மஹேஷ் குமார்
- குமார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குமார் (பெயர் பட்டியல்)
மஹேஷ் குமார் (பிறப்பு: ஏப்ரல் 18, 1971) சிங்கப்பூர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதை, கவிதை, சுய அனுபவக்கதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
மஹேஷ் குமார் ஏப்ரல் 18, 1971 அன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வெ.ராமமூர்த்தி – அ.பாக்கியலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடுமலைப்பேட்டையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகல்வியை முடித்தார். பொள்ளாச்சி நாச்சிமுத்து தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டயப்படிப்பை முடித்தார். இந்தியப் பொறியாளர்கள் நிறுவனத்தில் (AMIE) இயந்திரவியல் துறையில் இளங்கலைப்பட்டமும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
தனி வாழ்க்கை
உடுமலைப்பேட்டை, சென்னை, புதுதில்லி மற்றும் பல்வேறு நாடுகளில் பதினான்கு வருடங்கள் பணியாற்றிய பிறகு 2006-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். தற்போது கிரெடிட் சுவிஸ் வங்கியில் மூத்த வணிக ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
லட்சுமியை 2004-ல் மணந்தார். மகளின் பெயர் சஹானா.
இலக்கிய வாழ்க்கை
தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருக்கிறார். 'தி சிராங்கூன் டைம்ஸ்', 'தங்கமீன்' போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஆங்கிலத்திலும் கவிதை, கதைகள் எழுதி வருகிறார். இந்தி, உருது, மலையாளம், ஆங்கில மொழிக் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார்.
விருதுகள்
- சிங்கப்பூர் தங்கமுனை விருது (மெரிட், 2017)
இலக்கிய இடம், மதிப்பீடு
சித்துராஜ் பொன்ராஜ் “கவிதையை மொழிபெயர்ப்பதென்பது மிக நல்ல சங்கீதத்தை சைகைகளாலேயே விளக்கிச் சொல்ல முயல்வதை விடவும் கடினமும் ஆபத்துகளும் நிறைந்தது. அப்படி ஒருவன் சைகைகளால் விளக்கிச் சொல்லிவிட்டான் என்றால் அவன் திறமைசாலி. மஹேஷ் குமார் மிகவும் திறமைசாலி. ஒவ்வொரு கவிஞரின் மொழிப் பயன்பாட்டை, அவர்கள் கையாளும் சித்திரங்களின் இயல்புகளை ஓரளவு காட்டும் வகையில் அவர்களுக்குரிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருப்பதும் வெறும் வார்த்தைகளை மட்டுமின்றி கவிதையின் உள்ளார்ந்த இயல்புகளையும் அந்த கவிஞனுக்கே உரிய மொழிநடையையும் குரலையும் கூட மொழிபெயர்த்திருப்பதும் பாராட்டுதலுக்குரியது” எனக் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
தமிழ்
- உடுமலைக்காரன் கதைகள் - மனமும் மனம் சார்ந்த இடமும் (2021, சிறுகதைத் தொகுப்பு)
- வண்ணம் தேடும் சொற்கள் (2021, மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- ரேடியோ நாயுடு – மனதில் நின்ற மனிதர்கள் (2022, சுய அனுபவக்கதைகள்)
ஆங்கிலம்
- Time Does Sting (2014, Anthology of Poems)
- In Code We Trust (2018, a primer on blockchain technology)
இணைப்புகள்
- உடுமலைக்காரன் கதைகள் – மஹேஷ் குமார் – சிவானந்தம் நீலகண்டன் (wordpress.com)
- உடுமலைக்காரன் கதைகள்' - மகேஷ் குமார் (எனது வாசகப் பார்வை)-அழகுநிலா -காணொளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Sep-2022, 21:03:10 IST