தாளப்பாக்கம் அன்னமாசாரியர்
தாளப்பாக்கம் அன்னமாசாரியர்(1424-1502) (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) திருமலை திருவேங்கடமுடையான் கோயிலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், திருவேங்கடவன் மீது பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்ற புகழ்பெற்றவை.
வாழ்க்கைக் குறிப்பு
15ம் நூற்றாண்டில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாள்ளபாக்கம் எனும் கிராமத்தில் நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். அன்னமையா ருக்வேத பாரத்வாஜ கோத்திரத்தில் நாராயணசூரிக்கும், லக்கமாம்பாவிற்கும் மகனாகப் பிறந்தார். இவர் தந்தை உழவுத்தொழில் செய்து வந்ததால் அன்னமையாவும் இளமையில் உழவு செய்துவந்தார்.
தொன்மம்
ஒருசமயம் இவர் தந்தை இவரை அடுத்த ஊர் சென்று அங்கிருந்து வைக்கோற்கட்டுத் தூக்கிவரும்படி ஏவினார். கட்டுத் தூக்க இயலாது இவர் திருமலை திருப்பதிக்கு ஓடிவிட்டார். அங்கு பசி மேலிட்டுத் துன்புற்றபோது, திருமாலின் சத்தியான அலர்மேல் மங்கைத்தாயார் இவருக்குப் பசி நீங்க அன்னமளித்து ஆட்கொண்டார். அன்னையின் அருள் கைவந்தபடியால், வைக்கோல் கட்டுத் தூக்க வலி இல்லாதவர் இப்போது கவிஞரானார். அன்னை மீது ஒரு சதகம் பாடினாராம். பெற்றமனம் பித்தல்லவா? பெற்றோர் இவரைத் தேடிக்கொண்டு இங்கு வந்து கண்டு தம் கிராமத்துக்கே.மீண்டும் அழைத்துச் சென்றார்கள். வீரசைவமரபில் பிறந்த இவர் திருப்பதிக்கு ஓடியது முதல் திருமாலடியவரானார். தினமொரு பாடலாக, இவர் திருமால் மீது பாடிக் கொண்டிருந்தார். இவர் பாடல்களின் அருமையைக் கேள்வியுற்று, அப்பகுதியில் ஆட்சிபுரிந்த சாளுவ நரசிம்மராயன் இவரைப் பெரிதும் போற்றினார். ஆனால் தானும் இவரிடம் பாடல்பெற வேண்டுமென்ற ஆர்வத்தில் இவரைப் பாடுமாறு வேண்டினார். திருமால் மோகமே தலைக்கேறிய இவர் பாட மறுத்துவிட்டார். அதிகாரச் செருக்கு முற்றிய சாளுவன் இவருக்கு விலங்கிட்டுச் சிறையிலிட்டான். விலங்குகள் தாமே தெறித்து விழுந்தன. இவர் பெருமையை யுணர்ந்து அவன் பணிந்தான். இவர் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். அதுபற்றி இவர் தினமொரு பாடலாக 32 ஆயிரம் பாடல் பாடினார் என்று சொல்வார்கள். இது பெரிதும் மிகைப் படுத்திய கணக்கு. அதிகமான பாடல்கள் பாடினார் என்பதில் மறுப்பு இருக்கமுடியாது. இவர் பாடியவை 12 ஆயிரம் பாடல்கள். இவர் திருமலையில் வாழ்ந்த காலத்து அங்குப் புரந்தரதாசர் இவரை வந்து சந்தித்தார் என்பது மற்றொரு புனைகதை. தாசர் காலம் 1484 - 1564 அவருடைய மனைவிக்கு இறைவன் ஏழைப் பிராமணனாக வந்து அருள்புரிந்த சம்பவம் நடந்தபோது இவருக்கு வயது 35 - 40க்கு மேலிருக்கும். சுமார் 1520. அன்னமாசாரியா் காலமாகி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இக்கதையும் போலியே, ௮பிமானத்தால் எழுந்த கற்பனை.
இசை வாழ்க்கை
அன்னமையா செய்த இசைநூல்கள் சிருங்கார சங்கீர்த்தனம், அத்யாத்மிக சங்கீர்த்தனம், சங்கீர்த்தன லட்சணம் என்பன. இவர் செய்த வேறு தெலுங்கு நூல்கள் - 12 சதக நூல்கள், சிருங்கார மஞ்சரி, இரண்டடி. இராமாயணம், வேங்கடாசல மாகாத்மியம் என்பன. இவருடைய புதல்வரும் பின்வந்தோரும் இவருடைய பாடற்பரம்பரையை வளர்த்தனர்.
