being created

இரா. இளங்குமரனார்

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


This is being created by Dr P Saravanan

File:புலவர் .jpg
புலவர் இரா. இளங்குமரனார்


புலவர் இரா. இளங்குமரனார் (ஜனவரி 30, 1927 - ஜூலை 25, 2021) பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர்.

பிறப்பு, கல்வி, பணி

இளங்குமரானார், படிக்க ராமு – வாழவந்த அம்மை தம்பதியருக்கு ஜனவரி 30, 1927 அன்று திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே சொற்பொழிவாற்றுதல், பாடல்களை இயற்றுதல் ஆகியவற்றில் திறமை பெற்றிருந்தார். 19 ஆம் வயதில் (ஆகஸ்ட் 04, 1946) சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பள்ளியில் தமிழாசிரியரானார். பின்னர் முறைப்படி புலவர் படிப்புக்கான தேர்வை சென்னை பல்கலைக்கழகத்தில் எழுதி, 1951-ல் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். பின்னர் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராக, மேல்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞராக, தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலித் திட்டத்தில் மொழியறிஞராகச் சிறக்கப்பணியாற்றியவர். இவருக்குபாரதிதாசன் பல்கலைக் கழகம் முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கியுள்ளது.

தனிவாழ்க்கை

 இவருக்கு இளங்கோவன், பாரதி ஆகிய இரண்டு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். பேத்தி முத்தரசி ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணிறாற்றுகிறார்.

பொது வாழ்க்கை

புலவர் இரா. இளங்குமரனார்

தமிழரின் தொன்மையான முறையில் திருமணங்களை நடத்தி வைப்பதில் ஆர்வம் காட்டினார். 1951-ல் தொடங்கிய இந்தப் பணியை, தனது 92 வயது வரையில் தொடர்ந்தார். இதுவரைவில், 4,865 தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்.

திருச்சியில், ‘திருவள்ளுவர் தவச்சாலை’ என்ற பெயரில் தமிழ்ப்பணி ஆற்றிவந்தார். அங்கு 45,000 நூல்கள் கொண்ட நூலகத்தையும் நடத்தினார். பிற்காலத்தில் அதில் 40 ஆயிரம் நூல்களை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

இளம் பிள்ளைகளுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் தொல்காப்பியம், திருக்குறள், திருமுருகாற்றுப்படை, பொருநர்ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு என்று எழுதினார். ஏறத்தாழ 20முதல் 30 வரையிலான பக்கங்களே கொண்ட இந்தக் குறுநூல்களை மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் மாதந்தோறும் வெளியிட்டு, பரவலாக்கியது.

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் மிகமூத்த ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக இருந்தார். மதுரை தமிழ்ச் சங்கம் குறித்த வரலாற்று நூலை எழுதியுள்ளார். ‘திரு.வி.க. போல, இறுதிக்காலத்தில் கண்பார்வை பறிபோய்விட்டால், தன்னுடைய எழுத்துப் பணி பாதிக்கப்பட்டுவிடக் கூடாதே!’ என்பதற்காகக் கண்களை மூடியே எழுதும் திறனை வளர்த்துக்கொண்டார்.

தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

இலக்கிய வாழ்க்கை

முழுமையாக கிடைக்கப்பெறாமல், காலத்தால் செல்லரித்துப்போன 'குண்டலகேசி' காப்பியத்தைத் தன்னுடைய கற்பனைத் திறனாலும், கவிதை இயற்றும் ஆர்வத்தாலும் முழுமை செய்து,1958-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார். இவர் எழுதிய ‘திருக்கு கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963இல்  முன்னாள் பாரதப் பிரதமா் நேரு வெளியிட்டார்.  இவரின் ‘சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு’ எனும் நூலை 2003இல் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டார்.

550க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

இலக்கிய இடம்

‘உலகில் முதன்முதலாகப் பெண்ணொருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலான ‘காக்கைப்பாடினியம்’ மறைந்துவிட்டது’ என்று தமிழறிவுலகம் கருதியவேளையில், அதனை மீட்டெடுத்து தந்த  தமிழ்ப்பேரறிஞர் இவர்.

நூல்கள்

விருதுகள்

  1. நல்லாசிரியர் விருது - 1978
  2. செந்தமிழ் அந்தணர் பட்டம் - 1991
  3. திரு.வி.க. விருது - 1994
  4. திருக்குறள் செம்மல் விருது - 1995
  5. திருச்சி தமிழ்ச் சங்க விருது - 1996
  6. குறள் ஞாயிறு விருது - 1995
  7. பெரியார் விருது - 1997
  8. மொழிப்போர் மறவர் விருது - 1999
  9. கம்பர் விருது - 2000
  10. தமிழ் இயக்கச் செம்மல் விருது - 2003
  11. திருக்குறள் செம்மல் விருது - 2004
  12. உலகப் பெருந்தமிழர் விருது - 2004
  13. தமிழ்ச் செம்மல் விருது - 2004
  14. பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் விருது - 2012
  15. வடஅமெரிக்க தமிழ்ச்சங்க கூட்டமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது -
  16. கனடா இலக்கியத் தோட்ட விருது -

உசாத்துணை

https://www.tamiltodaynews.com/government-of-tamil-nadu-award-winning-chief-ir-ilangumaran-passed-away/

https://dravidan.in/pulavar-ira-ilankumaranar-obituary/