under review

மதுரை மீனாட்சியம்மை குறம்

From Tamil Wiki
Revision as of 16:05, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரர் இயற்றிய குறம் என்னும் சிற்றிலக்கியம். சொக்கலிங்கப் பெருமான்மீது காதல் கொண்ட மீனாட்சியம்மைக்கு குறத்தி குறி சொன்னதைப் பாடும் நூல்.

ஆசிரியர்

மதுரை மீனாட்சியம்மை குறத்தை இயற்றியவர் குமரகுருபரர். குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதி நெறி விளக்கம், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை போன்ற நூல்களை இயற்றினார். காசி மடத்தை நிறுவினார்.

நூல் அமைப்பு

மதுரை மீனாட்சியம்மை குறம் காப்பு, வாழ்த்துச் செய்யுள்களுடன் சிந்து, கொச்சகக் கலிப்பா, அறுசீர் கழில் நெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க் கழில் நெடிலடி ஆசிரிய விருத்தம் போன்ற பாவகைகளால் ஆன ஐம்பது செய்யுள்களைக் கொண்டது.

சொக்கேசர் மதுரையில் வீதி உலா வரும் போது அவரைக் கண்டு காதல் வயப்பட்ட மீனாட்சியம்மைக்கு பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக இந்நூல்அமைந்துள்ளது. குறத்தி மலை வளம் கூறி, அங்கயற்கண்ணியை வாழ்த்தி, தான் குறி சொல்லும் திறத்தையும் அது பலிக்கும் விதத்தையும் எடுத்துக் கூறி மீனாட்சியம்மையின் எண்ணம் ஈடேறும் எனக் குறி சொல்கிறாள்.

நூலின் மூலம் அறியவரும் குறவர்களின் வாழ்வியல்

குறவர்கள் செழித்த கொடியிலிருந்து வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்து உணவாக உட்கொள்கின்றனர்.மலையின்கண் உள்ள குறிஞ்சி மலரை முல்லைக் கொடியில் வைத்துத் தொடுத்தும்,பசுந்தழையையும் மரவுரியையும் ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர். விருந்தினருக்கு தேனும்,தினை மாவும் வழங்கி விருந்தோம்புகின்றனர். முருகன் குறக்குல வள்ளியை மணந்ததால் முருகனின் தந்தையான சிவபெருமானையும் குறவனாகக் கூறும் இயல்பினைக் குறத்தினில் காணமுடிகின்றது. குறி சொல்லத் தொடங்கும் முன் குறத்தி ,தரையை மெழுகிக் கோலமிட்டு,பிள்ளையார் பிடித்து வைத்து,அதற்கு நிறைகுடம் வைத்து, நிறைநாழியால் நெல்லளந்து வைத்து,விளக்கேற்றி வைத்து,பலவகையான பொருட்களை வைத்து வழிபட்டுகிறாள்.

பாடல் நடை

சிந்து

மங்கைக் குங்குமக் கொங்கைப் பங்கயச்
செங்கை அஙகயற்கண்ணினாய் மறை பண்ணினாள்
பங்கனைக் கழல் அங்கனைச் சொக்க
லிங்கனைக் கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே

கொச்சகக் கலிப்பா

கடல் அலைக்கும் வெம்மலையாம் கைம்மலையும் ஆயிரம் வாய்ப்
படம் அலைக்கும் அரவு அரசும் பரித்து அருளும் பார்மடந்தை
குடம் உலைக்கும் தடமுலையாம் குலமகள் இரண்டு எனவும்
வடமலைக்கும் தென்பொதியும் மலயமலை என்மலையே

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சிங்கமும் வெங்களிறும் உடன்விளையாடும் ஒருபால்,
சினப்புலியும் மடப்பிணையும் திளைத்திடும் அங்கு ஒருபால்,
வெங்கரடி மரயினொடும் விளையாடும் ஒருபால்,
விட அரவும் மடமயிலும் விருந்து அயரும் ஒருபால்,
அங்கணமர் நிலம் கவிக்கும் வெண்கவிகை நிழல்கீழ்
அம்பொன் முடிசூடும் எங்கள் அபிடேகவல்லி
செங்கமலப் பதம் பரவும் கும்பமுனி பயிலும்
தென்பொதிய மலை காண் மற்று எங்கள் மலை அம்மே

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 12:55:31 IST