ஆறகளூர்
ஆறகளூர் (ஆழகழூர்) சேலம் மாவட்டத்தில் உள்ள சிற்றூர். இந்த ஊர் சோழர்காலத்தில் வாணக்கோவரையர்கள் என்னும் குறுநிலமன்னர்களின் தலைநகரமாக இருந்தது. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி மகதை மண்டலம் என அழைக்கப்பட்டது. இங்கே காமநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வழியாக சோழர்காலத்தைய வணிகப்பெருவழியான மகதீசர் பெருவழி சென்றது எனப்படுகிறது
இடம்
தமிழ்நாடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம். சோழர் காலத்தில் பொயு 10 ஆம் நூறாண்டு முதல் வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னரின் தலைநகர். சோழர் காலத்தில் இப்பகுதி மகதை மண்டலம் என அழைக்கப்பட்டது. இன்றைய சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி,கள்ளக்குறிச்சி மாவட்டம்,பெரம்பலூர் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதிகள் மகதை நாட்டில் அடங்கி இருந்தன.
வரலாறு
பொயு 12 ஆம் நூற்றாண்டில் ஆறகளூர் சோழர்களின் ஆட்சிக்குக்கீழே மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோயிலும், கரிவரதராஜ பெருமாள் கோயிலும் கட்டப்பட்டன. வாணகோவரையனின் மனைவி புண்ணியவாட்டி நாச்சியார் என்பவர் கரிவரதராஜபெருமாள் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் போன்றவற்றை கட்டி விமானமும் அமைத்தார் என இக்கோயிலின் கருவறையின் வடக்கே உள்ள வெளிப்புற கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோழநாட்டின் வீழ்ச்சிக்குப்பின் 14 ஆ நூற்றாண்டில் பாண்டியர்களும்,ஹெய்சாளர்களும், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர பேரரசு, நாயக்க மன்னர்களும் மகதை நாட்டை ஆட்சி செய்தனர்.
வரலாற்றுச் சின்னங்கள்
ஆறகளூரில் முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் பல உள்ளன.
காமநாதீஸ்வரர் ஆலயம்
ஆறகழூர் காயநிர்மாலேஸ்வரர் கோயில் என்றும் இந்தக் கோயில் அழைக்கப்படுகிறது. அஷ்டபைரவர் சன்னிதி இங்கு உள்ளது. (பார்க்க காமநாதீஸ்வரர் ஆலயம்)
கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்
(பார்க்க, கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்)
மகதேசன் பெருவழி
சோழர் காலத்தில் புழக்கத்தில் இருந்த மகதேசன் பெருவழி ஆறகளூர் வழியாகச் சென்றது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன (பார்க்க மகதேசன் பெருவழி)