மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை
மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை (25-மே-1866 -6 ஜூன் 1947) பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்த தமிழறிஞர். நவீன இலக்கிய ஆர்வம்கொண்டவர். மருத்துவன் மகள், தப்பிலி என்னும் இரு நாவல்களை எழுதியவர். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையுடன் இணைந்து பணியாற்றியவர். ஆங்கிலத்தில் பழந்தமிழ் இலக்கியங்களை மொழியாக்கம் செய்தும், ஆய்வுக்கட்டுரைகளை எழுதியும் அறிமுகம் செய்தவர்.
பிறப்பு,கல்வி
இவரது பெற்றோர் திரு. சிவசுப்பிரமணியப் பிள்ளை, திருமதி வள்ளியம்மை. நெல்லையிலுள்ள முனீர்ப்பள்ளம் அல்லது முந்நீர்ப்பள்ளம் என்னும் சிற்றூரில் 25-மே-1866 ல் பிறந்தார். திண்ணைப் பள்ளியில், செல்லப் பெருமாள் என்ற ஆசிரியரிடம் கல்வி பயின்றார். மேலப்பாளையம் பள்ளிக் கூடத்தில் சுந்தரம்பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கணமும், திருக்குறளும் பழைய முறைப்படி கற்றார். தருவையிலுள்ள பள்ளியில் நடுநிலை கல்வி பயின்றார். இப்போது ஹிந்து கல்லூரி என்றழைக்கப்படும், ஆங்கிலத் தமிழ்ப் பள்ளியிலே படித்தார்.இரட்டைத் தேர்வு பெற்று, மெட்ரிகுலேஷன் படிப்பும் முடித்தார். மேலே படிக்க பொருள்வசதி இல்லாமல் பரமக்குடியிலுள்ள முன்சீஃப் கோர்ட்டில் எழுத்தாளராகப் பணியாற்றத்தொடங்கினார். ஹிந்து கல்லூரி பேராசிரியர் விங்க்ளேர் உதவிசெய்தமையால் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து எஃப்.ஏ. தேர்வில் வெற்றிபெற்றார். கல்லுரியில் நடந்த மில்லர் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. முதல் வகுப்பில் சேர்ந்தார். டாக்டர் மில்லரே இவர் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடங்கள் எடுத்தவர். பின்னர் சட்டம் படித்தாலும் தேர்வெழுதவில்லை.
தனிவாழ்க்கை
பூர்ணலிங்கம்பிள்ளை தாயம்மாளை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. எழுத்தராக நெல்லை மாவட்டக் கலெக்டர் காரியாலயத்தில் பணியாற்றினார்.பாளையம்கோட்டையிலுள்ள இந்து உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்தார். நெல்லை மாவட்டக் கலெக்டர் வேண்டுகோளின்படி எட்டயாபுரம் ஜமீன் இளவரசுக்குக் கல்வி கற்றுத் தந்தார்.சட்டப் படிப்பு முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தார்.டாக்டர் மில்லர் கிறிஸ்தவக்கல்லூரியிலும், உயர் பள்ளியிலும் ஆசிரியப்பணி அளித்தார். 1894 முதல் 1899 வரை அங்கு தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) நண்பரானார். 1900 முதல் 1904 வரை கோயம்புத்தூர் செயிண்ட் மைக்கேல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், 1904 முதல் 1911 வரை திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும், பணி புரிந்தார். 1912 முதல் 1919 வரை சென்னையில் இருந்தபோது சொந்தமாக கெமிசிசு என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அதே காலத்தில் JUSTICE என்ற ஆங்கிலத்தாளுக்குத் துணையாசிரியராகவும் இருந்தார். 1920 முதல் 1922 வரை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், பின்னர் 1926 வரை திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரித் தலைவர் கார்டினர் வேண்டுதலின் பேரில் ஆங்கிலத் தலைமையாசிரியராகவும் பணி புரிந்தார். ஓய்வு பெற்றபின் முந்நீர்ப் பள்ளம் திரும்பினார்.
இலக்கியவாழ்க்கை
மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற்கலைஞர்) தொடர்பால் தமிழாய்வில் ஈடுபட்டார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறள் குறித்து திறனாய்வு நூலும் வெளியிட்டார். மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தார் வரை உள்ள சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை ‘பத்துத் தமிழ் முனிவர்கள்’ என்ற நூலில் விளக்கியுள்ளார். 1904ம் வருடம் “A Primer of Tamil Literature” என்ற புத்தகம்தான் இவர் முதலில் எழுதியது. இதன் மறுபதிப்பு 1929ல் வெளி வந்தபோது அப்புத்தகத்திற்கு “Tamil Literature” எனப் பெயரிடப்பட்டது.
