under review

பருவம் மயங்கல்(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 18:36, 31 July 2025 by Logamadevi (talk | contribs)

பருவம் மயங்கல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று.பெருந்திணைக் காதல் கொண்ட தலைவியொருத்தி அது தலைவன் வரும் காலம் அன்று என வருந்துதலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் இத்துறையின் இலக்கணத்தைக் கூறுகின்றன.

கொளு 1

அழகிய வளையலையுடைய தலைவி வருந்தத் தோழி இது (தலைவன் வருகைக்கு) உரிய காலம் அல்ல என்று மருண்டு வருத்தமுறுதல்.

உரவ வால்வளை உயங்கத் தோழி
பரவம் மயங்கிப் படர் உழந்தன்று(கொளு 17.6)

வெண்பா

பெரும்பணை மென்தோள் பிரிந்தார் எம் உள்ளி
வரும் பருவம் அன்றுகொல் ஆங்கொல் - சுரும்பு இமிரும்
பூமலிக் கொன்றைப் புறவு எல்லாம் பொன்மலரும்
மாமயிலும் ஆலும் மலை (330)

பொருள்: மூங்கில் தோள்களைப் பிரிந்து சென்ற தலைவர் என்னை நினைத்து வரும் காலம் இல்லையோ? அல்லது உரிய காலம்தானோ? கொன்றைக் காடெல்லாம் பொன்போல் பூத்திருக்கிறது ; அழகிய மயிலும் மலையிடத்தே அகவுகிறது.

கொளு 2

தலைவன் வரும் காலம் அன்று என்று தலைவி தெளிதல்.

ஆங்கு அவர் கூறிய பருவம் அன்று எனத்
தேம்கமழ் கோதை தெளிதலும் அதுவே(கொளு 17.7)

வெண்பா

பொறி மயில் ஆலின பொங்கர் எழிலி
சிறு துவலை சிந்தின சிந்த - நறிய
பவர் முல்லைத் தோன்றி பரியாமல் ஈன்ற
அவர் வரும் காலம் ஈது அன்று (331)

பொருள்: மயில் அகவியது.சோலை மலர்கள் தேன்துளியைச் சிதற, முல்லையும் தோன்றியும் கார்காலமெனக் கருதித் தவறாகப் பூத்துவிட்டன.தலைவர் வரும் காலம் இது அன்று.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page