being created

பரணீதரன்

From Tamil Wiki
பரணீதரன்

ஆன்மிக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர் பரணீதரன் (டி.எஸ். ஸ்ரீதர்: 1925-2020) ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய ‘அருணாசல மகிமை’ தொடர், பலரை ஆன்மிக வாசிப்பு நோக்கி ஈர்த்த தொடராகும். மகான்கள் பலரைப் பற்றிப் பல நூல்களைப் படைத்தவர் பரணீதரன்.

பிறப்பு, கல்வி

பரணீதரன், டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில், டி.என். சேஷாசலம்-ருக்மிணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சேஷாசலம் தமிழறிஞர். வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும் அதனைத் தொழிலாகக் கொள்ளாமல், ‘கலாநிலயம்’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். நாடகத்திலும் ஆர்வம் உடைய சேஷாசலம், ஆங்கில நாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றி வந்தார்.

வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சூழலில் பரணீதரன் வளர்ந்தார். எப்போதும் தமிழறிஞர்களும், நாடகக் கலைஞர்களும் நிரம்பியிருந்த இல்லச் சூழல்களால் இலக்கியத்தாலும் நாடகத்தாலும் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார். வீட்டிற்கு வந்த சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் உள்ளிட்ட இதழ்களை வாசித்தும், புரசைவாக்கத்தில் இருந்த ரீடிங் ரூமிற்குச் சென்று படித்தும் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் பரணீதரன்.

கார்ப்பரேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்ற பரணீதரன், உயர்நிலைக் கல்வியை முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், தி.நகர். ராமகிருஷ்ணா பள்ளியிலும் படித்தார். திடீரெனத் தந்தை காலமானதால் பரணீதரனின் கல்வி தடைப்பட்டது. அண்ணன் மற்றும் உறவினர்களின் உறுதுணையால் லயோலா கல்லூரியில் பி.கா.ம் படிப்பை நிறைவு செய்தார்

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தார்.

சிறுவனாக இருந்தபோது ‘கலாநிலயம்’ இதழுக்காக அச்சடிக்கப்பட்ட வெள்ளைக் காகிதங்களில் பொழுது போக்காக கேலிச் சித்திரங்கள் வரைவார் பரணீதரன். அனைவரும் நன்றாக இருப்பதாகப் பாராட்டவே, விகடனில் மாலி வரைந்திருக்கும் கார்டூன்களைப் பார்த்து அதே மாதிரி வரைய முயன்றார். அந்தப் பயிற்சிகளே பிற்காலத்தில் பரணீதரன் கார்ட்டூனிஸ்ட் ஆக உதவியது.

1942-ல் ஒருமுறை திருவிசைநல்லூருக்குச் சென்றார் பரணீதரன். அது விகடன் ஓவியர் மாலியின் சொந்த ஊர். மாலியைச் சந்தித்தவர், தான் வரைந்த ஓவியங்களைக் காட்டினார். மாலி ‘தொடர்ந்து வரைந்து கொண்டிரு’ என்று வாழ்த்தினார். அதையே ஒரு ஆசிர்வாதமாகக் கொண்டு ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார் பரணீதரன்.

கார்ட்டூனிஸ்ட் சீலி

சீலியின் கேலிச் சித்திரம் (நன்றி : சுதேசமித்திரன்)

சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக ‘நீலம்’ என்ற புனைபெயர் கொண்ட நீலமேகம் பணிபுரிந்து வந்தார். அவரை அணுகி வாய்ப்புக் கேட்டார் பரணீதரன். நீலமும் இதழில் இடம் பெறும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு கேலிச் சித்திரம் வரைந்து தருமாறு பரணீதரனிடம் கேட்டுக் கொண்டார். தனது செல்லப் பெயரான ‘சீலி’ என்ற புனைபெயரில் சுதேசமித்திரன் இதழுக்குத் தொடர்ந்து பல நகைச்சுவைக் கேலிச் சித்திரங்களை வரைய ஆரம்பித்தார் பரணீதரன். அவரது இதழியல் பயணம், சுதேசமித்திரன் மூலம் 1945-ல் தொடங்கியது.

