under review

செங்குந்தகுலமாட்சி

From Tamil Wiki
Revision as of 18:59, 7 December 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added and Edited: Link Created: Proof Checked)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

செங்குந்தகுலமாட்சி (பொ.யு. பனிரெண்டாம் நூற்றாண்டு), செங்குந்தர் குலத்தின் பெருமை, சிறப்பு, புகழைக் கூறும் நூல். இந்நூலைத் தொகுத்தவர் திருவாரூர்‌ சபாபதி முதலியார்‌.

வெளியீடு

செங்குந்தகுலமாட்சி நூல், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூலை, 1926-ல், காஞ்சி ஸ்ரீ நாகலிங்க முனிவர் பதிப்பித்தார். திருவாரூர் செங்குந்த மகாஜன சங்க நிறுவனர் தி.க.ச. சபாபதி முதலியார் இந்நூலைத் தொகுத்து வெளியிட்டார். சிறுமணவூர் முனிசாமி முதலியாரின் சென்னை சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் செங்குந்தகுலமாட்சி நூல் அச்சிடப்பட்டது.

நூல் அமைப்பு

பல புலவர்கள்,‌ பல கால கட்டங்‌களில்‌ இயற்றிய நூல்களில்‌ செங்குந்தர்‌ பற்றி வரும்‌ குறிப்புக்‌கள்‌ கொண்ட பாடல்களின் தொகுப்பே செங்குந்தகுலமாட்சி. இந்நூலில் 17 பாடல்கள் இடம் பெற்றன.

உள்ளடக்கம்

செங்குந்தகுலமாட்சி நூலில் செங்குந்த மக்களின்‌ பிரிவுகள், பழக்க வழக்கங்கள்‌, ஒழுக்கம்,‌ அறிவு, ஆற்றல்,‌ கொடை போன்ற செய்திகள் இடம்பெற்றன. செங்குந்தரின் தோற்றம் பற்றி, “செங்குந்தர்கள் உமை அன்னையின் திருவடிச்‌ சிலம்பிலிருந்து தோன்றிய நவமணியின் வழி வந்தவர்கள். உமை அம்மையின்‌ சாயலைத்‌ தம்மிடத்தே கொண்டு விளங்கிய பெண்களிடம்‌ இறைவனுடைய கருணையினால்‌ தோன்றியவர்கள். வேப்பமலர்‌ மாலையணிந்த பாண்டிய மன்னனைப்‌ போன்று இவ்வுலகில்‌ தோன்றி வாழுவார்கள்‌.” என்று சிறப்பித்துக் கூறுகிறது.

“சிவபெருமானுக்குத்‌ தொண்டரான நந்தியெம்பெருமான்‌ தோன்றிய மரபு செங்குந்தர் மரபு” என்றும், “செங்குந்தர்கள் அரசகுலத்தில் பிறந்து, கற்பகத்‌ தருவைப்‌ போல்‌ தழைத்து வளர்ந்து, முசுகுந்தச்‌ சக்கரவர்த்திக்குத்‌ துணைவர்களாக‌ விளங்கியவர்கள்‌” என்றும் செங்குந்தர்களின் பெருமையைப் பலவாறாகப் புகழ்ந்து கூறுகிறது செங்குந்தகுலமாட்சி.

பாடல்

அம்மானை

மாவடியி லேவிளங்கும்‌ வல்லிகா மாட்சித்தாய்‌

சேவடியி லேயுதித்தார்‌ செங்குந்த‌ ரம்மானை

சேவடியி லேயுதித்தார்‌ செங்குந்த‌ ராமாயின்‌

பாவடியி னின்று பசப்புவதே‌ னம்மானை

பசித்தவருக்‌ கன்னமிடப்‌ பசப்பாரோ வம்மானை

திருவாரூர் லீலை

கண்டிடுந்‌ தவங்க ளெல்லாங்‌ கந்தவே டனக்கே யாக்கி

எண்டருஞ்‌ சிறப்பு வாய்ந்த வியன்முசு குந்த மன்னன்‌

மண்டனிற்‌ கொண்டு வந்த மாப்பெரும்‌ வீர‌ ரொன்பான்‌

கண்டியர்‌ தம்மை முந்திக்‌ கமலையில்‌ வைத்தான்‌ மாதோ


இப்பெருங்‌ காரணத்தா‌ லெழினவ வீரர்‌ கூட்டம்‌

செப்பருஞ்‌ சோழ நாட்டுத்‌ திருப்பெயர்‌ முதலிற்‌ பெற்றார்‌

தப்பருஞ்‌ சீர்த்தி கொண்ட சைவசெங்‌ குந்தர்‌ மேன்மை

எப்படி யுரைப்ப தாகு‌ மென்றனன்‌ சூதன்‌ றானே

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.