under review

பொதும்பில் புல்லாளங் கண்ணியார்

From Tamil Wiki
Revision as of 14:09, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:புலவர்கள் to Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கண்ணியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்ணியார் (பெயர் பட்டியல்)
பொதும்பில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பொதும்பில் (பெயர் பட்டியல்)

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூலான அகநானூற்றில் 154-ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் என்பதில் பொதும்பில் என்பது புலவரின் ஊர். புல்லாளம் என்பது இவர் கண்களிலிருந்த புல் போன்ற வரிக் கோடுகளைக் குறிப்பதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் இயற்றிய ஒருபாடல் சங்கத் தொகை நூலான அகநானூறின் 154-வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

கோடல்
  • மழை பொழிந்ததால் தவளை பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கறங்குகிறது (ஒலிக்கிறது).
  • பிடவம் பூக்கள் நுண்மணல் போல் வழியெங்கும் வரிவரியாக வரித்துக் கிடக்கின்றன.
  • பாம்பு படமெடுப்பது போல கோடல் பூ பூத்திருக்கிறது.
  • இரலைமான் ஊற்று நீரைப் பருகித் தன் துணையோடு படுத்துக்கிடக்கிறது.

பாடல் நடை

  • அகநானூறு 154

திணை: முல்லைத்திணை

படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Nov-2023, 10:08:49 IST