under review

கே.என். சிவராஜ பிள்ளை

From Tamil Wiki
Revision as of 20:23, 4 February 2022 by Madhusaml (talk | contribs) (typo corrected)
கே.என். சிவராஜ பிள்ளை
கே.என். சிவராஜ பிள்ளை

கே.என். சிவராஜ பிள்ளை (1879-1941) கவிஞர், கட்டுரையாளர்,இதழாளர், சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் என பன்முகங்களைக் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆய்வுப் பாரம்பரியத்தில் வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரிசையில் சிவராஜ பிள்ளை முக்கியமானவர். இவருடைய சங்க இலக்கியங்கள், அகத்தியர், கம்பராமாயணம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்புகள்.

பிறப்பு, கல்வி

கே.என். சிவராஜ பிள்ளை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் உள்ள பீமநகரியில் (வீமனசேரி) 1879ல் பிறந்தார். கங்கைகொண்டான் சிவன் கோவிலின் சொத்துக்களைப் பரம்பரையாகப் பராமரித்த சைவக்குடும்பத்தைச் சார்ந்தவர். இவருடைய அண்ணன் குமரேச பிள்ளை. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இவருக்கு அத்தான் முறையுடையவர்.1729இல் திருவிதாங்கூர் ராஜ்யம் உருவான பின்பு திருநெல்வேலி மாவட்டம் தென்பகுதிக் கிராமங்களிலிருந்து பிராமணர்களும் வேளாளர்களும் திருவிதாங்கூரில் குடியேறினர். அப்படிக் குடியேறிய ஊர்களில் பீமநகரியும் ஒன்று. கே.என்.சிவராஜ பிள்ளை நாகர்கோயிலில் பள்ளி இறுதிக்கல்வி முடித்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ.பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

கே.என்.சிவராஜ பிள்ளை பி.ஏ. படிப்பு முடிந்ததும் காவல்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். திருவனந்தபுரத்தில் குதிரைப் பயிற்சி காவல்துறை பயிற்சி, என முடித்துக்கொண்டு திருவனந்தபுரத்தில் முதலில் வேலைபார்த்தார். வ்காவல்துறை வேலையை விட்டபின் திருவனந்தபுரத்தில் காடு வெட்டும் குத்தகை வேலைபார்த்தார். இந்த காலகட்டத்தில் செல்லம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். 1923-25இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்தார்.

இலக்கியவாழ்க்கை

திருவனந்தபுரம் வாழ்க்கை
K.N.Sovaraja Pillai

திருவனந்தபுரத்தில் காவல்துறையில் இவர் பணி செய்தபோது தமிழ் இலக்கியங்களை முறையாகப் படித்தார். திருவனந்தபுரத்தில் தீவிர வாசிப்புடைய தமிழறிஞர்களின் தொடர்பு கிடைத்தது.மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ,எஸ்.வையாபுரிப்பிள்ளை, கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை பண்டிதர் முத்துசாமிப்பிள்ளை, இசையறிஞர் தி.லக்ஷ்மண பிள்ளை ஆகியோருடன் தொடர் உரையாடலில் இருந்தார். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அப்போது Directory of Archaeology என்னும் தொகைநூலை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

பீமநகரியின் அருகில் இருந்த நம்மாழ்வார் மங்களா சாசனம் செய்த திருப்பதி சாரம் என்ற ஊரிலிருந்து கம்பராமாயண ஏடுகளையும் திவ்வியப்பிரபந்த ஏடுகளையும் சிவராஜபிள்ளை சேகரித்து வையாபுரிப் பிள்ளைக்குக் கொடுத்திருக்கிறார்.கம்பராமாயணம் குமரேச பிள்ளை என அழைக்கப்பட்ட சிவராஜ் பிள்ளையின் அண்ணன் குமரேசபிள்ளையின் வழியாக கம்பராமாயணத்தில் அவருக்கு ஆர்வம் வந்தது.

