being created

இரா. இளங்குமரனார்

From Tamil Wiki
Revision as of 10:25, 30 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


This is being created by Dr P Saravanan

File:புலவர் .jpg
புலவர் இரா. இளங்குமரனார்


புலவர் இரா. இளங்குமரனார் (ஜனவரி 30, 1927 - ஜூலை 25, 2021) பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர். ஏறத்தாழ 5,000 தமிழ் முறைத் திருமணங்களை நடத்தியவர். ‘திரு.வி.க. போல, இறுதிக்காலத்தில் கண்பார்வை பறிபோய்விட்டால், தன்னுடைய எழுத்துப் பணி பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே!’ என்பதற்காகக் கண்களை மூடியே எழுதும் திறனை வளர்த்துக்கொண்டார். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். 550க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பிறப்பு, கல்வி, பணி

இராமு – வாழவந்த அம்மை தம்பதியருக்கு ஜனவரி 30, 1927 அன்று திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் இரா. இளங்குமரன் பிறந்தார். இயற்பெயர் கிருஷ்ணன். பள்ளிப் பருவத்திலேயே சொற்பொழிவாற்றுதல், பாடல்களை இயற்றுதல் ஆகியவற்றில் திறமை பெற்றிருந்தார்.

19 ஆம் வயதில் (ஆகஸ்ட் 04, 1946) சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியரானார். பின்னர் முறைப்படி புலவர் படிப்புக்கான தேர்வை சென்னை பல்கலைக்கழகத்தில் எழுதி, 1951-ல் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். கரிவலம்வந்தபுரத்தில் அரசு பணிபுரிந்த போது இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். ‘அரசு பணியில் இருப்பவர் பிற நிகழ்வில் பங்கேற்கக் கூடாது’ என்று கூறிய போது பதவியையே துறந்துள்ளார்.

பின்னர், திருப்பரங்குன்றம் மு.மு.உ. பள்ளித் தமிழாசிரியராக, மேல்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞராக, தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலித் திட்டத்தில் மொழியறிஞராகச் சிறக்கப்பணியாற்றியவர். இவருக்குபாரதிதாசன் பல்கலைக் கழகம் முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கியுள்ளது.

தனிவாழ்க்கை

இளங்குமரானாருக்கு இளங்கோவன், பாரதி ஆகிய இரண்டு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இவரின் தத்துப்பிள்ளை கங்கையார். பேத்தி முத்தரசி ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணிறாற்றுகிறார். பண்பாட்டுக்கு காந்தியையும் பொருளியிலுக்கு மார்க்ஸையும் சமூக முன்னேற்றத்துக்குப் பெரியாரையும் தாம் பின்பற்றுவதாகவும் திரு. வி. க. வை வாழ்வியலுக்கும் மறைமலை மடிகளைத் தனித்தமிழ் உணர்வுக்கும் இலக்குவானரைத் தமிழ்தொண்டுக்கும் பாவாணரைச் சொல்லலாய்வுக்கும் வழிகாட்டிகளாகத் தான் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பொது வாழ்க்கை

புலவர் இரா. இளங்குமரனார்

ஓர் இளம் மாணவி கைம்பெண் ஆனதைக் கண்டு மனம் நொந்து அவள் மறுவாழ்வு பெற வேண்டும் என ‘விதவைக் குரல்’ என்னும் தொகுப்பு எழுதி ‘இன்ப வாழ்வு’ என பெயர் மாற்றம் செய்து மு. வரதராசன் அவர்களின் முன்னுரையுடன் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

திருமணங்களைத் தமிழரின் தொன்மையான முறையில் நடத்தி வைப்பதில் ஆர்வம் காட்டினார். 1951-ல் தொடங்கிய இந்தப் பணியை, தனது 92 வயது வரையில் தொடர்ந்தார். இதுவரைவில், 4,865 தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.

