ப.மொ. தைரிய நாதன்
ப.மொ. தைரிய நாதன் (ஜூன் 5, 1949) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். கூத்து நெறியாளர். குரல் வளத்திற்காகவும், நடிப்புத்திறனுக்காகவும் ரசிக்கப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பிறந்தார். பன்னிரெண்டு வயதிலிருந்து இசை நாடகங்களில் பங்கேற்றார். இவரது கலைப்பணியில் இவரது குடும்பமே இணைந்து செயல்பட்டது. தைரிய நாதனின் குடும்பத்தவர்களில் வயது வந்த மூன்று ஆண் பிள்ளைகளும், வயது வந்த பெண் பிள்ளையும் சிறந்த நாட்டுக்கூத்து, இசைநாடக, நாடகக்கலைஞராக வளர்ந்தார்கள். கல்வித்துறையிலும் படித்துக்கொண்டு நாடகத்துறையிலும் இவர்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
கலை வாழ்க்கை
தைரியநாதன் எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடியவர் . சுன்னாகம் எம். கோபாலரத்தினம் சங்கீத ஆசிரியரிடம், சங்கீதம் சுற்று, இசைநாடகங்கள் பலவற்றில் நடித்தார். சுன்னாகம் இளந்தென்றல் மன்றத்தில் பிரதான பாடகராகவும் நடிகராகவும் புகழ்பெற்ற தைரியநாதன் 1963இல் பிதாமரியசேவியர் அடிகளாரின் சீடன் வழியில் ஆதாம் ஏவாள் நாடகத்தில் 'ஏவாள்' பெண் பாத்திரம் ஏற்று நடித்தார். 1969இல் நடிகமணி வி.வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் சிறந்த நடிகையாகத் தேர்ந்து எடுத்து தொடர்ந்து பெண் பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகளின் நவரச நாடகங்களை நடிகமணி வி. வைரமுத்துவுடன் இணைந்து பெரும்பாலும் பெண் பாத்திரங்களை ஏற்று நடித்தார். 1997, 1998ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள இங்கிலாந்து, பாரிஸ், ஜெர்மணி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய கலாமன்றத்தால் மேடையேற்றப்பட்ட வடலிக்கூத்தரின் நாடகங்களில் ஜெனோவா(அரசன்), சத்தியவேள்வி(அரிச்சந்திரன்), சகுந்தலை(துஷ்யந்தன்) நடித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நாடக ஒலிபரப்பில் ஞானசௌந்தரி, பக்தநந்தனார், அரிச்சந்திரா நாடகங்கள் இடம் பெற்றன. திருமறைக்கலாமன்றத்தினூடாக ரூபவாகினியில் ஞானசௌந்தரி, ஏரோதன் நாடகங்களில் நடித்தார்.
யாழ் திருமறைக்கலாமன்றத்தின் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றினார். வண.பிதா. மரியசேவியர் அடிகளாரால் உருவாகும் நாடகங்களில் கதாநாயகனாக நடித்தார். ஐம்பெருங்காப்பிய நாடகங்களான வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி நாடகங்களிலும், ஞானசெளந்தரி, சத்தியவேள்வி நாடகங்களிலும் புகழ்பெற்றார். 1978இல் யாழ் பலகலைக்கழக மாணவர்களுக்கு சத்தியவான் சாவித்திரி நாடகம் பழக்கி நெறியாளராக இருந்தார். பல பாடசாலைகளிலும், மன்றங்களிலும், ஜன சமூக நிலையங்களிலும், ஆலயங்களிலும், ஒப்பனை செய்வதிலும், நாடகங்கள் பழக்குவதிலும் ஈடுபட்டார்.
விருதுகள்
- 1969இல் நடிகமணி வி.வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் சிறந்த நடிகையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
- 1970இல் ஆசிரியர் அண்ணாச்சாமி நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவிலில் “நடிப்பிசைச் செல்வன்” என்ற பட்டம் வழங்கினார்.
- திருமறைக்கலாமன்றம் “கலை வேந்தன்” பட்டம் பெற்றார்.
- பல மேடைகளில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
நடித்த கூத்துக்கள்
நடிகமணி வி.வி. வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நாடகங்களும் பாத்திரங்களும்
- அரிச்சந்திரா - சந்திரமதி
- பூதத்தம்பி - அழகவல்லி
- நல்லதங்காள் - அலங்காரி
- ஞானசௌந்தரி - லேனாள்
- நந்தனார் - பெரியகிழவர்
- பவளக்கொடி - பவளக்கொடி
- சத்தியவான் சாவித்திரி - சாவித்திரி
- சாரங்கதாரா - சித்திராங்கி
- அல்லி அருச்சுனா - அல்லி
- கோவலன் - கண்ணகி
திருவெளிப்பாடு காட்சி நாடகங்கள்
- அன்பில் அமர்ந்த அமரகாவியம் - ராயப்பர்
- களங்கம் - வழக்கறிஞர்
- சிலுவை உலா - ஒருவன்
- கல்வாரி பரணி - ராயப்பர்
- பலிக்களம் - ராயப்பர்
- சாவை வென்ற சத்தியன் - பரிசேயர்
- கல்வாரிச்சுவடு - ராயப்பர்