ‘தென்னிந்திய சரிதம்’, ‘பலிஜவாரு புராணம்’, ‘தல வரலாறுகள்’, ‘ஆரிய தருமம்’ முதலிய உரைநடை நூல்கள் உட்பட 94 நூல்களை எழுதி பதிப்பித்தார்.ஸ்ரீரங்க ஸ்தல பூவிணி இதழில் திருவரங்க ஆலயத்தின் வரலாற்றை விரிவாக எழுதியிருக்கிறார். இது பின்னர் நூலாக வந்தது

பயண இலக்கிய முன்னோடி

நாயுடு எழுதிய பயண நூல்களில் ஆரியர் திவ்வியதேச யாத்திரையின் சரித்திரம் , தட்சண இந்திய சரித்திரம் இரண்டும் முக்கியமானவை. ஆரியர் திவ்யதேச யாத்திரை சரித்திரம் 1889; சேலப் பேட்ரியார் ப் தென்னகத்தின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, பல சுவடிகளையும் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து வந்த பயண நூல் தட்சண இந்திய சரித்திரம். இது 1919இல் வந்தது. 939 பக்கங்கள் கொண்டது. தென்னிந்திய நகரங்களில் நடந்த பிரம்ம சமாஜக் கூட்டங்களுக்குப் பேசச் சென்றபோதும் 1879-1910ஆம் ஆண்டுகளில் தலயாத்திரை சென்றபோதும் கிடைத்த அனுபவத்தை இதில் எழுதியிருக்கிறார்.

பதிப்பாளர்
  • 1879 ல் ‘கோயம்புத்தூர் அபிமானி’ என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து ‘கோயம்புத்தூர் பத்ரிகா’ என்ற வாரச் செய்தி இதழை வெளியிட்டார்.
  • 1881 ல் கலாநிதி அச்சகம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.Coimbatore Crescent. என்னும் ஆங்கிலப் பதிப்பகத்தையும் நடத்தினார்.
சமூகவியல்

நரசிம்மலு நாயிடு தன்னுடைய பலிஜா இனத்தின் பின்னணியை விரிவாக ஆராய்ந்து பஜிஜவார் புராணம் (Balija Vamsa Purana) என்னும் நூலை 1896 ல் வெளியிட்டார். தமிழின் தொடக்ககால சமூகவியல் ஆய்வுகளில் ஒன்று என இது கருதப்படுகிறது. .

மறைவு

22-ஜனவரி 1922ல் தன் 68-வது வயதில் மறைந்தார்.

படைப்புகள்

ஆங்கிலம்
  • Balija Vamsa Purana
பொது
  • சேலம் மாவட்ட பூமிசாஸ்திர கிரந்தம்
  • பெண்கவி பிரபாவம்
  • தென்னிந்திய பிரம்மசமாஜத்தின் சரித்திர சார சங்கம் - 1905
  • இந்து பைபிள்
  • விவசாய சாஸ்திரம் (இரண்டு பாகங்கள்)
  • குடியானவர் கஷ்ட தசை
  • எருவை காக்கும் விதம்
  • விவசாயப் பழமொழிகள்
  • பிரம்ம சமய சரித்திரக் கீர்த்தனைகள்
  • சரித்திர சங்கிரகம்
  • தென்னிந்திய சரிதம்
  • கோயமுத்தூர் கோதையர் கொம்மிகள்
  • பலிஜவாரு புராணம்
  • ஆரிய தர்மம்
  • மத விருட்சம்
பயண நூல்கள்

நினைவகங்கள்,வாழ்க்கை வரலாறுகள்

  • சே.ப.நரசிம்மலு நாயுடு நினைவாக கோவையில் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு நினைவுப் பள்ளி செயல்படுகிறது
  • ஜி.எம்.வெங்கடராம நாயிடு 1903ல் நரசிம்மலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார் (1903, G. M. Venkatarama Naidu, Salem Pagadala Narasimhalu Naidu)
  • சிற்பி பாலசுப்ரமணியம் ’சே.ப.நரசிம்மலு நாயுடு’ என்னும் நூலை சாகித்ய அக்காதமிக்காக எழுதியிருக்கிறார்

விருதுகள்

ஆங்கில அரசு இவரது பொதுப்பணியை பாரட்டி இவருக்கு “ராவ்பகதூர்“ பட்டம் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மறுத்துவிட்டார்.

உசாத்துணைகள்