being created

தி இந்தியன் லேடீஸ் மேகஸின்

From Tamil Wiki
Revision as of 12:48, 12 July 2022 by ASN (talk | contribs)
கமலா சத்தியநாதன்

பெண் ஒருவரால் தொடங்கப்பட்ட சென்னை ராஜதானியின் முதல் ஆங்கிலப் பெண்கள் பத்திரிகை ’தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’. 1901-ல், இதனை கமலா சத்தியநாதன் தொடங்கினார். இந்தியா முழுமைக்குமான இதழாக ‘தி இண்டியன் லேடீஸ் மேகஸின்’ வெளிவந்தது.

எழுத்து, வெளியீடு

தி இந்தியன் லேடீஸ் மேகஸின் - கமலா சத்தியநாதன்

1901-1918 வரை ‘தி இண்டியன் லேடீஸ் மேகஸின்’ வெளிவந்தது. நடுவில் ஒரு வருடம் மட்டும் (1916-ல்) காலாண்டு இதழாக வெளிவந்தது. அப்போது மட்டும் இதழின் நிர்வாகி மற்றும் ஆசிரியராக கமலாவின் சகோதரி எஸ்.ஜி.ஹென்ஸ்மன் செயல்பட்டார். 1917-ல் இது வழக்கம் போல மாத இதழாக வெளியானது. குழந்தைகளின் உயர்கல்விக்காக கமலா சத்தியநாதன் இங்கிலாந்து சென்றதாலும், பொருளாதாரக் காரணங்களாலும் 1918-ல் இதழ் நின்று போனது. பின் மீண்டும் கமலா சத்தியநாதன் இந்தியா திரும்பிய பின், 1927 முதல் இதழ் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது. தனது மகள் பத்மினியை அவ்விதழின் உதவி ஆசிரியராக நியமித்தார் கமலா சத்தியநாதன். 1938 வரை இவ்விதழ் வெளிவந்தது.

‘தி இண்டியன் லேடீஸ் மேகஸின்’ இதழின் ஆண்டு சந்தா ரூபாய் 2/- தபால் செலவு இந்தியாவிற்கு 1 அணா, வெளிநாடுகளுக்கு நான்கு அணா. தனிப்பிரதியின் விலை 10 அணா. ஆசிரியர் மற்றும் மேலாளராக கமலா சத்தியநாதன் செயல்பட்டார். இதழ் சென்னை சாந்தோமில் அச்சிடப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி இவ்விதழ் வெளியானது. 15-ம் தேதிக்குள் சந்தாதாரர்களைச் சென்றடைந்தது. 48 பக்கங்கள் கொண்ட இதழ் இது.

உள்ளடக்கம்

மகளிர் நலன், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக விழிப்புணர்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைத் திருமணம், பெண் கல்வி, பெண்களின் பொருளாதார மேம்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து ’தி இண்டியன் லேடீஸ் மேகஸின்’ இதழில் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. சிறுகதைகளும் அவ்வப்போது வெளியாகியிருக்கின்றன.

முகப்புப் பக்கத்தை அடுத்து ஒவ்வொரு இதழிலும் ஆங்கிலத்தில் பாடல்கள் வெளியாகியுள்ளன. சில சமயங்களில் Prayer என்ற தலைப்பிலும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஷேக்ஸ்பியர், எலியட் போன்ற பிரபல ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகள், பாடல்கள் வெளியாகியுள்ளன. ரவிவர்மா, ஜி.எஃப் வாட்ஸ் மற்றும்  உலகின் பிரபலமான ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் முகப்புப் பக்கத்தை அடுத்து உள் பக்கங்களில் அவ்வப்போது வெளியாகியுள்ளன.

