standardised

தாயம்மாள் அறவாணன்

From Tamil Wiki
தாயம்மாள் அறவாணன் (நன்றி: அகரமுதல)

தாயம்மாள் அறவாணன் (பிறப்பு:மே 23, 1944) எழுத்தாளர், கட்டுரையாளர், ஆய்வாளர், பேராசிரியர், சொற்பொழிவாளர், பதிப்பாளர். சங்காலத்தில் கூறப்படும் பெண்பாற் புலவரான ஒளவையார் என்பவர் ஒருவர் அல்ல என்பதை ஆய்வின் மூலமாக வெளிப்படுத்திய முதல் அறிஞர். 'ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை' உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து அவர்களின் வரலாற்றையும், பாடல்களையும் வெளியிட்ட "மகடூஉ முன்னிலை" நூல் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக்குறிப்பு

கன்னியாக்குமரியில் சேந்தன்புதூர் கிராமத்தில் சித்தாந்த ஆசான் பகவதிப் பெருமாள் பிள்ளை, கோமதி இணையருக்கு மகளாக மே 23, 1944 அன்று பிறந்தார். அப்பா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மலையாள வித்துவான். தாய் காந்தியடிகளின் சுதந்திரப் போராட்டத்திற்காக நகையைக் கழற்றிக் கொடுத்த தியாகி காந்திராமன் பிள்ளையின் உறவினர். உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். அதில் கணேசன் சுதந்திரப் போராட்டத் தியாகி. சிறை சென்றவர்.

ஐந்தாம் வகுப்பு வரை மயிலாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றார். எட்டாம் வகுப்பு வரை தென் திருவிதாங்கூரின் முதல் ஆங்கிலப் பள்ளியான மயிலாடியில் உள்ள ரிங்கெல்தெளபே(Ringel taube School, Mylaudy) பள்ளியில் படித்தார். தன் வீட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் நடந்து சென்று சுசீந்திரம் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். படிப்புடன் அம்மாவிற்குத் துணையாகப் பூப்பறித்து விற்பனைக்குக் கொடுக்கும் வேலையையும் செய்து வந்தார். புகுமுக வகுப்பைத் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் படித்தார். இந்துக் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்து முடித்தார். திருவனந்தபுரம் சென்று அறிஞர் வ.அய். சுப்ரமணியனின் உதவியோடு கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலையை முடித்தார்.

தனி வாழ்க்கை

ஏப்ரல் 21, 1969-ல் தாயம்மாள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாசலத்தை திருமணம் செய்து கொண்டார். அருணாசலமே பின்னர் அறவாணர் என்று அழைக்கப்பட்டார். கணவர் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் பணியாற்றினார். மகன் அறிவாளன் த.ஆ.வே.(டி.ஏ.வி.) மேனிலைப்பள்ளியில் இயற்பியல் மேற்கல்வி ஆசிரியராக உள்ளார். மருமகள் வாணி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர். எட்டு நூல்களின் ஆசிரியரான இவர், குடியரசுத்தலைவரின் இளம் செம்மொழி ஆய்வறிஞர் விருது பெற்றவர். அருணன், அகிலன் என்ற இரு பேரப்பிள்ளைகள். மகள் அருண்செங்கோர் காட்டாங்குளத்தூர் எசு.ஆர்.எம். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்; மருமகன் பொறியாளர் மோ.சீனிவாசன். மனித நோய்கள் நூலை எழுதினார். இவர்வழி அமுதயாழினி, அமுதப்பாவை என இரு பேரப்பிள்ளைகள்.

