சிவபெருமான் திருவந்தாதி(கபிலதேவ நாயனார்)
கபிலதேவ நாயனார் இயற்றிய சிவபெருமான் திருவந்தாதி பதினொன்றாம் திருமுறையில் 22-ல் திருமுறையாக இடம்பெறும் அந்தாதி நூல். பரணதேவ நாயனார் இயற்றிய மற்றொரு சிவபெருமான் திருவந்தாதியும் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறுகிறது.
ஆசிரியர்
சிவபெருமான் திருவந்தாதியை இயற்றிய கபிலதேவ நாயனார் பொ.யு. 8-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று கருதப்பட்டாலும் இவர் இயற்றிய யாப்பு வகைகள் பிற்காலத்தவையாதலால் பொ.யு. 9-ம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆக இருக்கலாம் என. க வெள்ளைவாரணனார் கருதுகிறார் .இளம்பூரணர் தொல்காப்பியப் பொருள் அதிகாரச் செய்யுளியலில், கபிலர் இயற்றிய இரண்டு செய்யுட்களை மேற்கோள் காட்டியிருத்தலின் இக்கபிலர் இளம்பூரணர்க்கு முற்பட்டவர் எனக் கொள்ளலாம். இவர் பற்றிய வேறு செய்திகள் அறியக் கிடைக்கவில்லை.
நூல் அமைப்பு
கபிலர் இயற்றிய சிவபெருமான் திருவந்தாதியில் அந்தாதித் தொடையில் நூறு வெண்பாக்கள் உள்ளன. வே ஒன்று என முதல் பாடலில் தொடங்கி ஒன்று என நூறாம் பாடல் மண்டலித்து முடிகிறது. பாடல்கள் அகப்பொருளில் தலைவி அல்லது தோழி கூற்றாக அமைந்தவை.
இந்நூலில் 62-ஆம் பாடலின் இரண்டாமடி சிதைந்துளது. ஆரூர், ஒற்றியூர், ஆவூர், அண்னாமலை, ஆமாத்தூர், வேங்கடம், கூடல், வெண்காடு, மறைக்காடு, சிரச மலை, பூம்புகார், கானப்பேர், இடுமணல், ஆக்கூர், புறந்தை, காரோணம், ஆடானை, பழனம், புன்கூர், மண்டளி, கோகர்ணம், கோப்பாடி, குற்றாலம், கோவர்ணம், புகலூர், களந்தை, தாங்கால், தலையாலங்காடு, திருமாலுமங்கை, செங்குன்றுார், புலிப் பொது, மேற்றளி ஆகிய சைவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன.
பாடல் நடை
ஒன்று முதலாக, நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்கு)
ஒன்றும் மனிதர் உயிரையுண்(டு) - ஒன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான், வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மா (1)
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான்; - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி,
அந்தரத்தார் சூடும் அலர்.(4)
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து,
நூறா நொடிவதனின் மிக்கதே, - நூறா
உடையான் பரித்தவெரி உத்தமனை, வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன் 100
உசாத்துணை
- பன்னிரு திருமுறை-பதிப்பாசிரியர் இராச.வசந்தகுமார், ஆர்கைவ் வலைத்தளம்
- சிவபெருமான் திருவந்தாதி, சைவம்.ஆர்க்
- சிவபெருமான் திருவந்தாதி-மூலமும் உரையும், ஆர்கைவ் வலைத்தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Dec-2024, 19:21:24 IST