கலைமகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.
வெளியீடு, வரலாறு
சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ்.ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ.ஆச்சார்யா, எஸ்.வையாபுரிப்பிள்ளை, பெ.நா.அப்புஸ்வாமி,பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகன்னாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.
இலக்கிய இடம்
கலைமகள் தொடங்கப்பட்ட காலத்தில் பழைய இலக்கியமரபையும் புத்திலக்கியத்தையும் இணைக்க முயன்றது. உ.வே.சாமிநாதய்யர், தேசிக வினாயகம்பிள்ளை, டி.கே.சிதம்பரநாத முதலியார் போன்றவர்கள் இவ்விதழில் எழுதினர். மணிக்கொடி நின்று கலாமோகினி தொடங்கப்படுவதற்கு நடுவே உள்ள காலகட்டத்தில் புதுமைப்பித்தன் உள்ளிட்ட மணிக்கொடி எழுத்தாளர்கள் கலைமகள் இதழில் எழுதினர். 1935 ஆம் ஆண்டு கலைமகள் நடத்திய சிறுகதைப்போட்டியில் ந.பிச்சமூர்த்தி முதல்பரிசு பெற்றார். பின்னர் கலைமகள் குடும்ப இதழாக மாற்றப்பட்டது. அதில் ஏராளமான பெண்கள் எழுதினர். அநுத்தமா, சி.ஆர்.ராஜம்மா, ஆர்.சூடாமணி, கமலா சடகோபன் என பெண் எழுத்தாளர்களின் ஒரு நிரையை கலைமகள் உருவாக்கியது. இவர்களை பொதுவாகவே கலைமகள் எழுத்தாளர்கள் என்று சொல்வதுண்டு. கலைமகள் நடத்திய நாராயணசாமி ஐயர் நினைவு நாவல்போட்டி, அமரர் ராமரத்தினம் நினைவு குறுநாவல் போட்டி வழியாக தமிழில் பல முக்கியமான எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். உதாரணமாக பின்னாளில் ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளரான அகிலன் 1944ல் கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவுப்பரிசை தன் பெண் என்னும் நாவலுக்காக பெற்று அறிமுகமானார்.