மதுரை திருநகரில் பாவாணர் நூலகத்தை அமைத்தவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அல்லூரில், ‘திருவள்ளுவர் தவச்சாலை’ என்ற பெயரில் தமிழ்ப்பணி ஆற்றிவந்தார். அந்தத் தவச்சாலையில் திருவள்ளுவர் சிலையை நிறுவினார். 1984 முதல் 1994 வரை தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்ப்ட்ட 1330 சிறுகற்களை 1330 குறள்களை நினைவூட்டும் விதமாய்ச் சேகரித்து மூன்று சிறு குன்றுகளாக இந்தச் சிலைக்குப் பின் அமைத்துள்ளார். அங்கு 45,000 நூல்கள் கொண்ட நூலகத்தையும் நடத்தினார். பிற்காலத்தில் அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

இளம் பிள்ளைகளுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் தொல்காப்பியம், திருக்குறள், திருமுருகாற்றுப்படை, பொருநர்ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு எனப் பழந்தமிழ் நூல்களைப் பற்றி எளிய நடையில் எழுதினார். ஏறத்தாழ 20முதல் 30 வரையிலான பக்கங்களே கொண்ட இந்தக் குறுநூல்களை மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் மாதந்தோறும் வெளியிட்டு, பரவலாக்கியது.

திருப்பரங்குன்றம் மு.மு.உ. பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோதே தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர், மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர், தேர்வுக்குழு அமைப்பாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் மிகமூத்த ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருந்தார். மதுரை தமிழ்ச் சங்கம் குறித்த வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

முழுமையாக கிடைக்கப்பெறாமல், காலத்தால் செல்லரித்துப்போன 'குண்டலகேசி' காப்பியத்தைத் தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்து,1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். இவர் எழுதிய ‘திருக்கு கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963இல்  முன்னாள் பாரதப் பிரதமா் நேரு வெளியிட்டார்.  இவரின் ‘சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு’ எனும் நூலை 2003இல் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வெளியிட்டார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவரின் படைப்புகளை ‘இளங்குமனரார் தமிழ் வளம்’ என்ற பொதுத்தலைப்பில் 40 தொகுதிகளாகத் தொகுத்துள்ளது.

இவரது தமிழ்ப்பணியை வெளிப்படுத்தும் விதமாக ஆவணப்படத்தை நெய்வேலி அ. செந்தில் - அகிலா ஆகியோர் தயாரித்துள்ளனர். வேர்கள். மு. இராமலிங்கம் ஆலோசகராக இருந்து ஆவணப்படத்துக்கு உதவியுள்ளார்.

இலக்கிய இடம்

‘உலகில் முதன்முதலாகப் பெண்ணொருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலான ‘காக்கைப்பாடினியம்’ மறைந்துவிட்டது’ என்று தமிழறிவுலகம் கருதியவேளையில், அதனை மீட்டெடுத்து தந்த  தமிழ்ப்பேரறிஞர் இவர். “திருக்குறளுக்கு உரையைத் திருக்குறளிலேயே தேடவேண்டும்” என வலியுறுத்தியவர். அதனைத் தான் மூன்று தொகுதிகளாக எழுதிய ‘திருக்குறள் வாழ்வியல் களஞ்சியம்’ என்ற புத்தகத்தின் வழியாக நிறுவியவர். கி.வா. ஜகந்நாதன், நாமக்கல் கவிஞர் ஆகியோர் ஆய்வு செய்து எழுதிய திருக்குறள் உரைகளுக்கு நிகரானது இவரின் திருக்குறள் உரை. இளந்தலைமுறையினருக்குப் பழந்தமிழ் நூல்களைப் பற்றிய எளிய அறிமுகத்தை அளித்தவர்.

