being created

டி.என். சேஷாசலம்

From Tamil Wiki
கலாநிலயம்

டி.என்.சேஷாசலம் (1898-1938) இலக்கணம், இலக்கியம், நாடகம், திறனாய்வு எனத் தனது பங்களிப்புகளைத் தந்தவர். நாடக நடிகராக, இயக்குநராக, இரவுப் பள்ளி ஆசிரியராக இருந்ததுடன் ‘கலா நிலயம்’ என்னும் இலக்கிய இதழின் நிறுவனராகவும், எழுத்தாளராகவும் செயல்பட்டார். வழக்குரைஞர், கல்வியாளர், சொற்பொழிவாளர் என பல்துறைச் செயல்பாட்டாளராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

1898-ல், பிறந்த சேஷாசலம், உயர்நிலைக் கல்வியை முடித்தவுடன், இளங்கலை பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னையில் வழக்குரைஞர் தேர்விற்குப் பயின்று வழக்குரைஞர் ஆனார். ஆனால், அப்பணியில் அவர் நாட்டம் கொள்ளவில்லை. இலக்கிய, நாடக உலகமே அவரை ஈர்த்தது.

தனி வாழ்க்கை

டி.என். சேஷாசலம், ருக்மிணியை மணம் செய்து கொண்டார். பணிக்கு ஏதும் செல்லாமல் கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் நன்கு அறிந்திருந்த சேஷாசலம், ஆங்கில நாடகங்களை, கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஈடுபட்டார்.

கலாநிலயம் நாடக்ககுழு

மேல்நாட்டுப் பாணியில் புதுவகை நாடகங்களை அரங்கேற்ற எண்ணம் கொண்ட சேஷாசலம், தன் நண்பர்களுடன் இணைந்து ‘கலா நிலயம்’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். ‘கலாநிலயம்’ என்பது புரசைவாக்கத்தில் அவர் வசித்த வீட்டின் பெயர். அதனையே தனது நாடக்குழுவிற்குச் சூட்டினார். நாடகப் பயிற்சி, ஒத்திகை என அனைத்தும் அவரது மிகப் பெரிய அந்த இல்லத்திலேயே நடந்தன.

தனது நாடகக் குழுவின் மூலம் ஷேக்ஸ்பியரது நாடகங்கள் பலவற்றைத் தமிழில் அரங்கேற்றினார். சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல இடங்களுக்கும் பயணம் செய்து மாறுபட்ட கதையம்சமுள்ள தனது நாடகங்களை மேடையேற்றினார். ஷேக்ஸ்பியர் மீது கொண்ட அதே காதல் அவருக்குக் கம்பன் மீதும் இருந்தது. ஆகவே கம்ப ராமாயணம் குறித்து விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டு அது குறித்துச் சொற்பொழிவாற்றியும் வந்தார். அக்காலத்தில் நிலவிய வறுமையான சூழல்களால் கல்வி கற்க ஆர்வமிருந்தும் தொடர்ந்து படிக்க இயலாத சூழல் பலருக்கு இருப்பது சேஷாலத்திற்குத் தெரிய வந்தது. அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகப் பல்வேறு பணிகளைச் செய்து கல்வி குறித்த ஏக்கத்துடன் காலம் கழித்து வந்தனர். அந்த நிலைமையை மாற்ற விரும்பினார் சேஷாசலம்.

இரவுப் பள்ளிகள்

இரவுப் பள்ளி

தனது நண்பரும், பிரபல வழக்குரைஞருமான மாசிலாமணிப் பிள்ளையுடன் இணைந்து ஆர்வமுள்ளோர் அனைவரும் தமிழ் பயில்வதற்காக இரவு நேரப் பள்ளி ஒன்றை எற்படுத்தினார் சேஷாசலம். ஜனவரி 1913-ல் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. ‘Madras Young Men's Association Night School’ என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

பள்ளியின் தலைமைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்த சேஷாசலம், தானே முதன்மை ஆசிரியராக இருந்து பாடம் நடத்தினார். இரேனியஸ் பிள்ளை போன்றவர்கள் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றினர். மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி முதல் உயர் கல்வி வரை இங்கு சொல்லித் தரப்பட்டது. 5 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் இப்பள்ளியில் பயில அனுமதிக்கப்பட்டனர். சென்னை எஸ்பிளனேட் ஒய்.எம்.சி.ஏ.வில் மட்டுமல்லாது, பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வார நாட்களில் இச்சிறப்புப்பள்ளி செயல்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலமும், ஆங்கில நாடகங்களையும் சொல்லிக் கொடுத்தார் சேஷாசலம். தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் போதித்ததுடன் மேலை நாட்டாரின் நாடகங்களையும் மாணவர்களுக்குக் கற்பித்தார். பாலூர் கண்ணப்ப முதலியார், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, மங்கலங்கிழார் போன்றோர் சேஷாலத்தின் தமிழ் வகுப்புகளில் பயின்றவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாவர்.