திருவனந்தபுரம் புத்தம்சந்தையில் உள்ள சைவப்பிரகாச சபையில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை உள்ளிட்ட அறிஞர்கள் கூடி விவாதித்துவந்தனர். கே.என்.சிவராஜ பிள்ளையும் அவ்விவாதங்களில் ஈடுபட்டார்.திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக் கழகம் என்னும் அமைப்பு சார்பில் பொதுவிவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ராஜாஜி தலைமையில் Trivandrum Literary Club அரங்கில் இலக்கியக் கழகம் சார்பில் நிகழ்ந்த ஒரு பொதுவிவாதத்தில் கே.என்.சிவராஜ பிள்ளை வர்ணாசிரம முறை இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை என்று பேச வர்ணாசிரமத்தை ஆதரித்து சுப்ரமணிய ஐயர் எம்.ஏ பேசினார். இவ்விவாதங்களை தொகுத்து கே.என்.சிவராஜ பிள்ளை Indian Social idol Review என்ற பேரில் 200 பக்க நூலாக வெளியிட்டார். வர்ணாசிரம தர்மம் ஆரியர்களால் திராவிடர்கள் மேல் சுமத்தப்பட்டது என்று அதில் கே.என்.சிவராஜ பிள்ளை வாதிட்டார். சடங்குகளுக்கும் சாதிகளுக்கும் பிரிக்கமுடியாத உறவுள்ளது என்று கூறினார். பின்னாளில் திராவிட இயக்கத்தவர் இந்நூலின் கருத்துக்களை விரிவாக எடுத்தாண்டனர். திருவனந்தபுரம் சமூக உரிமைக் கழகம் என்ற அமைப்பில் முதல் மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு சிறுபிரசுரமாக வந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில்

கே.என்.சிவராஜ பிள்ளை அமெரிக்க இதழான Monist ல் Indian Objectives என்னும் தலைப்பில் ஐந்து நீண்ட கட்டுரைகள் எழுதினார். இவை பின்னர் அமெரிக்க பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டன. 1925ல் யாழ்ப்பாணம் சென்று அங்கே சர். பொன்.ராமநாதன் எழுதிய கம்பராமாயண ஆய்வுரையை செம்மைசெய்து பதிப்பித்தார்.

சென்னை பல்கலைகழக ஆசிரியர் பணி
k.N.Sivaraja Pillai

1926ல் வையாபுரிப்பிள்ளை சென்னைக்கு பேரகராதிப் பணிக்காக வந்தார். சென்னை பல்கலை கழகத்திற்கு சிவராஜ பிள்ளையை வையாபுரிப்பிள்ளை பரிந்துரை செய்தார். 1926 முதல் 1937 வரை ஒன்பதாண்டுகள் சென்னை பல்கலை கழக தமிழ்த்துறையில் கே.என்.சிவராஜ பிள்ளை பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் அனவரத விநாயகம் பிள்ளை, வெங்கடராஜூலு ரெட்டியார் போன்றோரும் மலையாள ஆராய்ச்சித் துறையில் அச்சுத மேனனும் இருந்தனர். இந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் இவரது மூன்று நூல்களை வெளியிட்டது. இங்கு ஆராய்ச்சித் துறையில் முதுநிலை விரிவுரையாளர் என்னும் பதவியில் இருக்கும்போது ஓய்வு பெற்றார்.

எழுத்துக்களும் பதிப்புக்களும்

சிவராஜபிள்ளை எழுதிய நூல்கள். 2 ஆங்கில நூல்கள், 4 கவிதை நூல்கள், 2 சொல்லாராய்ச்சி நூல்கள். பல நூல்கள் அச்சில் வராத கையெழுத்துப் பிரதிகளாக நின்று போயின. முதலில் 1920இல் தொகுத்த நூல் சிறுபாமாலை. திருவனந்தபுரம் இலக்குமணபிள்ளை, பண்டித முத்துசாமி பிள்ளை, கவிமணி போன்றோர் எழுதிய குழந்தைப் பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன.1927இல் நெல்லைத் தமிழ்க்கழகம் வெளியிட்ட மேகமாலை கவிதைத் தொகுப்பு முத்தையா பிள்ளையின் உதவியுடன் வந்தது. குமரன், பத்திரிகையில் விருத்தப்பாவால் ஆன கம்பராமாயண கௌஸ்துபம் பாடல்களின் விமர்சனம் வெளிவந்தது. உந்து என்னும் சொல்லாராய்ச்சி அல்லது புறநானூற்றின் பழைமை (1929), Agastiya in the Tamil Land (1930), The Chronology of the Early Tamils (1932) ஆகிய மூன்று நூல்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிவராஜ பிள்ளை பணி செய்தபோது வெளிவந்தவை.

