ம. தவசி

From Tamil Wiki
Revision as of 14:44, 30 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs)
ம. தவசி


ம. தவசி (ஏப்ரல் 19, 1976 - மார்ச் 9, 2013) தமிழ் எழுத்தாளர்களுள் முதன் முதலில் இளைஞர் இலக்கிய விருது (யுவபுரஸ்கார் விருது) பெற்றவர். எளிய மனிதர்களின் கிராமத்து யதார்த்த வாழ்வை நுட்பமான மொழியில் படைப்பாக்கியவர். தமிழ்ப் புனைவுலகம் தொடாத கிராமத்துக் களங்களைத் தன் படைப்புகளின் கருவாக்கி, நேரடியாகக் கதைகூறியவர். ஜல்லிக்கட்டு பற்றி சிசு. செல்லப்பா எழுதிய ‘வாடிசாவல்’ என்ற குறுநாவலுக்கு நிகரானது இவர் சேவல் சண்டையைப் பற்றி எழுதிய ‘சேவல்கட்டு’ என்ற குறுநாவல்.

பிறப்பு, கல்வி

ம. தவசி முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி - இருளாயி தம்பதியருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் ம. தவசியாண்டி. தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். மதுரை ‘தினபூமி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

            இவருடைய மனைவி பெயர் அங்காளேஸ்வரி. இவருக்கு சங்கமித்ரா, வினோத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. புற்றுநோயின் காரணமாக உடல்நலிவுற்றார். அப்போது ‘அப்பாவின் தண்டனைகள்’ என்ற புதிய நாவலை எழுதத் தொடங்கி, நிறைவு செய்தார். இவர் மார்ச் 9, 2013இல் காலமானார். இவர் இறந்து ஓர் ஆண்டுக்குப் பின்னர், ‘அப்பாவின் தண்டனைகள்’ என்ற தன்வரலாற்று நாவல் வெளிவந்தது.

இலக்கிய வாழ்க்கை

ம. தவசி


கல்லூரி மாணவராக இருக்கும்போது ‘குருத்து’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார். வெவ்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்தார். சேவல் சண்டையை மையப்படுத்திக் கள ஆய்வின் வழியாகச் ‘சேவல்கட்டு’ என்ற குறுநாவலை எழுதினார்.

சேவல்கட்டு - குறுநாவல்

‘சேவல் சண்டை’ என்பது, இரண்டு சேவல்களுக்கு இடையிலான சண்டைதான். ஆனால், சேவல் சண்டைக்காகப் பழக்கப்படுத்தப்பட்டு ‘சேவல்கட்டில்’ இறக்கிவிடப்படும் இரண்டு சேவல்களுக்கு இடையில் மனிதர்களின் பகட்டு, பெருமிதம், அவமானம், மரியாதை ஆகியனவும் அகப்பட்டுக் கொள்கின்றன என்பதை வெளிப்படுத்திய நாவல் இது. இந்த நாவலுக்கு 2011 ஆண்டுக்கான இளைஞர் இலக்கிய விருது (யுவபுரஸ்கார் விருது) கிடைத்தது. இவர் ‘அப்பாவின் தண்டனைகள்’ என்ற தலைப்பில் தன்வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

கி. ராஜநாராயணன், கோணங்கி ஆகியோர் கட்டமைத்த தனித்துவமான கிராமச் சூழலைப் போலவே ம. தவசி தன் படைப்பில் உருவாக்கிக் காட்டும் கிராமச் சூழலும் முக்கியமானது; தனித்துவமானது. தமிழல் சேவல் சண்டையைப் பற்றிச் சிறுகதைகள் வந்துள்ளன. ஆனால், சேவல் சண்டையைப் பற்றி நுட்பமாகவும் விரிவான தகவல்களுடனும் எழுதப்பட்ட படைப்பு என்ற நிலையில், இவரது ‘சேவல்கட்டு’ என்ற குறுநாவல் மிக முக்கியமானது. 2000க்குப் பின்னர் எழுத வந்த இளம் படைப்பாளர்களுள் இவரைத் தனித்து இனங்கான இந்த ஒரு குறுநாவலே போதுமானது.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  1. பனைவிருட்சி -
  2. ஊர்களில் அரவாணி - 2012
  3. பெருந்தாழி -
  4. நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2011
கவிதைத் தொகுப்பு
  1. உள்ளொளி - 2012
குறுநாவல்
  1. சேவல்கட்டு - 2009
தன்வரலாற்று நாவல்
  1. அப்பாவின் தண்டனைகள் - 2014

விருதுகள்

  1. யுவபுரஸ்கார் விருது - 2011

உசாத்துணை

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9673

https://www.dinamalar.com/news_detail.asp?id=668392