சிவபாக்கியம்
சிவபாக்கியம் (சிவபாக்கியம் குமரவேல்) (ஜூலை 5, 1923 - ஜனவரி 5, 2019) ஈழத்துப் பெண் ஆளுமை, இதழாசிரியர், சமூகசேவையாளர். மலையக மாதர் இயக்கத்தின் முன்னோடியாக கருதப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவபாக்கியம் இலங்கை கலஹாவில் ஜூலை 5, 1923-ல் பழனிசாமி, பூமாலை இணையருக்குப் பிறந்தார். கண்டியில் வசித்தார். தந்தை தொழிற்சங்கவாதி. சிவபாக்கியம் பழனிச்சாமியை மணந்தார்.
இதழியல்
1950-களில் 'பெண்ணுலகு' எனும் மாதர் இதழைத் தனது சொந்த முயற்சியில் ஆரம்பித்தார். ஐந்து வருடங்கள் அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.
சமூகப்பணிகள்
- சிவபாக்கியம் குமாரவேல் மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர். 1944-ல் மலையகப் பெண்களுக்கு ஆறு மணி நேரம் வேலை நேரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
- தீவிர ஷீரடி சாய்பாபா பக்தையான இவர் ஹந்தான பிரதேசத்தில் ஷீரடி பாபா ஆலயத்தை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கம்
நேரு இலங்கை வந்து சென்ற பின்னர் இந்திய வம்சாவழி மக்களின் மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்திய இலங்கை காங்கிரஸின் மாதர் பிரிவு 'இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கம்' என்ற பெயரில் 1941-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவியாக லஷ்மி இராஜரத்தினம் செயற்பட்டார். பெண் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், தைரியத்தையும், ஐக்கியத்தையும், சமத்துவத்தையும் வளர்க்க உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் தலைவியாக பின்னர் சிவபாக்கியம் குமாரவேல் செயற்பட்டார். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருடன் நெருங்கிய நல்லுறவையும் சிவபாக்கியம் மேற்கொண்டார்.
மறைவு
சிவபாக்கியம் ஜனவரி 5, 2019-ல் காலமானார்.
உசாத்துணை
- ஆளுமை:சிவபாக்கியம், குமாரவேல்: noolham
- 1945-ல் வெளியான இலங்கை - இந்திய மாதர் சங்கத்தின் அறிக்கையொன்று: namathumalayaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Mar-2024, 00:04:00 IST