1935இல் சென்னையில் இருக்கும்போது நாஞ்சில் வெண்பா என்ற கவிதை நூலை வெளியிட்டார். 1968இல் இவர் இறந்த பிறகு சில தமிழ்மொழி ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தன. சிவராஜ பிள்ளை எழுதி அச்சில் வராத நூல்களாக வாழ்க்கை நூல், சிறுநூல் தொகை, இயற்கைப் பாவினமும் சில்லறைப் பாக்களும், நாட்டுக்கண்ணிகளும் சந்தப்பாக்களும், இசைப் பாட்டுகள், அருவியின் கதை, புதுஞானக்கட்டளைக் கலிப்பா ஆகியன உள்ளன. இவர் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளும் நூல் வடிவில் வரவில்லை.

இவரது அச்சில் வராத கவிதைகளில் வாழ்க்கைநூல் குறட்பா வடிவில் அமைந்தது. இது 6 இயல்கள், 160 அதிகாரம், 2118 குறள்கள் கொண்டது. அதிகாரத்துக்கு 10 முதல் 30 பாடல்கள். இவர் 1939இல் இதை எழுதியபோது திருநெல்வேலிப் பதிப்பாளர் அச்சிட முன்வந்திருக்கிறார். சிவராஜ பிள்ளை ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டார்.

நாகர்கோவிலில் சிதம்பரநகர் ஜங்ஷனில் சிவராஜபிள்ளை வாழ்ந்த வீட்டின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் அவரது நூற்றாண்டுவிழா நடந்தது (1979 பெப்ருவரி). தியாகி பி.எஸ். மணி ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் 'சில தமிழ்ச்சொல் ஆராய்ச்சி' நூல் வெளியிடப்பட்டது. அவரது கையெழுத்து பிரதிகள் பல தொலைந்து போயின என்றும், வாழ்க்கைநூல் என்னும் நூலின் கையெழுத்துப் பிரதி மட்டும் தம்மிடம் இருப்பதாகவும் அது வெளியிடப்படும் என்றும் சிவராஜ பிள்ளையின் உறவின் ஒருவர் கூறினார். ஆனால் அது வந்ததாகத் தெரியவில்லை.

1898இல் திருவனந்தபுரம், சாலை செந்தமிழ்க் கழகத்தில் இவர் பேசிய பேச்சு செந்தமிழ் தொகுதி 19 இல் உள்ளது. இதைச் சென்னைப் பல்கலைக்கழகம் (1981) வெளியிட்டுள்ளது. இது கவிதை பற்றிய விமர்சனம். ஒருவகையில் சிவராஜ பிள்ளையின் கருத்தாக்கமாக இக்கட்டுரைப் பகுதியைக் கொள்ளலாம். இது 1921இல் “செந்தமிழ் கவிவாணருக்கு” என்ற தலைப்பில் செந்தமிழில் வெளியானது.

இதழியல்

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் People's Opinion நின்றுபோன பிறகு Malabar Quarterly Review மும்மாத ஆராய்ச்சி இதழை சிவராஜ பிள்ளை நடத்தினார். இதை நடத்துவதற்கென்று ஓர் அச்சகத்தை விலைக்கு வாங்கினார். திருவனந்தபுரம் கூப்பு வியாபாரம் நஷ்டமானபோது பத்திரிகையும் நின்றுபோனது. பின்னர் பீம நகரிக்கு வந்து நாஞ்சில்நேசன் என்னும் பத்திரிகையை ஆரம்பித்தார். கவிமணியின் சில கவிதைகள் இதில் வந்தன. கன்னடியன் கால் பற்றிய சிறு குறிப்பும் எழுதியிருக்கிறார். "அப்போது இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு ஆளில்லாமல் பீமநகரியில் இருந்ததுதான் தண்டனை” என்று சொல்லியிருக்கிறார் என்றும் இது பெரும்பாலும் என்று 1923ஆக இருக்கலாம் என்றும் அ.கா. பெருமாள் தன் தமிழறிஞர்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். 1937இல் ஜனமித்திரன் என்ற மும்மாத இதழை ஆரம்பித்தார். இது ஓராண்டு நடந்தது.

