first review completed

சிவக்கொழுந்து தேசிகர்

From Tamil Wiki

சிவக்கொழுந்து தேசிகர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். பதிப்பாசிரியர். இவர் முயற்சியாக் திருவாசகம் முதன் முறையாக அச்சில் பதிப்பிக்கப்பட்டது. உ.வே.சாமிநாதையர் இவருடைய சிற்றிலக்கிய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.

(பார்க்க : சிவக்கொழுந்து சிவாச்சாரியார்)

வாழ்க்கைக் குறிப்பு

சிவக்கொழுந்து தேசிகர் கும்பகோணம் என அழைக்கப்படும் திருகுடந்தைக்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தார். கொட்டையூரின் இன்னொரு பெயர் எரண்டையூர். சிவக்கொழுந்து தேசிகரின் தந்தை தண்டபாணி தேசிகர். இவர்கள் பரம்பரை சிவாச்சாரியார்கள். (பூர்ணேசுவர கோத்திரம்)

சிவக்கொழுந்து தேசிகர் வைத்தியநாத தேசிகரின் வழிவந்தோரிடம் கல்வி பயின்றார். கொட்டையூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

சிவக்கொழுந்து தேசிகருக்கு இரு மனைவியர். இரு ஆண்மக்கள் ஐந்து பெண்மக்கள் என ஏழு குழந்தைகள். இவருடைய முதல் மனைவிக்குப் பிறந்த வடுகநாத தேசிகரின் பெயரரான சிவக்கொழுந்து தேசிகரின் மகன்தான் திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைவர் காசிவாசி சுவாமிநாத தேசிகர். உ.வே.சாமிநாதையருக்கு நிதியுதவி செய்து சிவக்கொழுந்து தேசிகரின் நூல்களை பதிப்பித்தவர் சுவாமிநாத தேசிகர்தான். இரண்டாம் மனைவியில் பிறந்தவரான ஸ்ரீ சாமிநாத தேசிகர் மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராக தமிழ் பயின்று, 1864ல் கும்பகோணம் கல்லூரியிலும் பின்னர் திருவனந்தபுரம் கல்லூரியிலும் தமிழாசிரியராக பணிபுரிந்தார்.இவரது பிறப்பு மறைவு வருடங்கள் தெளிவாக அறியப்படவில்லை.

இசை

சிவக்கொழுந்து தேசிகர் குறவஞ்சி நாடகம் இசைப்பாடல்களை எழுதினார். அவற்றுக்குரிய இசையமைப்பை தஞ்சாவூரில் வாழ்ந்த பொன்னையா பிள்ளை என்னும் இசையறிஞரின் உதவியுடன் அமைத்தார். அவற்றில் 39 கீர்த்தனைகள் ,3 வெண்பாக்கள் , 2 அகவல்கள், 25 விருத்தங்கள், 2 கொச்சகலிப்பாக்கள் அடங்கியிருக்கின்றன.

இலக்கியப் பங்களிப்பு

தஞ்சையில் சரபோஜி மன்னரின் ஆட்சியின் போது, அமைக்கப்பட்ட நூலாராய்ச்சிக்குழுவில் பணியாற்றினார். பின்னர் சென்னையில் தாண்டவராய முதலியார் தலைமையில் அமைந்த சென்னை கல்வி சங்கத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றினார்.

உ.வே.சாமிநாதர் ஐயர் பதிப்பித்த சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்கள் தொகுப்பில் கோடீச்சுரக்கோவை, சரபேந்திரர் பூபால குறவஞ்சி நாடகம், தஞ்சைப் பெருவுடையார் உலா ஆகியவை இடம்பெற்றுள்ளன. கொட்டையூர் உலா கிடைக்கவில்லை.

திருவாசகம் பதிப்பு

1834ல் திருவாசகத்தின் ஒரு பதிப்பை முதல்முறையாக கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் அச்சிட்டு வெளியிட்டதாக உ.வே.சாமிநாதையர் எழுதிய குறிப்பில் குறிப்பிடுகிறார்.

மறைவு

சிவக்கொழுந்து தேசிகர் 96-ம் வயதில் இறந்தார்.

நூல் பட்டியல்

  • கொட்டையூர் உலா
  • சரபேந்திரர் வைத்திய முறைகள்
  • சரபேந்திரர் சன்னிரோக சிகிச்சைகள்
  • சரபேந்திரர் வைத்தியம்
  • சரபேந்திரர் பூபாலக் குறவஞ்சி நாடகம்
  • கோடீச்சுரக்கோவை
  • திருவிடைமருதூர்ப் புராணம்
  • தஞ்சைப் பெருவுடையார் உலா
  • ஆச்சாபுரத் தலபுராணம்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.