கமலா சத்தியநாதன், By an Indian Lady என்ற பெயரிலும், Hannah Krishnamma என்ற பெயரிலும், ஹெச். கிருஷ்ணம்மா, An Indian Mother என்பது போன்ற புனை பெயர்களிலும் பல்வேறு விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சரோஜினி நாயுடு, அன்னிபெசண்ட், மேரி கரோலி, பண்டித ரமாபாய், லேடி ஹர்னாம் சிங், கொர்னிலியா சொராப்ஜி, ஹெலன் கெல்லர், ஜேம்ஸ் சின்னப்பா, டாக்டர் ஹில்டா எம். லாஸரஸ், ஜாக்ஸன் கோல்மன், வில்லியம் சாமுவேல் சத்தியநாதன், மிஸ் ரெஜினா குஹா உள்ளிட்ட பலர் இவ்விதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

Tales from the Mahabbharata by Kamala Satthiyanathan

சரோஜினி நாயுடு இதில் கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் கவிதைகளைக் குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. சாரா டக்கரின் கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. இந்தியா முழுமையிலிருந்தும் பல பெண்கள் இவ்விதழுக்குப் பங்களித்துள்ளனர். பெண்கள், ஆண்கள் எனப் பலர் நன்கொடை செலுத்தி இவ்விதழ் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றனர். அவர்களின் பெயர்ப் பட்டியலும் இதழ் தோறும் வெளியாகியுள்ளது.

'By a Brahmin Lady' என்ற புனை பெயரில் கமலா சத்தியநாதன், மகாபாரதத்திலிருந்து ‘Tales from the Mahabbharata' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது மகளின் பெயரான ‘பத்மினி’ என்ற புனை பெயரிலும் சிறுகதைகளை, நாடகங்களை எழுதியுள்ளார். கைகேயி, சீதை குறித்தெல்லாம் கமலா சத்தியநாதனால் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பக்கங்களும், சிறுகதைகளும், புதிர்களும் இடம் பெற்றுள்ளன. நாடகங்களும் இதழில் வெளியாகியுள்ளன.

நாட்டின் அந்தந்தப் பகுதிகளின் முதல் பட்டதாரிப் பெண்கள், முதல் விதவைப் பட்டதாரிப் பெண்கள், முதல் பெண் மருத்துவர்கள், விருது பெற்றவர்கள், சாதனையாளர்கள், மக்கள் சேவகர்கள் எனப் பலரைப் பற்றிய செய்திகள் படங்களுடன் இவ்விதழில் வெளியாகியுள்ளன.

சமூக விடுதலைக்குப் பிறகு இந்தியா விடுதலையடைவதுதான் சிறப்பாக இருக்கும் என்ற கருத்து முன்பு கமலா சத்தியநாதனுக்கு இருந்தது. ஆனால், இங்கிலாந்து சென்று வந்த பிறகு அவரது அந்தக் கருத்து மாறியது. தேசத்திற்கு விடுதலை விரைவில் கிடைப்பது அவசியம் என்று கருதினார். அது குறித்துத் தனது இதழில் எழுதியும் வந்தார்.

நிறுத்தம்

பொருளாதாரச் சூழல்களாலும், காலமாற்றத்தாலும் 1938-ல், தி இந்தியன் லேடீஸ் மேகஸின் நின்று போனது.

வரலாற்று இடம்

சமஸ்தானங்களின் மன்னர்கள், மகாராணிகள்,  ஜமீந்தார்கள் (ஆண்டிப்பட்டி ஜமீன், புங்கனூர் ஜமீன், வடகிரி ஜமீன் உள்ளிட்ட பலர்) அன்னிபெசண்ட், ராஜாஜி, சேஷகிரி ஐயர், மிஸஸ் கிங்க்ஸ்பெர்ரி,  ரட்டன் டாடாவின் மனைவி, ஆர். வெங்கட சுப்பாராவ், ஆர்.எஸ். சுப்பலட்சுமி அம்மாள், வி.சி. தேசிகாச்சாரி, லேட் சதாசிவ ஐயர்,  சி.கே.சுப்பிரமணிய முதலியார் உள்ளிட்ட பலர் இதன் சந்தாதாரர் ஆக இருந்துள்ளனர் என்பதுதிலிருந்து இதன் வரலாற்றிடத்தைத் தீர்மானிக்கலாம்.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.