தொடர்ந்து சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, தொடர்களுக்கு என்று சிறு சிறு ஓவியங்கள் வரைந்தார். கோமதி ஸ்வாமிநாதனின் சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, ய.மகாலிங்க சாஸ்திரியின் “தலை தூபாவளி” என்ற நகைச்சுவைத் தொடர் கதைக்கு, என்.எஸ்.ஸ்ரீ. எழுதிய ‘அலமுவின் கடிதங்கள்’ என்ற தொடருக்கு வரைந்திருக்கிறார் பரணீதரன்.

கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர்

ஸ்ரீதரின் கேலிச்சித்திரங்கள் (நன்றி ஆனந்தவிகடன் இதழ்)

ரிசர்வ வங்கித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார் பரணீதரன். வேலைக்கான உத்தரவும் கையில் வந்தது. ஆனாலும், 1949 ஜனவரியில், ஏதோ ஓர் உந்துதலில் விகடனுக்குத் தன்னைப் பற்றி எழுதி அனுப்பினார். உடனே எஸ்.எஸ். வாசனை நேரில் சந்திக்குமாறு அவருக்கு அழைப்பு வந்தது. தனது கார்டூன்களையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் எடுத்துக் கொண்டு வாசனைச் சந்தித்தார். விகடனில் கார்ட்டூன் வரைய வாய்ப்புத் தந்தார் எஸ்.எஸ். வாசன்.

ஆனந்த விகடனில், பரணீதரனின் முதல் கார்ட்டூன், ஸ்ரீதர் என்ற அவரது இயற்பெயரில், 23-01-1949 தேதியிட்ட இதழில் வெளியானது. தொடர்ந்து உலக அரசியல், இந்திய அரசியல் தொடர்பான பல கார்ட்டூன்களை வரைந்தார் பரணீதரன். சுமார் பத்துவருடங்களில் பல நூற்றுக்கணக்கான கார்ட்டூன்களை வரைந்தார். இதழியல் நுணுக்கங்கள் அனைத்தையும் எஸ்.எஸ். வாசனிடம் கற்றுத் தேர்ந்தார்.

1956-ல் விகடனின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் பரணீதரன். அதே ஆண்டில் எஸ்.பாலசுப்பிரமணியனும் விகடனின் ஜே.எம்.டி. ஆகச் சேர்ந்தார். இருவரும் இணைந்து புதிய பல முயற்சிகளை முன்னெடுத்தனர்.

பல ஆன்மீகத் தலைவர்களுடனும், காமராஜ், ராஜாஜி போன்ற அரசியல் தலைவர்களுடனும், திரைப்படக் கலைஞர்கள் சிலருடனும் நட்புக் கொண்டிருந்தார் பரணீதரன். அவை பல அனுபவக் கட்டுரைகளை அவர் எழுதக் காரணமாயின.

ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன்

ஆலய தரிசனம் புத்தக விளம்பரம் (நன்றி : ஆனந்த விகடன்)

ஆனந்த விகடனில் பரணீதரனின் முதல் ஆன்மிகத் தொடர் ‘சென்னையில் பொன்மாரி’ என்பதாகும். 1957-ல், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்னையில் தங்கியிருந்தார். மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் சந்திரசேகரர் ஆற்றிய உரைகளைத் தொகுத்து ஆனந்த விகடனில், ‘‘சென்னையில் பொன்மாரி’ என்ற தலைப்பில் தொடராக எழுதினார் பரணீதரன். அதுவே ஆன்மிகம் பற்றி அவர் எழுதிய முதல் தொடர். அதற்கு காஞ்சிப் பெரியவரின் ஆசியும் கிடைத்தது. தொடர்ந்து விகடனில் பல ஆன்மிகக் கட்டுரைகளை, தொடர்களை எழுத ஆரம்பித்தார் பரணீதரன்.

1959 -ல் முதல் ஆலய தரிசனக் கட்டுரை ‘நாகலாபுர தரிசனம்’ வெளியானது. 1968-ல் ‘ஆலய தரிசனம்’ என்னும் தலைப்பில் தனது முதல் ஆன்மிகப் பயணக் கட்டுரையை எழுத ஆரம்பித்தார் பரணீதரன். பத்ராசலம், பண்டரிபுரம், நாசிக், ஷீரடி, மந்த்ராலயம் போன்ற இடங்களுக்குச் சென்று அதன் மகத்துவம் பற்றியும் ஷீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்களின் வாழ்க்கை பற்றியும் மிக விரிவாக அத்தொடரில் எழுதியிருந்தார் பரணீதரன். அந்தத் தொடருக்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. பிற்காலத்தில் விகடன் அதனை நூலாகவும் வெளியிட்டது. அதுவும் பல பதிப்புகள் கண்டது.