இராசராசமன்னன் தேவாரப் பாடல்களையெல்லாம் செப்பேடுகளில் எழுதிவைக்கச் செய்தான் என்பது வரலாறு. இதை அன்னமையா நன்குணர்ந்தவர். ஆதலால் அவர் தம் பாடல்கள் ஓலையில் எழுதி வைக்கப்பெற்றால் ஓலைகள் காலப்போக்கில் அழிந்துவிடும் என்று நன்கு சிந்தித்து, செப்பேடுகளில் எழுதி வைக்கச் செய்தார் என்று சொல்வர். 1503இல் இறந்த அவருடைய பாடல்கள் 400 ஆண்டுகள் கழித்து மெல்ல வெளிவருகின்றன. மற்றொரு நிலையும் இங்குக் கவனிக்கத்தக்கது. அன்னமையா இசைப்பாடல்கள் பாடினார். அவர் பிறந்தது, இன்றளவும் மிக்க வசதிக் குறைவான கடப்பை தில்லாவில். அங்கிருந்து ஓடிப்போய் சரண்புகுந்தது திருவேங்கடத்துத் திருமாலிடத்து. அவர் பாடல்கள் பாடியது தலங்கள்தோறும் அல்ல. ஆகவே பாடல்கள் ஊரெங்கும் தேவாரங்கள்போலப் பரவவில்லை. எழுதிவைத்த இடமும் திருவேங்கடம், திருப்பதி வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தில். தேவாரப் பாசுரங்கள் நடராசர் ஆலயத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது போல. ஆனால் அன்னமையாவின் பாடல்கள் பலர் நினைப்பதுபோல சீர்த்தனங்களல்ல, பல்லவி அனுபல்லவி சரணம் கொண்டவையல்ல, யாவும் திருவேங்கடநாதன் புகழே, அவன் பஜனையே, யாவும் நாம சங்கீர்த்தனப் பாடல்களே. இதை நன்கு மனத்தில் கொள்ளவேண்டும். தியாகராச சுவாமிகள் வாழ்ந்த இடம் நெடுந்தொலைவிலுள்ள தஞ்சாவூர் மாவட்டம்; காவேரிக் கரை; திருவையாறு. அக்காலம் போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. கடப்பை என்ற பெயரைக்கூட. திருவையாற்றுக்காரர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். தியாகராசர் காலம் 1767 - 1847 என்பது அனைவரும் நன்கறிந்தது. இவர் தம் வாழ்க்கையில் ஒருசமயம் திருப்பதி சென்று திருவேங்கடவனைத் தரிசித்தார் என்று சொல்வதுண்டு. பக்தி மேலிட்டால் இது நடந்திருக்கக் கூடியதே. திருப்பதி போவதற்குள். இவர் எண்ணற்ற இர்த்தனப் பாடல்களை மேகம்போல் பொழிந்திருக்கிறார். இத்தன்மையுடைய சுவாமிகள் சிலர் கருதுவதுபோல, அன்னமையாவிடம்தான் சங்கதம் கற்றார் என்றால் கேட்டுச் சிரிக்க வேண்டியதுதான்.
அக்காலத்தில் அன்னமையாவின் பெயரைக்கூட எவரேனும் கேட்டிருந்தார் என்று எங்கும் வரலாறு இல்லை. ஆந்திர நாட்டிலேயே அவருடைய பெயர் அன்று வெளிப்பட்டதில்லை. எவருக்கும் தெரிந்ததுமில்லை. அன்னமையா சிறந்த பக்திமான். சிறந்த தெலுங்குமொழி இலக்கிய கர்த்தா என்று சொல்வதனால் எந்தக் குறைவும் இல்லை. இதனால் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கருத்து; அவருக்கும் 300 ஆண்டுக்காலம் பிற்பட்டு, பலநூறு மைல்களுக்கப்பால் தமிழ்மொழி பேசுகின்ற வேற்று நாட்டினர் மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த தியாகராச சுவாமிகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதாகும். இவருடைய சங்கீதத்துக்கு அவருடைய பாடல்கள் எந்தவிதத்திலும் தூண்டுகோலாகவோ வழிகாட்டியாகவோ அமையவில்லை.