காந்திமதி என்னும் காந்தாரநாட்டுக் கட்டழகி - டி.என்.சேஷாசலம் தொடர்

கலாநிலயம் இதழ்

தனது இலக்கிய நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ‘கலா நிலயம்’ என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார் சேஷாசலம். ஜனவரி 5, 1928ல் முதல் இதழ் வெளியாகியது. ‘வியாழன் தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை’ என்ற அறிவிப்புடன் வெளியான இவ்விதழின் நோக்கங்களாகச் சேஷாசலம், தமிழைப் பிழையறக் கற்றுக் கொள்ளுதல், ஆங்காங்கு உள்ள தமிழ்ப் புலவர்களை ஒருங்கிணைத்து இதழுக்கு எழுத வைத்து இலக்கிய வளம் சேர்த்தல், ஆங்கில மொழியின் பெருமையை, சிறப்பை அனைவரும் அறியும் பொருட்டு சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்து அளித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்தார். கே. ராஜகோபாலன் இந்த இதழின் உதவி ஆசிரியராக இருந்தார். பிற்காலத்தில் இவர் ‘கலாநிலயம்’ ராஜகோபால் என்று அழைக்கப்பட்டார். எஸ். அனவரத நாயகம் பிள்ளை போன்றோரும் இதழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இலக்கண, இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான ‘கலாநிலயம்’ இதழில் அக்காலத் தமிழ்ச் சான்றோர் பலர் பங்களித்து வந்தனர். சேஷாசலம், இவ்விதழில் , பல ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.  மதுகரம், சபரி போன்ற புனைபெயர்களிலும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ’கலா நிலயம்’ இதழில் சிறுகதைகளும் இடம் பெற்றன. வண்மையின் வரம்பு (விடி சுந்தரலிங்கம்), விதியில்லா மதிபாலன் (திம்மப்பா ஐயர்), மாரிமுத்துவின் மனைவி, உருபு மயக்கம் (முத்துராமலிங்கம்) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

சேக்கிழாரும் திருக்கண்ணப்பரும், கம்பராமாயணம், தேவாரமும் ஐந்திணையும்,  அப்பர், வில்லிபாரதம், குலசேகரர் தத்துவ விளக்கம், அகப்பொருள் விளக்கம், நம்மாழ்வார் வைபவம், குறுந்தொகை, அப்பரும் 64 கலைகளும் , நம்மாழ்வார் வைபவம் எனப் பல இலக்கியக் கட்டுரைகள் ‘கலாநிலயம்’ இதழில் வெளியாகியுள்ளன. ’காந்திமதி என்னும் காந்தார நாட்டுக் கட்டழகி’ என்னும் தொடர்கதையையும் டி.என்.சேஷாசலம் எழுதியுள்ளார். பொருளாதாரச் சூழல்களால் 1935-ல் கலாநிலயம் நின்று போனது.

பிஸாரோ - நாடகம்

பிஸாரோ - நாடக அரங்கேற்றம்

சேஷாலத்திற்கு நாடகங்களில் - குறிப்பாக மேல் நாட்டு நாடகங்களில் - மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரே பல நாடகங்களை மொழிபெயர்த்து, கதை, வசனம் எழுதி மேடையேற்றினார். பல நகரங்களுக்குச் சென்று நாடகங்கள் நடத்தினார். ஆர்.பி.ஷெரீடன் ஆங்கிலத்தில் எழுதிய நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘பிஸாரோ’ என்ற தலைப்பில் நாடகமாக எழுதினார். அதை எழுதி, இயக்கியதுடன், முக்கியத் தலைமைக் கதாபாத்திரத்திலும் நடித்தார். 'எல்விரா' என்ற பாத்திரத்தில் அனந்தநாராயண அய்யர் என்பவரும், 'அலான்சோ’ பாத்திரத்தில் வேலு நாயர் என்பவரும் நடித்தார்கள். இதழின் வளர்ச்சி நிதிக்காக இவ்விருவரும் ஊதியம் இல்லாமல் நடித்தனர்.

