வெட்சி அரவம்
வெட்சி அரவம் வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. நிரை கவர்தலை விரும்பிய வெட்சி மறவர்கள் ஒன்று கூடிச் செல்லும் போது எழும் ஓசை காரணமாக இத்துறை வெட்சி அரவம் எனப் பெற்றது .
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் பகைவரது ஆநிரைகளைக் கவர்வதற்காக, அவர்களது போர்முனைக்குச் செல்ல வெட்சி மறவர்கள் விரும்புவார்கள். அவ்வாறு விரும்பிச் செல்லும் போது எழும் ஓசை வெட்சி அரவம் என இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கலவார் முனைமேல்
செலவு அமர்ந்தன்று.(கொளு )
வெண்பா
நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
அடிபடுத்து ஆரதர் செல்வான் - துடிபடுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி கலுழும் (3)
பொருள்: நெடிய வேற்படையைக் கொண்ட வெட்சி மறவர்கள் தமது காலில் வீரக்கழலைப் பூட்டி, சிள்வீடு என்னும் வண்டுகள் ஒலிக்கும் காட்டின்கண் கடத்தற்கரிய வழியைத் துன்பமின்றிக் கடப்பதற்காகப் பாதங்களில் செருப்பை அணிந்து, துடியைக் கொட்டி வெட்சிப் பூவைச் சூடுகின்றார்கள். துடியைக் கொட்டியதும் பகைவருடைய ஆநிரைகள் தங்கும் காவற்காட்டில் காரி என்னும் பறவை தீநிமித்தத்தை அறிவிப்பது போல அழுகையொலியை எழுப்புகின்றது. வெட்சியார் நாட்டில் துடி ஒலி ; பகைவரது காவற்காட்டில் காரியின் அழுகை யொலி.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:50:56 IST