அன்னமையாவின் பாடல்கள் நெடுங்காலம் வெளியே தெரியவில்லை. சங்கீதத்தின் பிறப்பகமான காவேரிக்கரையில் தோன்றி வாழ்ந்தார் தியாகராசர். இவருடைய இராம பக்திக் சர்த்தனங்கள் இவர் பாடினவுடனேயே காவேரிக்கரையில் மட்டுமல்லாமல் இவர் மாணாக்கர் மூலம் நாட்டின் பல பாகங்களில் மிக்க பிரசித்தி அடைந்தன. எங்கு பார்த்தாலும் கீர்த்தனை பஜனைக்கூடங்கள் தோன்றின. சுவாமிகளையும் அன்னமையாவையும் ஒப்பிடலாகாது. சேர்த்துப் பேசுவதும் பொருந்தாது. சுவாமிகளின் பாடல்கள் காவேரிக்கரைச் சங்தேம், அவர் காலம் முதலே. ஆனால் அன்னமையாவின் பாடல்கள், வெகுகாலம் பிற்பட்டுத்தான், இந்த இருபதாம் நூற்றாண்டில் சங்கத வடிவம் பெறுகின்றன. இப்போதுதான் இவை வெளிப்படுகின்றன என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். அளவற்ற செல்வம் படைத்த திருவேங்கடநாதன் தேவஸ்தானத்தார் இப்போதுதான் அப்பாடல்களை இசையாக்கி வெளியிடும் முயற்சியை மேற்கொள்ளுகிறார்கள். 1847இல் தியாகராச சுவாமிகள் முத்திபெற்ற பிறகே அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டில் இசையோடு பாடப்பெற்று வருகின்றன. அவருடைய பாடலில் அடங்கிய இசை தமிழிசை, தமிழ் மக்களுடைய பரம்பரைச் சொத்து. அவர் பாடிய இசை தமிழிசை; மொழி தெலுங்கு மொழி. அவர் வீட்டில் தெலுங்குமொழி பேசிய காரணத்தால் அவர் தெலுங்கிலேயே பாடினார்.
பக்தி காலம்
இவர் செய்த பாடல்களெல்லாம் உடன்காலத்தில் எந்தப் பிரசித்தியும் அடையவில்லை. அரசியல் நிலைமை இதற்கு முக்கியக் காரணம். அக்காலத்தில் தெலுங்கு கன்னடப் பிரதேசங்களில் முகம்மதியப் படைகளால் கொலை கொள்ளை மதமாற்றம் போன்ற செயல்கள் மிகவும் கொடுமையாய் நடந்து கொண்டிருந்தன. எங்குப் பார்த்தாலும் நிலையில்லாத வாழ்க்கை, பெருங்குழப்பம், திகில் குடிகொண்டிருந்தது. இவற்றால் கோயிலுக்கும் கோயில் வழிபாட்டுக்கும் அழிவு ஏற்பட்டிருந்தது. அன்னமையர் பிறந்த காலநிலை இதுவாகும். திருப்பதி ஓடியவருக்கு அங்கு ஏற்பட்ட தெய்வ அருளாலும் பக்தி முதிர்ச்சியாலும் அவர் உள்ளுணர்வில் தம் காலநிலையை மாற்றவேண்டும் என்ற உணர்வு எழுந்தது. அனாதிகாலமாக மக்களிடையே குடிகொண்டிருந்த பக்தியுணர்வு நசுக்கி ஒடுக்கப் பட்டிருந்தது; இப்போது இவரால் திடீரென்று ஆந்திரநாட்டில் இப்பக்தியுணர்வு கிளர்ந்தெழுந்தது என்று சொல்வது உண்மையாகும். ௮க்காலம் திருப்பதி தமிழ்நாட்டுத் தலமாகவே இருந்தது. ஒப்பற்ற தமிழருடைய பக்திவெள்ளம் அங்கு மலையெல்லாம் பாய்ந்து நாட்டிலும் கரைபுரண்டு பாயவே, அவ்வெள்ளத்தில் அன்னமையா நன்கு அமிழ்ந்தார். தம்மையாட்கொண்ட