கலாநிலைய வளர்ச்சி நிதிக்காக இந்நாடகம் சென்னை, காஞ்சி, காரைக்குடி, கும்பகோணம், சிதம்பரம் முதலிய ஊர்களில் நடத்தப்பெற்றது. தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று இந்நாடகத்தை மேடையெற்றினார் சேஷாசலம்.

திரைப்பட முயற்சிகள்

திரைப்பட முயற்சிகளிலும் சேஷாசலத்திற்கு ஆர்வம் இருந்தது. தெலுங்குப் பட முயற்சியில் இறங்கினார். ஆனால், அது பண இழப்பில் முடிந்தது. சத்தியஜித்ரேவின் குருவான தேவகிபோஸ் என்பவரை அழைத்துவந்து, திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தான் எழுதிய ‘ஏமாங்கத்திளவரசன்’ என்ற நாவலை ‘இராஜதந்திரம்’ என்ற பெயரில் திரைப்படமாக்க எண்ணினார். திரைக்கதையை அமைத்து, படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது வெற்றிபெறவில்லை. அதனால் அம்முயற்சிகளைக் கைவிட்டார்.

மறைவு

1938-ல் ஏற்பட்ட திடீர் உடலநலக் குறைவால் சேஷாசலம் காலமானார். பிரபல எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், கேலிச் சித்திரக்காரராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்த பரணீதரன் இவரது மகன். எழுத்தாளரான ஆ.ர்.கே. நாராயணன் சேஷாசலத்தின் சகோதரி மகன்.

ஆவணம்

’கலா நிலயம்’ இதழ்கள் சிலவற்றை தமிழ் இணைய நூலகம் ஆவணப்படுத்தியுள்ளது. முனைவர் அ.நா. பெருமாள், டி.என். சேஷாசலத்தின் இலக்கியச் செயல்பாடுகளை, ’இலக்கியச் சிந்தனையாளர்  டி.என். சேஷாசலம்’ என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார்.

வரலாற்றிடம்

இலக்கிய உலகம், நாடக உலகம் இரண்டிலுமே முக்கியப் பங்காற்றியவர் டி.என்.சேஷாசலம். டி.என்.சேஷாசலம் குறித்து ஓவியர் கோபுலு, “பரணீதரனின் தந்தை டி.என். சேஷாசலம். சிறந்த தமிழறிஞர். தனது பணத்தையெல்லாம் தமிழுக்காகவே செலவழித்தவர். நிறைய கதை, கட்டுரைகள் எழுதுவார். நாடகங்கள் போடுவார். ஆங்கில நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவார்.[1] ” என்று தென்றல் இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

சேஷாசலத்தின் மறைவிற்குப் பின் அவரது நினைவாக 1987-ல், அவரது மகன் பரணீதரனால் ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. அவரது நினைவாக ஆண்டுதோறும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டன. 1990 முதல் 2014 வரை நடந்த நிகழ்வுகள் குறித்த் தகவல்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணையதளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

“சேஷாசலம் தனி மனிதயியல். மானிடவியல், சமூக வாழ்வியல், மனவியல் ஆன்மவியல் என்ற பார்வையில் இலக்கியங்களை அணுகிச் சிந்திக்கிறார்” என்று மதிப்பிடுகிறார், அவரது படைப்புகளைப் பற்றிய ஆய்வு நூலை எழுதியிருக்கும் முனைவர் அ.நா. பெருமாள்.

டி.என்.சேஷாசலத்தின் ‘இரவுப் பள்ளிகள்’ அக்காலத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பாகும். பிற்காலத்தில் மாலை நேரப் கல்லூரிகள் பல உருவாக இது போன்ற முயற்சிகள் முன் மாதிரியாக இருந்தன.

நூல்கள்

நாவல்கள்
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • ஏமாங்கதத்திளவரசன்’
  • காந்திமதி அல்லது காந்தார நாட்டுக் கண்ணழகி
நாடகங்கள்
  • இராஜ தந்திரம்
  • பிஸாரோ
கட்டுரை நூல்கள்
  • கலாநிலயம் தலையங்கங்கள்
  • கம்பராமாயணம் உரையும் விளக்கமும்
  • கம்பர்
  • கல்சர் (பண்பும் பயனும் அது)

உசாத்துணை




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.