ஞானாலயா ஆய்வு நூலகம்

From Tamil Wiki
Revision as of 23:52, 27 June 2022 by ASN (talk | contribs) (para adjusted)
ஞானாலயா ஆய்வு நூலகம் - புதுக்கோட்டை

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஞானாலயா ஆய்வு நூலகம், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும். இது 1959-ம் ஆண்டு, நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி - டோரதி கிருஷ்ணமூர்த்தி இணையர் இணைந்து நடத்தி வருகின்றனர். இருவருமே ஆசிரியராகப் பணியாற்றியவர்கள்.

நூலக உருவாக்கம்

பள்ளி ஆசிரியரான கிருஷ்ணமூர்த்தியும், தாவரவியல் துறை பேராசிரியரான அவரது மனைவி டோரதி கிருஷ்ணமூர்த்தியும், தங்கள் பணி ஓய்வின்போது கிடைத்த தொகை ரூபாய் 11 லட்சத்தைக் கொண்டு, தங்களது வீட்டை அடுத்து நூலகத்திற்கு என்று ஒரு கட்டிடத்தை எழுப்பினர். அது கீழ்த்தளம், மேல் தளம் என இரண்டு அடுக்குகளைக் கொண்டதாகும்.

ஞானாலயா நூலகம் - பெயர்க் காரணம்

ஆரம்பத்தில் ‘மீனாட்சி நூலகம்’ என்று தனது தாயாரின் பெயரில்தான் இந்த நூலகத்தை நடத்தி வந்தார், கிருஷ்ணமூர்த்தி. அது வாடகை நூல் நிலையத்தின் பெயர் போல இருப்பதாக நண்பர்கள் சொல்லவும், ‘ஞானாலயா’ என்று பெயர் மாற்றம் செய்தார்.

நூல் சேகரிப்பு ஆர்வம்

கிருஷ்ணமூர்த்தியின் தந்தை கே.வி. பாலசுப்ரமணியன், கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். அவர் மூலம் கிருஷ்ணமூர்த்திக்குச் சிறு வயதிலேயே புத்தகங்கள் அறிமுகமாகின. ஒரு சமயம் தந்தை கே.வி. பாலசுப்ரமணியன், நூறு புத்தகங்களை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து ‘இவற்றை கவனமாகப் பாதுகாத்து வா’ என்று சொன்னார். அதில் ஒரு புத்தகம், கிருஷ்ணமூர்த்தியின் தாய்வழித் தாத்தாவான பொன்னுசாமி, 1873ல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது, எஸ்.எஸ்.எல்.சியில் தமிழில் முதல் பரிசு பெற்றதற்காக் கிடைத்த பரிசு நூலாகும். ‘Footprints of Famous men’ என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். தாத்தா பொன்னுசாமி கையெழுத்திட்டிருந்த ‘தனிப்பாடல் திரட்டு’ என்ற நூலும் அந்தச் சேகரிப்பில் இருந்தது. அது எழுத்தாளர் கு. அழகிரிசாமி வெகுநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்த புத்தகம் என்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி வியப்புற்றார். அதுவே பழைய புத்தகங்களின் மீதான கிருஷ்ணமூர்த்தியின் காதலுக்கும் தேடலுக்கும் காரணமானது.

இதழ்கள் சேகரிப்பு

டோரதி - கிருஷ்ணமூர்த்தி இணையர்

கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களைச் சேகரிப்பது மட்டுமில்லாமல் பத்திரிகைகளின் சேகரிப்பிலும் தனித்த கவனம் செலுத்தினார். பாரதியின் சுதேச கீதங்கள், உ.வே.சா.வின் மணிமேகலை போன்றவற்றின் முதல் பதிப்பில் இடம்பெற்ற பல விஷயங்கள் அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் இல்லை என்பதை அறிந்தார் கிருஷ்ணமூர்த்தி. அது முதல் முதற் பதிப்பைச் சேர்ப்பது, அவை வெளியான மூல நாளிதழ்கள், வார, மாத இதழ்களைச் சேர்ப்பது என்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். குமரி மலர் ஆசிரியரும், காந்தி பற்றிய குறும் படத்தை எடுத்தவருமான ஏ.கே. செட்டியார் கிருஷ்ணமூர்த்தியின் முயற்சிகளை ஊக்குவித்தார். பல இதழ்கள், புத்தகங்கள் கிருஷ்ணமூர்த்திக்குக் கிடைக்க அவர் வழிகாட்டினார்.

மனைவி டோரதியும் கணவரது முயற்சிகளுக்கு உதவியாக இருந்தார். இருவரது ஊதியப் பணத்தையும் பெரும்பாலும், பழைய இதழ்கள், அரிய நூல்கள் வாங்குவதற்குச் செலவிட்டனர். அப்படிப் படிப்படியாகச் சேகரித்த நூல்களே இன்றைக்கு ஞானாலயா ஆய்வு நூலகமாக வளர்ந்திருக்கிறது.

புத்தகச் சேகரிப்பு முயற்சிகள்

20 வயதிலேயே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத் தேடல் துவங்கிவிட்டது. பேருந்துகளில் சென்றும், குக்கிராமங்களுக்கு நடந்தும், சைக்கிள்களில் பயணப்பட்டும் பல இடங்களுக்குப் பயணப்பட்டுப் புத்தகங்களைச் சேகரித்திருக்கிறார். அலைச்சல்களையும் ஏமாற்றத்தையும் எதிர்கொண்டிருக்கிறார். செட்டிநாட்டுப் பகுதியில் நாள் முழுக்க, காலை முதல் மாலை வரை காத்திருந்து வெறும் கையுடன் திரும்பிய அனுபவமும் உண்டு. மிகுந்த பொறுமையுடனும், அர்ப்பணிப்புடனும், சலிப்பில்லாமல் இவர் சேகரித்தவைதான், இன்றைக்கு ஒன்றரை லட்சம் நூல்களாக ஞானாலயாவில் காட்சி தருகின்றன.