தனித்தமிழ் இயக்கம்
மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை, பரிதிமாற் கலைஞர் தொடர்பால் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக்கொள்கை ஆகியவற்றில் ஈடுபட்டார். தன் தமிழிலக்கிய வரலாற்று நூலில் அப்பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்.திருச்சியில் இருந்து 1923-ல் வெளியான ‘தமிழர்’ இதழில் இவரது தமிழியக்க ஆதரவுக் கட்டுரைகள் வந்தன.இலங்கைப் பெருமன்னன் இராவணன் என்னும் நூலில் ராவணன் திராவிட மன்னன் என நிறுவுகிறார்.
இதழியல்
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது ‘ஞான போதினி’ என்ற அறிவியல் இதழ், ‘ஜஸ்டிஸ்’ எனும் ஆங்கில இதழ், ‘ஆந்திரப் பிரகாசிகா’என்ற தெலுங்கு இதழ் ஆகியவற்றை நடத்தினார்.
மறைவு
81 வயதில் 6 ஜூன் 1947 அன்று முந்நீர்ப்பள்ளத்தில் மறைந்தார்
நூல்கள்
பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலத்தில் முப்பத்திரண்டு நூல்களும், தமிழில் பதினெட்டு நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் எழுதிய பெரும்பாலான நூல்கள் மாணவர்களுக்காக எழுதப்பட்ட பாடநூல்களும் துணைநூல்களும்.
ஆங்கில நூல்கள்
- ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றிய பல்கலைக் கழக வினாக்கள்
- ஷேக்ஸ்பியர் பாடல்கள்
- கோல்ட்ஸ்மித்தின் கதைகள்
- கார்லைல் எழுதிய அபட்டு சாம்சன்
- ஆங்கில இலக்கிய விளக்கத் தொகுப்பு
- ஆங்கிலத்தில் பயிற்சிகள்
- ஆங்கிலத்தில் பேச்சு முறை
- மெட்ரிகுலேஷன் வாசகம்
- மெட்ரிகுலேஷன் முன்வகுப்பு வாசகம்
- ரிப்பன் ஆரம்பம்
- இளைஞர் முதியவர் வாசகங்கள்
- நடுத்தர வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடத் திரட்டு
- இந்திய வரலாறு (இளைஞர்களுக்கு)
- இங்கிலாந்து வரலாறு (முதியவர்களுக்கு
- பி.ஏ.வகுப்பிற்கு சாக்ரடிஸ் பிளேட்டோ வரலாறுகள்
- ஜூலியஸ் சீசர் உரை
- ஒதெல்லோ உரை
- எஃப்.ஏ., பி.ஏ. ஆங்கிலப் பாடப் புத்தகங்களுக்கு விரிவான உரைகள்
- ரோமன் சட்டத் தொகுப்பு
- மேயின் பழங்காலச் சட்டம்
- சட்ட முறைமைகளின் சுருக்கம்
- மேயின் பழங்காலச் சட்டச் சுருக்கம்
- ஒப்பந்தச் சட்டம்
- இன உதவிச் சட்டம்
- திருக்குறள் உரையுடன்
- இலங்கைப் பெருமன்னன் இராவணன்
தமிழ் நூல்கள்
- ஔவை குறள்
- செய்யுள் கோவை
- விவேக விளக்கம்
- இராயர் அப்பாசி கதைகள்
- வாசகத் திரட்டு
- இரு சிறு கதைகள்
- கதையும் கற்பனையும் நீதிக் கதைகள்
- வீரமணி மாலை
- தமிழ்க் கட்டுரைகள்
- பன்னிரு பெண்மணிகள்
- நபி நாயகமும் கவி வாணர்களும்
- ஐரோப்பியப் போர்
- நவராத்திரி விரிவுரைகள்
- சூரபதுமன் வரலாறு
- தமிழரும் தமிழ்ப்புலவர்களும்
நாவல்கள்
- மருத்துவன் மகள்
- தப்பிலி
நாடகம்
- காமாட்சி என்ற நவ நகை நாடகம்