மா. கிருஷ்ணன்
மா. கிருஷ்ணன்(ஜூன் 30, 1912 - பிப்ரவரி 18, 1996) எழுத்தாளர், சுற்றுசூழல் ஆர்வலர். தமிழில் சுற்றுசூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர்.
வாழ்க்கைக் குறிப்பு
மா. கிருஷ்ணன் திருநெல்வேலி, தச்சநல்லூரில் அ. மாதவையா, மீனாட்சி தம்பதியினருக்கு எட்டாவது மகனாக ஜூன் 30, 1912-ல் பிறந்தார். உயர் கல்வியை சென்னை இந்து உயர் நிலைப்பள்ளியில் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சட்டப் படிப்பும் பயின்றார். கர்நாடகாவின் சந்தூர் மகாராஜாவிடம் உதவியாளராக, ஆசிரியர், நீதிபதி, அரசின் ஆலோசகர், மேலாண்மை அதிகாரி என பல பொறுப்புகளில் இருந்தார்.
சூழலியல்
இவர் கல்லூரியில் படிக்கும் போது பி.எப். ஃபைசன் என்ற தாவரவியல் பேராசிரியரால் ஈர்க்கப்பட்டார். அவருடனான நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளுக்கான பயணங்களில் பறவைகள் மீது ஈடுபாடு கொண்டார். கள ஆய்வின் நுணுக்கங்களைக் கற்றார்.
ஸ்டேட்ஸ்மென் ஆங்கில இதழில் “Country Notebook" என்ற தலைப்பில் இயற்கை குறித்து, கானுயிர்கள், பறவைஅக்ள், விலங்குகள் குறித்து கட்டுரைகளை நாற்பத்தியாறு வருடங்கள் தொடர்ந்து எழுதினார். ஆங்கிலத்தில் பல சுற்றுசூழல் நூல்களை எழுதினார். அயல்நாட்டின மரங்கள் நம் நாட்டில் வளர்க்கப்படுவதை எதிர்த்தார். அமெரிக்கக்கண்டத்தின் இறக்குமதியான டபேபிவியா(Tabebuia) மரம் இந்தியாவில் வளர்வதை எதிர்த்தார். ”ஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்குட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப்பரவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படைகளையுமே சார்ந்ததாக இருக்க வேண்டும்” என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
பத்திரிக்கைகளுக்கு ஓவியம், புகைப்படங்கள் அனுப்பினார். கானுயிர்கள் குறித்தும், பறவைகள், அவற்றின் வாழ்க்கைச் சூழல்கள் குறித்து தொடர்ந்து இதழ்களில் எழுதி வந்தார். பத்திரிக்கைகளில் கதைகள் கட்டுரைகள் எழுதினார். கதிரேசன் செட்டியாரின் காதல் என்ற நாவலை எழுதினார்.
இவரது கட்டுரைத்தொகுப்பு தியோடர் பாசுகரனின் தொகுப்பில் வெளிவந்தது. 'Z' என்ற புனைப்பெயரில் தி இந்து நாளிதழில் எழுதி வந்தார். இவர் தன் பேத்தி ஆஷா ஹரிகிருஷ்ணனுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு புக் ஆஃப் பீஸ்ட்ஸ் (Books of Beast) என்ற தலைப்பில் வெளியாகியது.
சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில் இவர் எழுதிய பறவைகள் பற்றிய கட்டுரைகளை பறவைகளும் வேடந்தாங்கலும் என்ற பெயரில் பெருமாள்முருகனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தது.
விருதுகள்
- இந்திய அரசு ”பத்ம ஸ்ரீ” விருது வழங்கியது.
மறைவு
மா. கிருஷ்ணன் தனது எண்பத்தி நான்காவது வயதில் பிப்ரவரி 18, 1996-ல் காலமானார்.
நூல்கள் பட்டியல்
- கதிரேசன் செட்டியாரின் காதல் (நாவல்)
- My Book of India Wildlife
- Jungle and Backyard
- India's Wildlife night and days
- Books of Beast
- பறவைகளும் வேடந்தாங்களும்
- மழைக்காலமும் குயிலோசையும் (கட்டுரை)
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
- மா. கிருஷ்ணன் நினைவு நிகழ்வு: தி இந்து நாளிதழ்
- மா. கிருஷ்ணனின் உலகங்கள்: ராமச்சந்திர குஹா: தமிழில் நம்பி கிருஷ்ணன்: கனலி
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.