நூல்கள்

  1. அன்பும் அறிவும் (சிறுவர் பாடல்)
  2. இரத்தக்கறை (நாடகம்)
  3. நாவலர் பாரதியார் (வரலாறு)
  4. தொண்டை நாட்டு வணிகம்
  5. முப்பெரும் புலவர்கள்
  6. அண்ணல் ஆபிரகாம்
  7. திருக்குறள் கதைகள், கட்டுரைகள்
  8. காப்பியக் கதைகள் (ஒவ்வொன்றும் பத்துத் தொகுதிகள்)
  9. முல்லாவின் கதை முப்பது
  10. இன்ப வாழ்வு
  11. மேல்நாற்பது கீழ் நாற்பது (கவிதை)
  12. காக்கைப் பாடினியம் (பதிப்பாசிரியர்)
  13. தகடூர் யாத்திரை மூலமும் உரையும் (உரையாசிரியர்)
  14. பெரும்பொருள் விளக்கம்
  15. தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்
  16. பாவாணர் கடவுள் நம்பிக்கையும் சமயச் சால்பும் - 2008
  17. திருக்குறள் வாழ்வியல் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)
  18. உவமை வழி அறநெறி விளக்கம் (மூன்று தொகுதிகள்) - 2006
  19. திருக்குறள் கருத்துரை - 2009
  20. திரு.வி.க. தமிழ்க்கொடை அறிமுகம் - 2006
  21. திரு.வி.க. முன்னுரைகள் - 2006
  22. ஈழம் தந்த இனிய தமிழ்க்கொடை - 2006
  23. தேவநேயம் (பாவாணர்) - 13 தொகுதிகள் (தொகுப்பாசிரியர்) - 2004
  24. இலக்கியச் செல்வர் இருவர்
  25. தமிழர் வாழ்வியல் இலக்கணம்
  26. கட்டுரைப் பயிற்சி
  27. கல்வி செல்வம்
  28. மொழி ஞாயிறு
  29. இயற்கை இன்பம்
  30. தேனருவி
  31. தனிப்பாடல் கனிச்சுவை
  32. தமிழ் உரை
  33. தமிழ் நூறு
  34. நல்ல மாணவனாக
  35. தமிழ் வளம் சொல்
  36. இலக்கிய வகை அகராதி
  37. குன்றக்குடி அடிகளாரின் திருக்குறட்பணி
  38. வேலா கருத்துக் களஞ்சியம்
  39. திருக்குறளுக்கு உரை திருக்குறளே
  40. பாணர்
  41. மனவளப் பயிற்சி
  42. பாவாணர் பாடல்கள்
  43. இலக்கண வரலாறு
  44. வையை வளம்
  45. ஒரு புல் - தன் வரலாறு (தன் வரலாறு)
  46. புறத் திரட்டு
  47. திருக்குறள் வாழ்வியல் உரை
  48. இனிக்கும் இலக்கணம்
  49. இலக்கண அகராதி (ஐந்திலக்கணம் அகம், புறம்)
  50. இலக்கண அகராதி (ஐந்திலக்கணம் எழுத்து, சொல்)
  51. இலக்கண அகராதி (ஐந்திலக்கணம் யாப்பு, அணி)
  52. இணைச்சொல் அகராதி
  53. இலக்கண மேற்கோள் விளக்கம்
  54. உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்
  55. களவியற்காரிகை
  56. சுவடிக்கலை
  57. சுவடிப் பதிப்பியல் வரலாறு
  58. செந்தமிழ் ஓர் அறிமுகம்
  59. செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் (10 தொகுதிகள்)
  60. தனித்தமிழ் இயக்க வரலாறு
  61. தமிழர் வாழ்வியல் இலக்கணம்
  62. தமிழிசை இயக்கம்
  63. தேவநேயப் பாவாணர்
  64. தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியம்
  65. பாரதவெண்பா உரைவிளக்கம் (பதிப்பாசிரியர்)
  66. பாவாணர் பொன்மொழிகள், உவமைகள்
  67. மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
  68. பாவாணர் வரலாறு
  69. மறைமலையடிகள்


விருதுகள்

  1. நல்லாசிரியர் விருது - 1978
  2. செந்தமிழ் அந்தணர் பட்டம் - 1991
  3. திரு.வி.க. விருது - 1994
  4. திருக்குறள் செம்மல் விருது - 1995
  5. திருச்சி தமிழ்ச் சங்க விருது - 1996
  6. குறள் ஞாயிறு விருது - 1995
  7. பெரியார் விருது - 1997
  8. மொழிப்போர் மறவர் விருது - 1999
  9. கம்பர் விருது - 2000
  10. தமிழ் இயக்கச் செம்மல் விருது - 2003
  11. திருக்குறள் செம்மல் விருது - 2004
  12. உலகப் பெருந்தமிழர் விருது - 2004
  13. தமிழ்ச் செம்மல் விருது - 2004
  14. பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் விருது - 2012
  15. வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது -
  16. கனடா இலக்கியத் தோட்ட விருது -

உசாத்துணை

https://www.tamiltodaynews.com/government-of-tamil-nadu-award-winning-chief-ir-ilangumaran-passed-away/

https://dravidan.in/pulavar-ira-ilankumaranar-obituary/

http://www.ulakaththamizh.in/book_all/4

https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg&list=PLyA_oMVWk_fma7DJGA_3mA09cd52ieBW9&index=4