தாயம்மாள் அறவாணன்

ஆசிரியர் பணி

பாபநாசத்தில் பேரா.ச.வே. சுப்பிரமணியம், நண்பர்கள் தந்தையுடன் இணைந்து தொடங்கிய திருவள்ளுவர் கல்லூரியில் விரிவுரையாளராக முதல் பணியை ஏற்றார். பத்து மாதப் பணிக்குப் பின்னர் 1969-ல் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1970-ல் சென்னைப் பச்சையப்பன் அறக்கட்டளையில் அறவாணருக்கும் கடலூர் கந்தசாமி(நாயுடு) கல்லூரியில் தாயம்மாளுக்கும் பணி கிடைத்தது. சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரிக்கு தாயம்மாள் பணிமாற்றம் பெற்றார். ச.வே.சு. வழியாக பகுதி நேர ஆய்வாளராகச் சேர்ந்து ‘குழந்தை இலக்கியம்-ஒரு பகுப்பாய்வு’ தலைப்பில் முனைவர் பட்டத்தை முடித்தார். களப்பணிகளை மேற்கொண்டு பெண் மொழி, உறவு முறை நூல்களை உருவாக்கினார்.கணவர் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியேற்ற பொழுது தாயம்மாளும் புதுச்சேரிக்குச் சென்றார். 1970-ல் வேலை பார்த்த கடலூர் கந்தசாமி கல்லூரிக்கு மாற்றம் பெற்றார். 1998-ல் தாயம்மாள் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

இருபத்தியைந்து நூல்களின் ஆசிரியர். அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவருபவர். 'ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை' உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து அவர்களின் வரலாற்றையும், பாடல்களையும் "மகடூஉ முன்னிலை" என்று பெயரில் 685 பக்க நூலாக, பெண் புலவர் களஞ்சியமாக உருவாக்கினார். சங்கப்பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை மொத்தம் 473. அவர்களில் பெண் புலவர்கள் எண்ணிக்கை நாற்பத்தியைந்து என்று குறிப்பிட்டு பெண் புலவர்களின் பாடல்களில் காணப்படும் சிறப்புச் செய்திகளையும், அவர்களின் பெயர்க்காரணத்தையும், வரலாற்றையும் தொகுத்தார். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மகளிருக்கான கருத்தரங்கங்களில் பங்கேற்றார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் வாசித்தல், கற்பித்தல் தலைப்பில் ஆசிரியப் பணிப்பட்டறையை நடத்தினார். அக்டோபர் 27, 2010-ல் உலகச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்று ”அறியப்படாத பெண்புலவர்” என்னும் தலைப்பில் கட்டுரை அளித்தார். உலக நாடுகள் பலவற்றிலும் கருத்தரங்கங்களில் கட்டுரையாளராகப் பங்கேற்றார். மாநாடுகளிலும் நூல்கள், இதழ்களிலுமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி அளித்துள்ளார்.

மகடுஉ முன்னிலை
ஆய்வுகள்

செனகால் அதிபர் லியோ போல்ட் செதார் செங்கோரின் (Léopold Sédar Senghor) அழைப்பில் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகால் நாட்டிற்கு முனைவர் அறவாணன் திராவிட ஆப்பிரிக்க ஆராய்ச்சிக்காகப் பயணம் மேற்கொண்டார். முனைவர் பட்டம் பெற்ற தாயம்மாளும் 7 மாதங்களுக்குப் பின்னர் செனகால் சென்றார். அங்கே எழுத்துப்பணியில் ஈடுபட்டார். ”திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு” என்ற நூலை எழுதினார். உரல், உலக்கை, முருங்கக்கீரை, சட்டிப்பானை செய்தல், சுடுதல், மருதோன்றி அணிதல், கோலா பாக்கு வாயில் மெல்லுதல், சில்லுக்கோடு ஆடுதல், அரிசி உணவு உண்ணுதல், போன்ற பல பண்பாட்டு நிகழ்வுகளைத் தமிழ் மக்களின் பண்பாட்டு நிகழ்வோடு ஒப்பிட்டு இந்நூலை எழுதியுள்ளார். பதினான்குழி/பல்லாங்குழி என்னும் தமிழர் விளையாட்டுபோல் ஆப்பிரிக்கர்களிடமும் உள்ளது(Mancala) கண்டு வியப்பு எய்தினார். விளையாட்டு முறையை ஒப்பிட்டு ‘பல்லாங்குழி-திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற நூலை எழுதினார். நாட்டுப்புற விளையாட்டு நூல்களுள் குறிப்பிடத்தக்க இடம் இந்நூலுக்கு எப்பொழுதும் உண்டு. ஆப்பிரிக்க அதிபர் செங்கோர், ஆப்பிரிக்கர்களுக்குத் தமிழ் கற்பிக்க தக்கார்பல்கலைக்கழகத்தில் (Dakar Bourguiba University) மொழி ஆசிரியராக நியமன ஆணை வழங்கினார். 1978 முதல் 82 வரை அங்கு இலக்கியத்துறையில் பணியாற்றினார்.

