under review

விந்தியா

From Tamil Wiki
Revision as of 20:31, 25 May 2022 by Ramya (talk | contribs) (Created page with "விந்தியா (இந்தியா தேவி) (1927 - அக்டோபர் 7 , 1999) தேச விடுதலை , சமூக விடுதலை , பெண் விடுதலை இவற்றை எல்லாம் ஒருங்கே சிந்தித்துத் தனது படைப்புகளில் வெளிப்படுத்திய எழுத்தாளர்களில் குறிப்பி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

விந்தியா (இந்தியா தேவி) (1927 - அக்டோபர் 7 , 1999) தேச விடுதலை , சமூக விடுதலை , பெண் விடுதலை இவற்றை எல்லாம் ஒருங்கே சிந்தித்துத் தனது படைப்புகளில் வெளிப்படுத்திய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் விந்தியா.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் இந்தியா தேவி. இவர் ஒரிஸாவில் உள்ள பெர்ஹாம்பூரில் 1927-ல் கே.என்.சுந்தரேசன், தையல்நாயகி இணையருக்கு மகளாகப் பிறந்தார். உள்ளூர் பள்ளியில் பயின்றார். அங்கு தெலுங்கு பாட மொழியாக இருந்ததால் வீட்டில் அவருக்குத் தந்தை தமிழ் கற்பித்தார். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அக்கால வழக்கப்படி அவருக்கு 1942-ல் பதினைந்து வயதில் திருமணம் நடந்தது. கணவர் வி.சுப்பிரமணியன் கட்டாக்கில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியதால் அவருடன் அங்கே வசித்தார். பிரபல எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் ஆனந்த ரங்கன் விந்தியாவின் இளைய சகோதரர். இவர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலரது நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சுதேசமித்திரன், கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் வழியாக இளவயதில் வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். ’விந்தியா’, ‘விந்தியா தேவி’ என்ற புனைப்பெயர்களில் கதைகள் எழுதினார். முதல் சிறுகதை ’பார்வதி’ கலைமகளின் சுதந்திரதின இதழில் ஆகஸ்ட் 15, 1947-ல் வெளியானது. பால்ய விவாகம் சகஜமாக இருந்த அந்தக் காலத்தில், ஒரு பெண் பருவம் அடைந்ததை மறைத்தால், அப்படியே மறைத்துத் திருமணமும் செய்தால் என்ன ஆகும் என்பதை அந்தக் கதையில் சொல்லியிருந்தார். அப்போது விந்தியாவுக்கு வயது 20.

கி.வா.ஜ. தொடர்ந்து கலைமகளுக்குக் கதைகள் எழுத ஊக்குவித்துக் கடிதம் எழுதினார். பல கதைகளை கலைமகளில் வெளியிட்டார் . சுதேசமித்திரன் , கலைமகள் , காவேரி , பாரிஜாதம் , வெள்ளிமணி , கல்கி போன்ற இதழ்களில் தொடர்ந்து விந்தியாவின் சிறுகதைகள் வெளியாகின. பிற்காலத்தில் ஆனந்தவிகடன் , குமுதம் , தினமணிகதிரிலும் விந்தியாவின் சிறுகதைகள் வெளிவந்தன. இவர் கதைகளில் ’ஏடுகள் சொல்வதுண்டோ ?’ குறிப்பிடத் தகுந்த ஒன்று . மார்ச் 1948-ல் 'காவேரி' இலக்கிய இதழில் இச்சிறுகதை வெளியானது. கத்தி மேல் நடக்கக் கூடிய ஒரு கருவை அதில் கையாண்டிருந்தார். சந்தர்ப்பச் சூழ்நிலைகளால், தங்கள் காதல் நிறைவேறாமல், பல காதலர்கள், தங்கள் காதலிகளுக்கு 'அண்ணா' ஆகின்றனர். ஆனால் ஒரு பெண்ணுக்கு குழந்தையாக இருக்கும்போது 'அண்ணா' என்று சொல்லப்பட்ட அது வரை பார்த்தே இராத ஓர் ஆணின் மீது, பருவ வயதில், அண்ணா என்று தெரியாமலேயே முதன் முதலில் சந்திக்கும்போது காதல் வந்தால் என்ன ஆகும்? அதைத் தான் கதையில் பிரமிப்பூட்டும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் விந்தியா. இப்போதும் கூட எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ளத் தயங்கும் ஒரு கருவை, தன் ஆரம்ப காலகட்டக் கதையிலேயே எடுத்துக் கொண்டு, அதனை மிகச் சிறப்பாகக் கையாண்டு வெற்றி பெற்றார். கண்ணனின் மாமா, ஒரு சொல், குற்றமுள்ள நெஞ்சு, கற்பனை உள்ளம், பெயர் மாற்றம், அந்த நாளிலே, ஞானம் வேண்டாம், அமைதியின் எதிரொலி, அனுபவ வார்த்தை, போகும்பொழுதும், நல்ல மனது, கிடைத்தது மாற்று, அன்பு மனம், மாசு, கிறுக்கு போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள். நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.'சுதந்திரப் போர்' என்ற நாவலை எழுதினார். 

இவரது நாவலும் சிறுகதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விந்தியாவின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் தெலுங்கில், எழுத்தாளர் சேஷராவ் அவர்களால் மொழிபெயக்கப்பட்டன. சுதேசமித்திரனில் விலைவாசி, தேர்தல், ஜனநாயகம் குறித்தெல்லாம் பல கட்டுரைகள் எழுதினார். பேராசிரியர் ஆனந்த ரங்கன் விந்தியாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ‘Cupids's Alarms' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். விந்தியாவின் 'சுதந்திரப் போர்’ நாவலையும் ‘Rajeswari' என்ற தலைப்பில் ஆனந்த ரங்கன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவற்றை அமெரிக்காவில் உள்ள 'குறிஞ்சி பதிப்பகம்' வெளியிட்டது.

விருதுகள்

  • 'அன்பு மனம்' சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்றது.
  • சுதேசமித்திரன் நடத்திய கட்டுரைப் போட்டியில் இவரது 'அம்மன் திருவிழா' கட்டுரை, சிறந்த கட்டுரைக்கான பரிசைப் பெற்றது.
  • கலைமகள் நாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டிக்காக விந்தியா எழுதிய நாவல் 'சுதந்திரப் போர்’ பரிசு பெற்றது.

மறைவு

அக்டோபர் 7 , 1999 ல் விந்தியா காலமானார் .

நூல்கள்

நாவல்
  • சுதந்திரப் போர்
சிறுகதைகள்
  • கண்ணனின் மாமா
  • ஒரு சொல்
  • குற்றமுள்ள நெஞ்சு
  • கற்பனை உள்ளம்
  • பெயர் மாற்றம்
  • அந்த நாளிலே
  • ஞானம் வேண்டாம்
  • அமைதியின் எதிரொலி
  • அனுபவ வார்த்தை
  • போகும்பொழுதும்
  • நல்ல மனது
  • கிடைத்தது மாற்று
  • அன்பு மனம்
  • மாசு
  • கிறுக்கு

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.