1893இல் விவேகானந்தர் திருவனந்தபுரம் வந்தபோது சுந்தரம்பிள்ளையுடன் அத்வைதம், சைவசித்தாந்தம் பற்றி நடத்திய விவாதம் பற்றிய கட்டுரையை சிவராஜ பிள்ளை People's Opinion பத்திரிகையில் எழுதினார். இவர் நடத்திய Malabar quarterly Review இதழில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை "Nancil Nadu Vellalas" என்ற 30 பக்கக் கட்டுரையை எழுதினார். இராவணன் ஆரியனா திராவிடனா என்னும் விவாதத்தை இலங்கை பொன்னம்பலம் பிள்ளை ஆரம்பித்ததற்கு Malabar Quarterly Review காரணமாக இருந்தது.

முதன்மை ஆராய்ச்சிக் கருத்துக்கள்

உந்து என்னும் இடைச்சொல் பிரயோகம்

கே.என்.சிவராஜ பிள்ளையின் ’உந்து என்னும் இடைச்சொல் பிரயோகம் அல்லது புறநானூற்றின் பழைமை’ என்ற நூல் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த ஆராய்ச்சி நூல். இந்நூலில், புறநானூற்றில் வரும் உந்து என்னும் வினைமுற்று குறித்த ஆய்வின்வழி அந்நூலின் காலத்தை வரையறை செய்யலாம் என்கிறார். உந்து என்பது திணை, பால், எண், இடம், சுட்டாத வினைமுற்று. தொல்காப்பியர் இதுகுறித்து இலக்கணம் வகுக்கவில்லை. அதனால் புறநானூற்றுப் பாடல்களுக்கும் பிற்பட்டது தொல்காப்பியம்; கோவூர்கிழார் உட்பட புலவர்களின் பாடல்களின் சொல், நடை, போக்கு அடிப்படையில் தொல்காப்பியம் புறநானூறுக்குப் பிற்பட்டது. வடமொழிச் சொற்களின் கலப்பு இல்லாத பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அதனால் தொல்காப்பியம் புறநானூற்றுக்கு பிற்பட்டது என்னும் செய்திகளை முன்வைத்தார்.

அகத்தியர்

சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான Agastya in the Tamil land (1930) என்னும் ஆங்கில நூலில் Early History of Decah (Bhahdagar), History of Ancient Sanskrit Literature (Maxmuller), The Great Epic of India (Hopkins) ஆகிய மூன்று நூல்களின் அடிப்படையில் அகத்தியரை ஆராய்ந்தார். அகத்தியரை இராமாயண, ரிக்வேத நூல்களின்படி பார்ப்பது வழக்கம். அகத்தியர் குறித்த தொன்மம் கம்போடியா, இந்தோனேஷியா தீவுகளில் உண்டு. பெரும்பாலும் இவை கற்பனையின் அடிப்படையில் உருவானவை. தொல்காப்பியர் அகத்தியரைக் குறிக்கவில்லை. காரிக்கண்ணனார் ஆலத்தூர் கிழார், தாமப்பல் கண்ணனார் போன்ற புலவர்களின் பாடல்களின் அடிப்படையில் அகத்தியரைப் பார்ப்பனர் என்று முடிவு செய்துள்ளனர். எனவே அகத்தியர் குறித்த பழைய தொன்மத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்கிறார்.

சங்கப்பாடல்கள் வரலாறு

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட The Chronology of the Early Tamils (1932) என்ற புத்தகம் கே.என்.சிவராஜ பிள்ளையின் முதன்மையான ஆய்வுநூல். இந்நூலில் சங்கப் பாடல்களை வரலாற்று ரீதியில் ஆய்வு செய்கிறார்.நான்கு பெரிய தலைப்புகளும் 87 உள் தலைப்புகளும் கொண்ட இந்நூலில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட திராவிடர் பற்றிய ஆய்வுச் செய்திகள் உள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க இலக்கியங்கள் என்ற வரிசையில் அடக்கும் கே.என்.சிவராஜ பிள்ளை சங்கம் என்னும் அமைப்பு உண்மையில் இருந்ததில்லை என்பதற்குப் பத்துக் காரணங்கள் கூறுகிறார். சங்கப்பாடல்கள் தொகுக்கப்பட்ட முறையையும் விவரிக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை மட்டுமேசங்க இலக்கியம் என வரையறை செய்கிறார்.அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றைத் தொகுத்தவர் பெருந்தேவனார் என்றும் நல்லந்துவனார் கலித்தொகையை தொகுத்தவர் என்றும் கூறும் கே.என்.சிவராஜ பிள்ளை பரிபாடல் பிற்காலத்தது என நிறுவுகிறார்.