பரணீதரனின் புத்தகங்களில் சில...

தொடர்ந்து விகடனில் அருணாசல மகிமை, அன்பே அருளே, திருத்தலப் பெருமை, ஸ்ரீமத்வரும் மடாலயங்களும் எனப் பல ஆன்மிகத் தொடர்களை எழுதினார். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களைச் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டறிந்து “பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்” என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். முத்துசுவாமி தீக்ஷிதர் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து நூல் ஒன்றை வெளியிட்டார். தீட்சிதர் பயணம் செய்த திருத்தலங்கள் பற்றி விசாரித்து அறிந்து, அந்த இடங்களுக்கெல்லாம் பயணம் செய்து, பல்வேறு ஆதாரபூர்வமான தகவல்களைத் திரட்டி ’தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்’ என்ற தலைப்பில் அதனை நூலாக வெளியிட்டார்.

அருணாசல மகிமை

பரணீதரனுக்கு மிகவும் புகழ் சேர்த்த தொடர் அருணாசல மகிமை. இது ஆனந்த விகடன் இதழில் 1969-ல் தொடராக  வெளியானது. இந்தத் தொடருக்கு வாசகர்களிடையே மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. சேஷாத்ரி சுவாமிகளில் தொடங்கி, விட்டோபா சுவாமிகள், ரமண மகரிஷி, பூண்டி மகான் ரத்தினகிரி பாலமுருகனடிமை மௌனசுவாமிகள், ஞானானந்தகிரி சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், சாதுராம் சுவாமிகள், யோகிராம்சுரத்குமார், ஈஸ்வர சுவாமிகள் என்று பல மகான்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது அருணாசல மகிமை.

பூண்டி மகான், ஞானானந்த கிரி சுவாமிகள், சாதுராம் சுவாமிகள், யோகிராம்சுரத்குமார், ஈஸ்வர சுவாமிகள் எனப் பல மகான்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களைச் சந்தித்து உரையாடி அந்த அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்திருந்தார் பரணீதரன். மகான்களின் அறிவுரைகள், அவர்கள் செய்த அற்புதங்கள் என்று பல விஷயங்களை இந்தத் தொடர் விரிவாக ஆவணப்படுத்தியது. இதனை விகடன் பதிப்பகம் 1972-ல் நூலாக வெளியிட்டது. பிற்காலத்தில் இதனை கலைஞன் பதிப்பகம் மறுபதிப்புச் செய்தது.

நாடக ஆசிரியர் மெரீனா

பரணீதரனின் தந்தை நாடக ஆசிரியராக இருந்தவர். தமிழ்நாடெங்கும் பயணப்பட்டு பல நாடகங்களை மேடையேற்றியவர். அவரது இல்லமே நாடகப் பயிற்சிக் கூடமாக விளங்கியது. அதைப் பார்த்து வளர்ந்த காரணத்தாலும் அந்த அனுபவத்தாலும் பரணீதரனுக்கும் நாடகத் துறையின் மீது ஆர்வம் வந்தது. நாடகத்திற்காக ’பரணீதரன்’ சூட்டிக் கொண்ட புனை பெயர் ‘மெரீனா’

முதலில் ‘மெரீனா’ என்ற பெயரில், ‘காதல் என்ன கத்திரிக்காயா?’ என்ற தொடரை விகடனில் எழுதினார் பரணீதரன். தொடர்ந்து ‘வடபழநியில் வால்மீகி’ என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். தனது தந்தையின் நினைவாக தனது நாடகக்குழுவை ‘கலா நிலயம்’ என்ற பெயரிலேயே தொடர்ந்தார். கலாநிலயத்தாரால் முதன் முதலில் ’வடபழநியில் வால்மீகி’ நாடகமாக மேடையேற்றப்பட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பால், ‘தனிக்குடித்தனம்’ என்ற நாடகத்தை எழுதினார் பரணீதரன். அது பல நூற்றுக்கணக்கான முறை மேடையேறியதுடன்’ மெரீனா’வுக்கு ஓரு அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நாடகம் அரங்கேறியது. பின்னர் எல்.பி. ரெகார்ட் ஆகவும் இது வெளியானது. எல்.பி. ரெகார்ட் ஆக வெளியான முதல் தமிழ் நாடகம் ‘தனிக்குடித்தனம்’ தான். இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது.

