under review

சி.சிவஞானசுந்தரம்

From Tamil Wiki
Revision as of 20:56, 20 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
சிவஞானசுந்தரம்
சிவஞானசுந்தரம் நினைவு
சிரித்திரன் சுந்தர்
சிரித்திரன் சுந்தர் இறுதிக்காலம். கோகிலம் சுந்தர் அருகில்.

சி.சிவஞானசுந்தரம் (மார்ச் 3 ,1924 - மார்ச் 3 , 1996) சிரித்திரன் சுந்தர். சிரித்திரன் என்னும் கேலிச்சித்திர இதழை நடத்தியவர். கேலிச்சித்திரக் கலைஞர். சிரித்திரன் இலங்கையின் புகழ்பெற்ற சமூகவிமர்சன இதழாகவும் அரசியல் இதழாகவும் வெளிவந்தது

பிறப்பு, கல்வி

யாழ்ப்பாணம், கரவெட்டியில், இலங்கையின் முதலாவது அஞ்சல்தலைவர் வி. கே. சிற்றம்பலத்தின் மகனாக மார்ச் 3 ,1924-ல் பிறந்தார். இளமையில் ஓவியக்கலை தேர்ச்சி கொண்டிருந்த சிவஞானசுந்தரத்தை தந்தை கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார். அங்கே கேலிச்சித்திரக்கலையில் ஈடுபாடு ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சித்திரக்கலை பயின்றார். இந்தியாவில் இருந்தபோது ராஜாராம் என்பவரிடம் உருவ ஓவிய வரைபிலும் சார்க்கோல் வரைபிலும் பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

சிவஞானசுந்தரத்தின் மனைவி கோகிலம். அவர்களின் மகள் வாணி சுந்தர் புலம்பெயர்ந்து வசிக்கிறார்.

1987-ல் இந்திய அமைதிப்படையால் சிரித்திரன் அலுவலகமும் அச்சகமும் நூலகமும் எரியூட்டப்பட்டன. தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயரவும் நேர்ந்தது. அந்த தாக்குதல்களால் சிவஞானசுந்தரம் பக்கவாதத் தாக்குதலுக்கு உள்ளானார். வலது கை செயலற்ற நிலையில் இடது கையால் வரைந்தார். மறைவது வரை சிரித்திரன் இதழை வெளியிட்டார்.

ஓவிய வாழ்க்கை

சிவஞானசுந்தரத்தின் மானசீகக் குரு தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஓவியர் மாலி. மாலி – கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் இலங்கை வந்த காலத்தில் பத்துவயதான சிவஞானசுந்தரம் பருத்தித்துறையில் சித்திவிநாயகர் பாடசாலையில் நடந்த கல்கி – மாலி வரவேற்புக்கூட்டத்தில்தான் மாலி கையில் ஒரு வெண்கட்டியை எடுத்துக்கொண்டு மேடையிலிருந்த கரும்பலகையில் அன்றைய அரசியல் தலைவர்களின் உருவங்களை கேலிச்சித்திரமாக வரைந்ததைக் கண்டு கேலிச்சித்திரக் கலையில் ஆர்வம் கொண்டார்.

எஸ்.ஆர்.கனகசபையின் சித்திரங்கள் மேல் ஈடுபாடு கொண்ட சிவஞான சுந்தரம் பம்பாயில் ஜெ.ஜெ.ஸ்கூல் ஆப் ஆட்ஸ் ல் பயின்றபோது இதழாளர் ஆர்.கே.கரஞ்சியாவுடன் நட்பு ஏற்பட்டது. கரஞ்சியா ஆசிரியராக இருந்த பிளிட்ஸ் ,கொஞ்ச் இதழிகளில் அவரது கேலிச் சித்திரங்கள் வெளிவந்தன. அதன்மூலம் பிரபல கேலிச் சித்திரக் கலைஞர்களான போல் தாக்கரே, ஆர். கே. லக்ஷ்மணன் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டது

காலம் சிரித்திரன் சிறப்பிதழ்

இலங்கை திரும்பிய சிவஞானசுந்தரம் அரசாங்க கட்டட துறையில் படவரைஞராகப் பணிபுரிந்து வந்தபோது ‘தினகரன்’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்த க. கைலாசபதியின் அழைப்பை ஏற்று அதில் சுந்தர் என்ற பெயரில் ‘சவாரித்தம்பர்’ தொடரை வரையத் தொடங்கினார். கைலாசபதி தினகரனிலிருந்து விலகியதும் சுந்தர் வீரகேசரியில் சேர்ந்தார். மித்திரன் நாளிதழ், சமசமாஜக்கட்சியின் சமசமாஜிஸ்ட் என்ற ஆங்கில இதழ் ஆகியவற்றிலும் வரைந்தார்.தினகரன் வார மஞ்சரியில் ‘மைனர் மச்சான்’, ‘சித்திர கானம்’ ஆகிய கேலிச் சித்திரத் தொடர்களையும் சுந்தர் வரைந்தார்.

சிரித்திரன்

தன் கேலிச்சித்திரங்களை வெளியிடுவதற்காகவே சிவஞானசுந்தரம் சிரித்திரன் இதழை 1963-ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் தொடங்கினார். 1971 முதல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகத் தொடங்கியது. சிரித்திரன் ஓரிரு இதழ்கள் தவறினாலும் சிவஞானசுந்தரம் மறைவது வரை தொடர்ந்து வெளிவந்தது ( பார்க்க சிரித்திரன்)

மறைவு

1995-ல் போர் இடப்பெயர்வின்போது சிவஞானசுந்தரம் சிரித்திரன் இதழை நிறுத்திவிட்டு தன் சொந்த ஊரான கரவெட்டிக்கு சென்றார். அங்கே மார்ச் 3 , 1996-ல் மறைந்தார்

நினைவுகள்

சிரித்திரன் சுந்தரால் பெரிதும் கவரப்பட்ட திக்கவயல் தர்மகுலசிங்கம் அவரைப்போலவே சுவைத்திரள் என்னும் நகைச்சுவை இதழை நடத்தினார். சிரித்திரன் சுந்தர் பற்றி மலரும் தொகைநூலும் வெளியிட்டிருக்கிறார்.

  • சிந்தனைப் போராளி சிரித்திரன் சிவஞானசுந்தரம் - திக்கவயல் தர்மகுலசிங்கம்[1]
  • காலம் சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்[2]
  • சுவைத்திரள் இதழ் சிரித்திரன் சிறப்பிதழ்

நூல்கள்

  • கார்ட்டூன் உலகில் நான்
  • சிரித்திரன் சித்திரக் கொத்து[3]
  • மகுடி பதில்கள்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page