தமிழ்நாட்டுப் பக்தி வெள்ளத்தைத் தமது தெலுங்கு நாட்டிலும் பாய்ச்ச அவர் உறுதி பூண்டார். முகம்மதிய கொடுமை ஆந்திரநாட்டிலும் கன்னடநாட்டிலும் இருந்த அளவு தமிழ்நாட்டில் இல்லை. காரணம் கொடுமைக்குள்ளும் இங்கு ஆட்சிபுரிந்த ஆழ்வார் நாயன்மார் பாசுரங்கள். இவைகளே அன்னமையாவை ஒரு புத்துணர்ச்சியோடு அவருடைய தாய்மொழியான தெலுங்குமொழியில் மக்களுடைய மேம்பாடு கருதிப் பாடல்களாகப் பாடச்செய்தன. நாயன்மார் பாடல்கள் பல்லாயிரக் கணக்கில் இருந்ததற்கேற்ப இவரும் பல்லாயிரங்களாய்ப் பாடினார் என்பதும் ஒரு புதிய புனைகதை என்பதில் சந்தேகமில்லை. உணர்வு மிகுதியால் அவர் பாடல்கள் பாடினார். ஆழ்வார் நாயன்மார் காலநிலை வேறு. அக்காலம் கொடியதான முகம்மதியர் காலம் இல்லை. சம்பந்தர் பாடியதை எல்லா மக்களும் பாடினார்கள். அன்னமையா செய்ததை அவ்வாறு பிரபலமாக எல்லா மக்களும் பாட வழியில்லை. அதனால் அவர் காலநிலையை மனத்தில் கொண்டு, “என் பாடல்களை யாரும் பாடிப் பிரசாரம் செய்யாவிட்டால் போகட்டும். பாடும்நிலை பின்னால் எப்போதாவது வருகின்ற காலத்தில் வரட்டும் என்றார்.
விவாதம்
அன்னமையா பாடி வைத்தவை கருநாடக சங்கீதத்தின் ஆதிக் கீர்த்தனங்கள் என்று பெயர் சூட்டுவது பிழையாகும். கேட்பாரற்றுக் கிடந்த அந்த நாம சங்கீர்த்தனங்கள் மொழியுணர்வும் இசைவுணர்வும் மேலோங்கியுள்ள இந்தக் காலத்தில் வெளிவருகின்றன. அவை நம் சகோதரமொழியான தெலுங்குமொழிக்கு அரியபொக்கிஷம் என்ற முறையில் அவற்றை நாம் மனப்பூர்வமாய் வரவேற்கிறோம். அவை கீர்த்தனங்கள் அல்ல என்று அறிந்தோர் எழுதியிருக்கிறார்கள்.
தமிழ் இசையில் இடம்
புரந்தரதாசர் அன்னமையாவைச் சந்தித்தார் என்ற கதையும் புனைந்துரையே. இருவரையுமே தமிழ்நாட்டுக்குத் தெரியாது. தியாகராசருக்குப் பின் ஏற்பட்ட பிரசித்திதான் இருவருக்கும். இருவரும் தமிழ்நாட்டில் சங்கீதத்தில் செல்வாக்குப் பெற்றார்கள் என்றால் அதுவெல்லாம் நூறாண்டுகளுக்குள்ளேதான். இருவருடைய நாம சங்கீர்த்தனங்களைத் தமிழ்நாட்டு வித்துவான்௧ள் இசையாக்கிக் கொண்டார்கள். இவ்விசைக்கும் தியாகராசர் இசையான 'தமிழிசை' என்னும் 'கருநாடக இசைக்கும்' சம்பந்தமே இல்லை.
சிறப்புகள்
மறைவு
நூல் பட்டியல்
இசைநூல்கள்
- சிருங்கார சங்கீர்த்தனம்
- அத்யாத்மிக சங்கீர்த்தனம்
- சங்கீர்த்தன லட்சணம்
தெலுங்கு நூல்கள்
- 12 சதக நூல்கள்
- சிருங்கார மஞ்சரி
- இரண்டடி இராமாயணம்
- வேங்கடாசல மாகாத்மியம்
உசாத்துணை
- தமிழ் இசை இலக்கிய வரலாறு (தொகுதி - 1) - அசிரியர் மு. அருணாசலம்: பதிப்பாசிரியர் உல. பாலசுப்பிரமணியன் - அக்டோபர் 2009.