ஊசல் (சிற்றிலக்கியம்)
ஊசல் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பெண்கள் ஆடும் ஊசல்(ஊஞ்சல்) விளையாட்டில் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடுவது ஊசல் இலக்கியம் எனப்படும்.
சிற்றிலக்கியங்களில் ஊசல்
பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் ஊசல் பருவம் என 10 பாடல்கள் இடம்பெறும்.[1]
சங்கப்பாடல்களில் ஊசல்
சங்கப்பாடல்களில் ஊசல் குறித்து பல செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
- செயலை[2] [3], ஆல்[4] ஞாழல்[5] தாழை[6] பணை[7] [8] [9], வேங்கை[10] முதலான மரங்களில் ஊசல் கட்டி விளையாடியது பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
- தினைப்புனம் காக்கும் மகளிர் பரண்மீது ஊசல் கட்டி விளையாடியது[11].
- தாழைநார்க் கயிற்றாலும்[12] பனைநார்க் கயிற்றாலும்[13] ஊசல் கட்டி ஆடியிருக்கிறார்கள்.
- ஊசலாடுதல் ஊசல் தூங்குதல் எனப்பட்டது. விளையாட்டுத் தோழியர் பலர் சேர்ந்து ஆட்டிவிடுவது பற்றியும்[13] தானே தனியே உந்தி ஆடியது பற்றியும்[14] காதலன் ஆட்டிவிட்டு ஆடியது பற்றியும்[14] குறிப்புகள் உள்ளன.
- பனைமரத்து ஊசலில் பலர் ஒன்றாக அமர்ந்து ஆடியது பற்றியும்[15] குறிப்புகள் உள்ளன.
- காதலியின் முன்புறம் நின்று காதலன் ஆட்டிவிட்டது பற்றியும் காதலி பொய்யாகக் காதலன்மீது விழுவது பற்றியும் [14] குறிப்புகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தில் ஊசல்
சிலப்பதிகாரத்தில் ஊசல்வரிப் பாடல்கள் மூன்று உள்ளன.
அவற்றில் ஒவ்வொன்றிரும் ஐந்து அடிகள் உள்ளன.
முதல் 4 அடிகளை ஒருத்தியும், ஐந்தாவது அடியை மற்றொருத்தியும் பாடுவது போல அமைந்தவை.
23. வடங்கொள் மணியூசன் மேலிரீஇ ஐயை
யுடங்கொருவர் கைநிமிர்ந்தாங் கொற்றைமே லூக்கக்
கடம்புமுதல் தடிந்த காவலனைப் பாடிக்
குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ வூசல்
கொடுவிற் பொறிபாடி ஆடாமோ வூசல்
24. ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்
கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்
25. வன்சொல் யவனர் வளநாடு பெருங்கல்
தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான்
மன்பதைகாக் குங்கோமான் மன்னன் றிறம்பாடி
மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல்
விறல்விற் பொறிபாடி ஆடாமோ ஊசல்
- சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை
திருப்பொன்னூசல்
மாணிக்கவாசகர் திருப்பொன்னூசல் என்னும் பதிகம் பாடியிருக்கிறார். அதன் முதல் பாடல்:
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.
இதர இணைப்புகள்
- பாட்டியல்
- சிற்றிலக்கியங்கள்
அடிக்குறிப்புகள்
- ↑ புள்ளொலி யெழக்குடி புகுந்தசுந் தரவல்லி பொன்னூச லாடியருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி பொன்னூச லாடியருளே. - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஊசல்பருவம் பாடல் 1
- ↑ அம் தளிர்ச் செயலைத் தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று ஊசல் (அகம் 38)
- ↑ ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், (அகம் 68)
- ↑ அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, வளையுடை முன்கை அளைஇ, கிளைய பயில் இரும் பிணையல் பசுங்காழ்க் கோவை அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, (அகம் 385)
- ↑ ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, (அகம் 20)
- ↑ கலித்தொகை தட மலர்த் தண் தாழை வீழ் ஊசல் தூங்கப் பெறின் (131)
- ↑ பணை என்னும் சொல் மூங்கில், அரசமரம் ஆகியவற்றைக் குறிக்கும்
- ↑ இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், ஊர்ந்து இழிகயிற்றின், செலவர வருந்தி, - அகம் 372
- ↑ இரு பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்-பெரிய கிளையில் கட்டப்பெற்ற பலரும் ஆடும் ஊசலினது, ஊர்ந்து இழி கயிற்றில் செலவர வருந்தி - ஏறியும் இறங்கியும் ஆடும் கயிற்றினைப் போன்று செல்கையானும் வருகையானும் வருந்தி, - பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை - அகம் 372
- ↑ பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி, கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி, கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ? - நற்றுணை 368
- ↑ எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவின் அன்ன, அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? - அகம் 368
- ↑ ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, கொண்டல் இடு மணல் குரவை முனையின் வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி - அகம் 20
- ↑ 13.0 13.1 பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள், அழுதனள் பெயரும் அம் சில் ஓதி, நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள் ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா நயன் இல் மாக்களொடு கெழீஇ, பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே! - நற்றிணை 90
- ↑ 14.0 14.1 14.2 நறுநுதால்! ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல், ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை, ‘ஐய! சிறிது என்னை ஊக்கி’எனக் கூற, தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து, ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; - கலித்தொகை 37
- ↑ இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் - அகம் 372
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.