கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் (ஆறகளூர்)

From Tamil Wiki
கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்
கரிவரதராஜப் பெருமாள்
கரிவரதராஜப் பெருமாள் தாயார் சன்னதி

கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் (ஆறகளூர்) (பொயு 12 ஆம் நூற்றாண்டு)

இடம்

சேலம் மாவட்டத்திலுள்ள ஆறகளூர்ரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆறகளூர் சோழர் ஆட்சிக்காலத்தில் மகதை மண்டலம் என்னும் சிற்றரசின் தலைநகர். இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி,கள்ளக்குறிச்சி மாவட்டம்,பெரம்பலூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதிகள் மகதை நாட்டில் அடங்கி இருந்தது.

வரலாறு

பொயு 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகழூர் காமநாத ஈஸ்வரர் கோயிலும், கரி வரதராஜ பெருமாள் கோயிலும் கட்டப்பட்டன. வாணகோவரையனின் மனைவி புண்ணியவாட்டி நாச்சியார் என்பவர் கரி வரதராஜபெருமாள் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் போன்றவற்றை கட்டி விமானமும் அமைத்தார் என இக்கோயிலின் கருவறையின் வடக்கே உள்ள வெளிப்புற கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பு

கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் மேற்குரோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன் திருக்குளம் உள்ளது. ராஜகோபுரம் மூன்றடுக்கு கொண்டது. சாலையின் ஓரமாக முகப்பில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. நீள்சதுர வடிவமானது கருவறை. ஆண்டாளுக்கும், தாயாருக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. இங்கே முகமண்டபத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களுடன் பத்தாவது அவதாரமாக புத்தரும் செய்துக்கப்பட்டுள்ளார். முகமண்டபம் நாயக்கர் காலத்தையது என்று அதிலுள்ள நாயக்கர்கால முத்திரையை கொண்டு ஊகிக்கிறார்கள்.

மூலவர்

கருவறையில் வரதராஜப் பெருமாள் நின்றகோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி இருவரும் இருபக்கமும் நிற்க நின்ற கோலத்தில் உள்ளார். தனி சன்னிதியாக தாயார் கமலவல்லி கோயில் கொண்டிருக்கிறார். கமலவல்லி சன்னிதியின் நேர்முன்னால் நாகதேவியின் சன்னிதி உள்ளது.

கல்வெட்டுகள்

இந்த ஆலயத்தில் மொத்தம் 9 கல்வெட்டுகள் உள்ளன. பொன்பரப்பின வாணகோவரையன் மற்றும் புண்ணியவாட்டி நாச்சியார் பொயு 12 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தை கட்டிய செய்தியை அவை கூறுகின்றன

உசாத்துணை