பரணீதரனின் நாடகங்கள், சென்னை நகரில் வாழும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக பிராமணக் குடும்பங்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பவை.

தொடர்ந்து ‘ஊர் வம்பு’, ‘கால்கட்டு’, ‘சாந்தி எங்கே’, ‘மாப்பிள்ளை முறுக்கு’, ‘சாமியாரின் மாமியார்’, ‘அடாவடி அம்மாக்கண்ணு’, ‘கூட்டுக் குடித்தனம்’ போன்ற பல நாடகங்களை எழுதினார். அவையும் மேடையேறி நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘கஸ்தூரி திலகம்’, காந்தியின் மனைவியான கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிப்பதாகும்.

ரசிக ரங்கா

1979-ல், தனது நண்பர்களுடன் இணைந்து ரசிக ரங்கா என்ற நாடக்குழுவை ஏற்படுத்தினார் பரணீதரன். அக்குழு மூலம் தனது நாடகங்கள் பலவற்றை மேடையேற்றினார். தனது நாடகங்களை 500 தடவைகளுக்கும் மேல் அரங்கேற்றியுள்ள பெருமை இவருக்கு உண்டு. ஒரு வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று இவரது 11 நாடகங்கள், ஒரேநாளில் தொடர்ந்து அரங்கேறியுள்ளன. இவரது ‘எங்கம்மா’ என்ற நாடகம், வானொலியில் தேசிய நிகழ்ச்சியாக ஹிந்தியிலும், பிற மாநில மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஒலிபரப்பானது.

பரணீதரன் 1985-ல் ஆனந்த விகடனில் இருந்து பணி ஓய்வு பெற்றார். சில பதிப்பகங்களுக்கு நூல்கள் எழுதி வந்தார். விகடன் பிரசுரம், கலைஞன் பதிப்பகம், அல்லயன்ஸ் பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், சிறுவாணி வாசகர் மையம் போன்றவை பரணீதரனின் நூல்களை வெளியிட்டுள்ளன.

அன்பே... அருளே...

காஞ்சி முனிவரின் தரிசன அனுபவங்கள் குறித்து 1993-ம் ஆண்டு, ‘அன்பே… அருளே…’ என்னும் தலைப்பில் எழுதத் தொடங்கி்னார். அந்தத் தொடர் வெளியாகிக்கொண்டிருக்கும்போதே மகா பெரியவர் சித்தி அடைந்தார். அது குறித்தும் அதே தொடரில் உணர்ச்சிகரமாகப் பதிவு செய்திருக்கிறார் பரணீதரன்.

சின்ன வயதினிலே - மெரீனா

சின்ன வயதினிலே

பரணீதரன், தனது சிறு வயது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி எழுதிய தொடர் ‘சின்ன வயதினிலே’ இதனை விகடன் பிரசுரம் வெளியிட்டது. இதில் விளக்கெண்ணெய் குடிக்க மறுத்தது, தலை முடி வெட்டிக் கொள்ள மறுத்து ஓடி ஒளிந்தது, மணல் மணலாய் இருந்த ‘நெய்’யில் மணலை அள்ளிப் போட்டது, சுவையான தின்பண்டங்களை யாருக்கும் தெரியாமல் தின்றது, காத்தாடி விட்டது, அப்பாவிடம் அடி வாங்கியது என்று பல சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்லியிருக்கிறார். நூலின் இறுதிப் பகுதியில் திடீர் என ஏற்பட்ட தனது தந்தையின் மரணம் குறித்தும் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

விருதுகள்

  • தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
  • நாடக சூடாமணி விருதை கிருஷ்ண கான சபா வழங்கியுள்ளது.