கே.என்.சிவராஜ பிள்ளை சங்கப் பாடல்களின் அடிப்படையில் அரசர்களைப் பத்து தலைமுறைகளாக வரிசைப்படுத்துகிறார். முதல் தலைமுறையினர் செழியன், தித்தன் போன்ற சோழர்கள். இவர்களில் சிலர் உறையூரைக் கைப்பற்றியவர்கள். பத்தாம் தலைமுறையினர் கோச்செங்கண் சோழன். பழந்தமிழ் மன்னர்கள் கிமு 50 முதல் 200வரை வாழ்ந்தவர்கள் என்கிறார். இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வரவில்லை.

தமிழ்ச்சொல் ஆராய்ச்சி

சில தமிழ்ச்சொல் ஆராய்ச்சி என்ற நூல் சிவராஜ பிள்ளையின் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்டது(1997). 79 சொற்கள், தொடர்கள் பற்றிய ஆராய்ச்சி நூல். உ.வே.சாவின் சங்கப் பதிப்புகளில் சில இடங்களில் சரியானபடி பொருள் இல்லை என இதில் மறுக்கிறார். இந்நூலில் ஓரிடத்தில் "எனது தொல்காப்பிய உரிச்சொல்” ஆராய்ச்சியில் காண்க என்கிறார். சிவராஜ பிள்ளை தொல்காப்பிய உரிச்சொல் நிகண்டு என்ற நூலை எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. அந்நூல் கிடைப்பதில்லை.

மறைவு

1937இல் சிவராஜ பிள்ளை ஓய்வுபெற்றபின் நாகர்கோவில், சிதம்பர நகரில் ஒரு வீட்டைக்கட்டிக்கொண்டு வாழ்ந்தார். அவர் ஓய்வுபெற்றபின் தீவிரமாய் எழுதவில்லை. கவிதையிலும் தத்துவத்திலும் ஈடுபாடு காட்டினார். ஆனால் அவர் தத்துவவாதியாகவோ கவிஞராகவோ அடையாளப்படுத்தப்படவில்லை. 1941இல் நாகர்கோவில் சிதம்பரநகர் ஜங்ஷனில் இருந்த தன் இல்லத்தில் தன் 62 வயதில் காலமானார்.

பங்களிப்பு

தமிழிலக்கிய வரலாற்றை தொல்லியல் சான்றுகள், மொழிச்சான்றுகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு புறவயமான ஆய்வுமுறைமையை கடைப்பிடித்து ஆய்வுசெய்த முன்னோடிகள் என கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகிய மூவரும் குறிப்பிடப்படுகிறார்கள். கே.என்.சிவராஜ பிள்ளை அந்த மரபை முன்னெடுத்தவர். மிகக்கறாரான ஆய்வுமுறைமையை வலியுறுத்தியவர்.தமிழிலக்கியங்களின் காலங்களை வரையறை செய்வதில் பழைய இலக்கியங்களின் சொல்லாட்சிகள், அரசியல் சமூகச்செய்திகள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்குரிய முறைமையை உருவாக்கியவர் என கே.என்.சிவராஜ பிள்ளை குறிப்பிடப்படுகிறார்.

நூல் பட்டியல்

கவிதை

  • மேகமாலை கவிதைத் தொகுப்பு 1927
  • நாஞ்சில் வெண்பா 1935

ஆய்வு நூல்கள்

  • சிறுபாமாலை 1920
  • கம்பராமாயண கௌஸ்துபம்
  • உந்து என்னும் சொல்லாராய்ச்சி அல்லது புறநானூற்றின் பழைமை - 1929
  • Agastiya in the Tamil Land – 1930
  • The Chronology of the Early Tamils – 1932

கட்டுரை

  • செந்தமிழ் கவிவாணருக்கு 1921
  • Nancil Nadu Vellalas – 1922

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.