under review

பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 03:44, 30 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. தலைவன் சிலம்பு அணிந்த காலடிகளில் வணங்கிய பின் பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி அவனுக்கு இரங்குதலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உயர்ந்த குவடுகளைக் கொண்ட மலைநாடன் கூப்பிய கைகளோடு சிலம்பு அணிந்த தலைவியின் அழகிய காலடிகளில் வணங்கிய பின்பு தலைவி மனம் நெகிழ்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

கோடுயர் வெற்பன் கூப்பிய கையொடு
பாடகச் சீறடி பணிந்த பின் இரங்கின்று(கொளு 16.17)

வெண்பா

அணிவரும் பூஞ்சிலம்பு ஆர்க்கும் அடிமேல்
மணிவரை மார்பன் மயங்கிப் - பணியவும்
வல்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை
நிற்க என்றி வாழிய நீ (322)

பொருள்: அழகிய சிறந்த சிலம்புகள் ஒலிக்கும் காலடிகளில், அழகிய மலை போன்ற மார்பினையுடைய தலைவன் வணங்கியும், வன் நெஞ்சே நீ இன்னும் சிறிது நேரம் ஊடியிருப்பேன் என்கிறாயா! நீ வாழ்க வாழ்க.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2025, 19:02:56 IST