சொற்பொழிவாளர்

பெண்ணியப் பேச்சாளராகவும் இலக்கிய உரையாளராகவும் உள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மேலைச்சிவபுரி செந்தமிழ்க்கல்லூரி, பேரூர் சாந்தலிங்கனார் கலைக்கல்லூரி ஆகியவற்றில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றினார். 1970 முதல் சென்னை, மதுரை, தூத்துக்குடி வானாலிகளில் எழுத்துரை ஆற்றி வருகிறார். வெளிநாட்டுப் பண்பலை வானொலிகளுக்காகவும் தமிழ் இலக்கியத்தில் தன்மானம், காலமாற்றத்தில் கற்பு, பூப்பு நிகழ்ச்சி முதலான பல தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினார். மகளிர் தற்கொலை, முதியோர் சிக்கல்கள்பற்றி ஆய்வு நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அறவாணர் விருது விழாவில்

விருதுகள்

  • 1987-ல் தமிழக அரசு வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு ”திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு” நூலுக்குக் கிடைத்தது.
  • ”ஒளவையார் அன்று முதல் இன்று வரை” நூலுக்குத், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புதுநூற்றாண்டுப் புத்தக மனையும் (என்.சி.பி.எச்சு.) இணைந்து இலக்கியப் பரிசு வழங்கின.
  • 2016-ல் ‘ஒளவையார் படைப்பு களஞ்சியம்’ நூலுக்கு தினத்தந்தி இதழின் ”சி.பா. ஆதித்தனார் இலக்கியப் பரிசு” பெற்றார்.
  • 'தமிழ்ச் சமூகவியல் ஒரு கருத்தாடல் என்னும் மன்பதையியல்' நூலுக்கு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் சிறந்த நூலுக்கான பரிசை வழங்கியுள்ளது.
  • இந்தியப் பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர் மன்றம் வழங்கும் நூல்கள், கட்டுரைகளுக்கான பரிசில்கள்
  • சிறந்த கல்வியாளர் எனச் சிறப்பித்து ”வாரியார் விருது” வழங்கப்பட்டது.
  • சிறந்த பெண் எழுத்தாளர் என்பதற்காகச் ”சக்தி 2004 விருது” பெற்றார்.
  • தமிழக அரசு கி.ஆ.பெ. விருதை 2009 -ல் வழங்கிச் சிறப்பித்தது.
  • இராம.வீரப்பன் வழங்கும் இலக்கிய இணையர் விருது அறவாணனுக்கும் தாயம்மாளுக்கும் 2013-ல் வழங்கப்பெற்றது.

பதிப்புத்துறை

தாயம்மாள் அறவாணன் 1982-ல் கணவருடன் இணைந்து ‘தமிழ்க் கோட்டம்’ நூற்பதிப்பகத்தை நிறுவினார். பல நூல்களை இப்பதிப்பகத்தின் வழி வெளியிட்டு வருகிறார்.

அவ்வையார் நூல்

நூல் பட்டியல்

  • திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு
  • பல்லாங்குழி-திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு
  • மகடுஉ முன்னிலை (ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை: 2004)
  • புதிய கோலங்கள்
  • பெண்ணறிவு என்பது
  • பெருமையே பெண்மையாய்
  • தையல் கேளீர்
  • தையலை உயர்வு செய்
  • தடம் பதித்தோர்
  • குழந்தை இலக்கியம் – ஒரு பகுப்பாய்வு
  • தமிழ்ச் சமூகவியல்- ஒரு கருத்தாடல்
  • பெண்ணெழுத்து இகழேல்
  • கண்ணகி மண்ணில்
  • பெண் இன்று நேற்று அன்று
  • ஒளவையார் அன்று முதல் இன்று வரை
  • பெண் பதிவுகள்
  • தமிழ்ப்பெண்
  • தமிழ்க்குடும்பம்-1919
  • ஒளவையார்
  • பெண்ணின் பெருந்தக்கது இல்

வெளி இணைப்புகள்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.