மறைவு

திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்த பரணீதரன், சென்னையில் தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பால் ஜனவரி 3, 2020 அன்று காலமானார்.

வரலாற்று இடம்

“ஆன்மிக எழுத்து என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் இரு எழுத்தாளர்கள்தாம். ஒருவர் ரா.கணபதி மற்றொருவர் பரணீதரன். கணபதி, ஆன்மிகச் சரித்திர நாவல்கள் எழுதுவதில்தான் ஆர்வம் காட்டினார். பரணீதரன், வாசகர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் விதத்தில் காசி, ஷீர்டி மாதிரியான ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று அங்கு அவர் அனுபவித்த ஆன்மிகத் தரிசனத்தை அந்தப் பரவசம் குன்றாமல் வாசகர்களுக்குக் கட்டுரைகளாக வடித்துத்தந்தார். இது எளிதான விஷயமல்ல. மனம் ஒன்றிச் செய்ய வேண்டிய பணி. அதை மகிழ்ச்சியோடு செய்தார் பரணீதரன்.” என்று திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

ஆன்மிக நூல்கள்
  • ஆலய தரிசனம்
  • ஸ்ரீ சைலத்தில் ஸ்ரீ சங்கரர்
  • அருணாசல மகிமை
  • புனிதப் பயணம்
  • பத்ரி-கேதார்நாத் யாத்திரை
  • காசி யாத்திரை
  • கேரள விஜயம்
  • திருத்தலப் பெருமை
  • ஆந்திர அதிசயங்கள்
  • கர்நாடக ஆலயங்கள்
  • கேரள ஆலயங்கள்
  • ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும்
  • ஞானப்பித்தர் சேஷாத்ரி சுவாமிகள்
  • பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்
  • அன்பே அருளே
  • தரிசனங்கள்
  • தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்
தொடர்கதைகள் மற்றும் நாடகங்கள்
  • காதல் என்ன கத்திரிக்காயா?
  • வடபழநியில் வால்மீகி
  • தனிக்குடித்தனம்
  • ஊர் வம்பு
  • கால்கட்டு
  • சாந்தி எங்கே
  • நேர்மை
  • மாப்பிள்ளை முறுக்கு
  • சாமியாரின் மாமியார்
  • அடாவடி அம்மாக்கண்ணு
  • கூட்டுக் குடித்தனம்
  • 61 வயதிலே
  • விநாயகர் வந்தார்
  • அப்பா ஒரு அப்பாவி
  • மாமியார் மெச்சிய மாப்பிள்ளை
  • மாமனார் சரணாகதி
  • நாத்தனார் திலகம்
  • முருகன் அருள்
  • எங்கம்மா
  • கல்யாண மார்க்கெட்
  • மகாத்மாவின் மனைவி (கஸ்தூரி திலகம்)
மொழிபெயர்ப்புகள்
  • ரகுவம்சம் (வடமொழி மூலம் : மகாகவி காளிதாசன்)
  • வழிகாட்டி (ஆங்கில மூலம் : Guide - ஆர்.கே. நாராயணன்)
  • அமெரிக்காவில் நான் (ஆங்கில மூலம் : Dateless Diary - ஆர்.கே. நாராயணன்)
பிற படைப்புகள்
  • சின்ன வயதினிலே (சுய சரிதம்)
  • ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் (ஸ்ரீதர் வரைந்த கேலிச் சித்திரங்களின் தொகுப்பு)
  • நாடகம் போட்டுப்பார் (நாடகம் பற்றிய நாவல்)
ஆங்கில நூல்
  • Six Mystics of India

உசாத்துணை

விகடன் பரணீதரன் வாழ்க்கைக் குறிப்பு : https://www.vikatan.com/news/general-news/biography-of-ts-sridhar

சிலிகான் ஷெல்ஃப் தளம் : https://siliconshelf.wordpress.com/2020/01/04/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE/

தினமணி கட்டுரை

https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/jan/19/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-3334997.html

விகடன் : பரணீதரன் அஞ்சலிக் குறிப்பு : https://www.vikatan.com/arts/literature/writer-tiruppur-krishnan-talks-about-the-legendary-writer-bharanidharan

தென்றல் இதழ் கட்டுரை : http://tamilonline.com/thendral/article.aspx?aid=13121




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.