standardised

தி. தேசிகாச்சாரியார்

From Tamil Wiki
தி. தேசிகாச்சாரியார்

தி. தேசிகாச்சாரியார் (1868-) கல்வெட்டாய்வாளர், நாணயவியலாளர், வரலாற்றாசிரியர். திருச்சியின் புகழ்பெற்ற அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

தி. தேசிகாச்சாரியார் 1868-ல் செங்கற்பட்டு மாவட்டம் கோயிலாம்பாக்கத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் திருமலாச்சாரியார்.

அரசியல் வாழ்க்கை

திருச்சி நகராட்சியின் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவராகவும் பணியாற்றினார். 1913-ல் திருச்சி மாகாண காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை நடத்தினார். திருச்சி நகராட்சி மன்றத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார். 1909 முதல் 1911 வரை திருச்சி நகராட்சித் தலைவராகப் பதவிவகித்தபோது மலைக்கோட்டையில் குடிநீர்தொட்டியைக் கட்டினார். 1917-ல் ஜில்லா போர்டு தலைவராக இருந்தபோது மாமுண்டி ஆறு, மருதையாறு மற்றும் பல ஓடைகளிலும் சிற்றாறுகளிலும் பாலங்கள் கட்டினார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பஞ்சாயத்து மன்றங்கள் செயல்பட சட்டங்கள் இயற்றினார். அனைத்திந்திய அளவில் பல சட்டமன்ற ஆய்வுக் குழுக்கள், நீதிவிசாரணைக் குழுக்கள், நிலங்கள் பற்றிய சட்ட நீதி விசாரனைக் குழுக்கள், நிலங்கள் பற்றிய நீதிவிசாரணைக் குழுக்கள், நிலங்கள் பற்றிய சட்டங்கள், ஆய்வுக்குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

கோவில் பணிகள்

சட்டமன்றத்தில் இருந்தபோது இந்து அறநிலையத்துறையின் கீழ் பல ஆலயங்களைக் கொண்டு வந்தார். கோவில் நிர்வாகச் சீர்திருத்தங்கள், சொத்துக்களின் வரவு செலவு பற்றிய நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான 57 கிராமங்களை அரசு எடுத்துக் கொண்டதை எதிர்த்துப் போராடினார். ஸ்ரீரங்கம் கோவில் நிதிப்பற்றாக்குறையைப் போக்க பரிசுச்சீட்டுத்திட்டத்தினைக் கொணர்ந்து அதன் வழி கோவிலுக்கு பல நிலங்கள் வாங்கினார். ஸ்ரீரங்கம் கோவில், உறையூர் நாச்சியாரம்மன் கோவிலுக்கு திருப்பணிகள் செய்தார்.

சமூகப் பணிகள்

தி. தேசிகாச்சாரியாரின் முயற்சியால் திருச்சிரப்பள்ளி மின் வழங்கு நிலையம் சேஷாயி சகோதரர்களால் தோற்றுவிக்கப்பட்டது. 1919 ஜூனில் நீதிபதி சேஷகிரி ஐயர், என்.டி.சுப்பராம ஐயர், சிவராம கிருஷ்ண ஐயர் ஆகியோருடன் இணைந்து திருச்சி நேஷனல் காலேஜ் உருவாக்கத்தில் பங்கெடுத்தார்

ஆய்வுப்பணி

தென்னிந்திய கல்வெட்டுத்துறை, நாணய ஆய்வுத்துறைப்பணியில் ஈடுபாடு கொண்டவர். புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகளையும் நாணயங்களையும் சேகரித்து ஆவணப்படுத்தி, காலவரிசைப்படுத்தி, வரலாற்றாய்வுக்கட்டுரைகள் எழுதினார். சோழர்கால, மற்றும் பல்லவர்கால நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகளைப் பற்றிய முக்கியமான தரவுகளை முன்வைத்தார். The Tamilan Antiquery போன்ற ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

தேசிகாச்சாரியாரின் முதன்மையான நூல் 1933ல் வெளிவந்த South indian coins. சோழர், பல்லவர் காலகட்டத்தின் நாணயங்களை தொகுத்து ஆராயும் இந்நூல் அக்கால வரலாற்றாய்வின் அடிப்படைத் தரவுகளை அளித்தது.

விருது

  • ஆங்கில அரசு தி.தேசிகாச்சாரியாருக்கு திவான் பகதூர் பட்டம் அளித்தது.
  • ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் அளித்தது.
  • ஆங்கில அரசு இவரது பொதுப்பணிகளை பாராட்டி ஒரு பாலத்திற்கு சர்.டி. தேசிகாச்சாரி பாலம் என்று பெயரிட்டது.

ஆய்வுக்கட்டுரைகள்

நூல்கள்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.